என்னுடைய இரண்டாவது மொழிபெயர்ப்பு நூல். 'ப்ரீ ஹிந்துஸ்தான்' என்கின்ற பத்திரிக்கையின் ஆசிரியரான தாரக்நாத் தாஸ் அவர்கள் இந்திய சுதந்திரத்தினைக் குறித்து தனக்கு எழுதிய கடிதத்திற்கு டால்ஸ்டாய் அவர்கள் எழுதிய பதிற் கடிதமே தான் இந்த 'இந்துவிற்கு ஒரு கடித'மாகும். இச்சம்பவமானது 1908 ஆம் ஆண்டினில் நிகழப்பெற்றது. இந்திய மக்களின் விடுதலையோடு நில்லாமல், ஒட்டுமொத்த உலக மக்களும் எவ்வாறு அடிமைகளாக ஆக்கப்பட்டார்கள் என்பதனையும், அவர்கள் எவ்வாறு உண்மையான சுதந்திரத்தினைப் பெற முடியும் என்பதனையும் மிகவும் தெளிவாக டால்ஸ்டாய் அவர்கள் விளக்கி இருக்கும் இந்த கடிதமானது காந்தியின் கவனத்தை ஈர்த்தது. டால்ஸ்டாயின் நூல்களாலும் கொள்கைகளாலும் ஏற்கனவே கவரப்பட்டிருந்த காந்தியினை, இந்திய நாட்டினைக் குறித்த இந்த கடிதமானது, டால்ஸ்டாய் அவர்களை கடிதங்களின் வாயிலாகத் தொடர்புக்கொள்ளச் செய்தது. அவர்கள் தங்களுக்குள் கடிதங்கள் மூலமாக பரிமாறிக் கொண்ட விடயங்களும் இந்த நூலினில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

கிட்டத்தட்ட நூறு ஆண்டுகள் பழைமையான அந்த கடிதத்தினை இங்கே நான் மொழிபெயர்த்து இருப்பதன் காரணம், டால்ஸ்டாய்யைக் குறித்து மக்கள் அதிகம் அறிந்து கொள்ள வேண்டும் என்பதோ அல்லது காந்தியைக் குறித்து மக்கள் மேலும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதோ அல்ல. மாறாக, அந்த கடிதத்தினில் கூறப்பட்டு இருக்கின்ற விடயங்கள் இன்றளவும் உண்மையானவையாக இருந்து கொண்டிருக்கும் ஒரே காரணத்தினால் தான் அந்த கடிதத்தினைக் குறித்து நாம் காண வேண்டி இருக்கின்றது.

இன்றைக்கு நம் நாடு பல்வேறு பிரச்சனைகளைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றது. அர்த்தமில்லாத ஒரு வாழ்வினை மறக்கடிக்கும் வண்ணம் நுகர்வுக் கலாச்சாரம் முதலாளித்துவத்தினால் போற்றி வளர்க்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அமைதியான வாழ்வென்பது மறைந்து இயந்திரமயமான ஒரு வாழ்வானது மனிதர்களை இயந்தரமாக்கிக் கொண்டிருக்கின்றது. அதன் விளைவாக கொலைகள், கொள்ளைகள், தற்கொலைகள் என்று சமூகமே ஒரு நிலையற்றுக் காணப்படுகின்றது.

"உலகிலுள்ள பல்வேறு நம்பிக்கைகளும் செழித்து விளங்குகின்ற பள்ளியாக இருக்கின்ற இந்தியாவில், எப்பொழுது 'நாகரீகம்' என்ற பெயரினில் துப்பாக்கிச் தொழிற்சாலைகளும், ஐரோப்பிய மக்களை அடிமைகளாகச் சுருங்கவும், மனித குடும்பத்தின் அடிப்படை இயல்பாக அமைந்திருக்கும் அனைத்து விதமான அன்பு உணர்ச்சிகளை மங்கவும் வைத்திருக்கின்ற அந்த வெறுக்கத்தக்க  முதலாளித்துவமும் அனுமதிக்கப்படுகின்றதோ அன்று இந்தியா சுதந்திர இந்தியாவாக இருக்காது." என்ற காந்தியின் கூற்றினை இன்றைய சூழ்நிலை மெய்ப்பித்துக் கொண்டு தான் இருக்கின்றது.

சமயங்கள் மனிதர்களுள் பிரிவினை உண்டாக்கி அவனை முட்டாளாக வைத்து இருக்கின்றன என்று கூறி அறிவியல் என்ற ஒன்றினை மனிதனின் விடுதலைக்காக, மனிதன் சிந்திக்க வேண்டும் என்பதற்காக கொண்டு வந்தோம். ஆனால் இன்று அந்த சமயங்களை விட அறிவியலே மனிதனை அதிகமாக அடிமைப்படுத்தி வைத்திருப்பதனை நம்முடைய வணிக வளாகங்களில் கைகளில் புத்தம் புது கைபேசிகளுடன் உலக அக்கறை சிறிதும் அற்று தன்னைப் பற்றி மட்டுமே எண்ணிக் கொண்டிருக்கும் ஒரு தலைமுறையினைக் காணும் பொழுது நாம் அறிந்து கொள்ள முடிகின்றது.

நான் மகிழ்ச்சியாக இருப்பதற்கு மின்சாரம் வேண்டுமா...உடனடியாக திற கூடங்குளம் அணுவுலையை. தண்ணீரின்றி இலட்சக்கணக்கான மக்கள் வாடுகின்றார்களா..கவலையில்லை நமக்கு பல்லாயிரக்கணக்கான கோடிகள் செலவழித்து செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கின்றதா என்று அறிந்து கொள்வதே முக்கியம்...அதுவே முன்னேற்றம். விவசாயிகள் தண்ணீரின்றி கவலைப்படுகின்றார்களா, அது அவர்களது கவலை...நமக்கு நம்முடைய கிரிக்கெட் விளையாட்டிற்கு எந்த பங்கமும் வந்து விடக் கூடாது என்ற சிந்தனைகளைத் தான் நம்முடைய அறிவியலானது இங்கே விதைத்துக் கொண்டிருக்கின்றது.

கண்மூடித்தனமாக அறிவியலைக் குறைக் கூறுவது எனது நோக்கமல்ல. 'சூரியனுக்கு என்ன காப்புரிமையா இருக்கின்றது...சூரியன் எல்லாருக்கும் பொதுவாக இருப்பதனைப் போலவே என்னுடைய கண்டுபிடிப்புகள் மக்கள் அனைவருக்கும் உரித்தானவை' என்று கூறிய அறிவியலானது காலாவதியாகி விட்டதனை சிந்திப்போர் அனைவரும் அறிந்தே தான் இருப்பர். இன்றைக்கு அறிவியல் என்ற ஒன்று அறிவினைக் கொடுத்து மக்களை சிந்திக்க வைப்பது அல்ல, மாறாக பொருட்களைக் கொடுத்து மக்களை பொழுதுபோக்க வைப்பதாகவே பெரிதும் இருக்கின்றது. இத்தகைய அறிவியலைத் தான் டால்ஸ்டாய் அவர்கள் போலி அறிவியல் என்று சாடுகின்றார்.

தன்னுடைய கடிதத்தில் 'ஆங்கிலேயர்கள் தங்களை அடிமைப்படுத்தி இருப்பதாக இந்தியர்கள் குறை கூறும் பொழுது, தங்களுக்கு மத்தியில் வந்து குடியேறிய மது வியாபாரிகள் தங்களை அடிமைப்படுத்தி விட்டதாக குடிகாரர்கள் குறைக் கூறுவதைப் போன்றே தான் இருக்கின்றது. அவர்களிடம் நீங்கள் குடிப்பதை நிறுத்துங்கள் என்றுக் கூறினால், அந்தப் பழக்கத்திற்கு தாங்கள் மிகவும் பழகிவிட்டக் காரணத்தினால் அதில் இருந்து தாங்கள் விலக முடியாது என்றும் தங்களது பலத்தினை தாங்கள் தக்க வைத்துக் கொள்வதற்கு அந்த மதுவானது மிகவும் அவசியம் என்றுமே அவர்கள் கூறுவர்.' என்றே டால்ஸ்டாய் அவர்கள் குறிப்பிட்டு இருக்கின்றார். சற்று நாம் யோசித்துப் பார்த்தோமேயானால் இன்றும் கூட அதே நிலையில் தான் நாம் இருக்கின்றோம் என்பது தெளிவாக நமக்குப் புலப்படும். நம்மை ஏமாற்றிக் கொண்டிருப்போரின் பலத்தினால் அல்ல, நம்முடைய பலவீனத்தினாலேயே தான் நாம் அடிமைகளாக ஏமாந்துக் கொண்டிருக்கின்றோம்.

எவ்வாறு ஒரு காலத்தில் சமயங்களின் பெயரினால் மக்கள் ஏமாற்றப்பட்டு அடிமைகளாக ஆக்கப்பட்டார்களோ, அதனைப் போன்றே தான் இன்று அறிவியலின் பெயரினால் ஏமாற்றப்பட்டு அடிமைகளாக மாற்றப்பட்டு இருக்கின்றார்கள். ஒருவன் தன்னுடைய நலனைப் பற்றி மட்டுமே சிந்தனை செய்கின்ற ஒரு நிலையானது நம்முடைய சமூகத்தினில் இன்று பெருவாரியாக காணப்படுகின்றது. அவ்வாறு தன்னைப் பற்றி மட்டுமே சிந்திப்பது என்பது தவறல்ல என்ற கருத்தும் பெருவாரியாக சமூகத்தினில் காணப்படுகின்றது. இதன் விளைவாகத் தான் கொத்துக் கொத்தாக மக்கள் உலகமெங்கும் கொல்லப்பட்டுக் கொண்டிருந்தாலும் நம்மால் நிம்மதியாக தொலைக்காட்சியினைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருக்க முடிகின்றது.

இன்றைக்கு உலகில் பலர் வாடிக்கொண்டு இருக்கின்றனர் என்றால் அதற்கு காரணம், அவர்களிடம் பணமில்லாததோ அல்லது வலிமை இல்லாததோ அல்லது அறிவில்லாததோ அல்ல. அவர்கள் வாடிக் கொண்டிருப்பதற்கு ஒரே காரணம் உலகில் உள்ள பெருவாரியான மக்களிடம் அன்பு என்ற ஒன்று இல்லாததே ஆகும். இதனையே தான் டால்ஸ்டாய் அவர்களும் தன்னுடைய கடிதத்தினில் குறிப்பிடுகின்றார். இன்று நம்முடைய உலகமானது சந்தித்துக் கொண்டிருக்கும் அனைத்து விதமான இன்னல்களுக்கும் அன்பினையே அவர் தீர்வாகத் தருகின்றார்.

இந்த மெய்யான அன்பானது மனிதர்களிடம் இயல்பாக இருக்கின்ற ஒன்று என்று கூறுகின்ற டால்ஸ்டாய் அவர்கள், அந்த அன்பினை மனிதர்கள் சரியாகப் புரிந்துக் கொள்ள முடியாதபடி போலியான சமய ஆசிரியர்கள் அவர்களை திசை திருப்பி விடுகின்றனர் என்றுமே கூறுகின்றார். 'ஆசை அறுமீன்கள்...ஆசை அறுமீன்கள்' என்று எதற்கும் ஆசைப்படாதீர்கள் என்ற கூறுகின்ற சைவத்தின் பெயரைக் கூறிக் கொண்டே 'அத்தனைக்கும் ஆசைப்படு' என்று கூறுகின்ற மனிதர்கள், டால்ஸ்டாயின் கூற்றினை மெய்ப்பிக்கும் வண்ணம் நம்முடைய சமூகத்தினில் இருப்பதை நாம் கண்டுக் கொண்டு தானே இருக்கின்றோம்.

'உன்னை நீ நேசிப்பதனைப் போல் பிறரையும் நேசி...மனிதர்கள் அனைவரும் சகோதர்கள்...ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தினையும் காட்டு...இறைவனின் முன்னால் தேசங்கள் என்று எதுவும் இல்லை...தேசங்கள் என்பது மனிதர்களாக உருவாக்கிக் கொண்ட பிரிவினைகள்...எனவே தேசங்களுக்கு இடையே வேறுபாடுகளைக் காணாதீர்கள்' என்ற இயேசுவின் கூற்றினை இன்று எந்தொரு கிருத்துவ தேசமும் பின்பற்றுவதில்லை. அதனை கிருத்துவ மதகுருக்களும் கண்டிப்பதில்லை. இதனையும் டால்ஸ்டாய் அவர்கள் மிகவும் வன்மையாக கண்டித்து இருக்கின்றார். கிருத்துவம் என்ற பெயரிலேயே இயேசுவிற்கு எதிரான கருத்துக்களை கிருத்துவ சமயமானது பரப்பிக் கொண்டிருக்கின்றது என்றே அவர் கூறுகின்றார். அதற்கு தக்க ஆதாரங்களையும் அவர் அவருடைய மற்ற நூல்களில் வழங்கி இருக்கின்றார்.

சமயங்களைக் குறித்து அவர் முன்வைக்கின்ற கருத்து இதுதான்...மெய்யான சமயம் அன்பினை மட்டுமே போதிக்கின்றது. அதனை மக்கள் அறிந்துவிடாமல் இருக்கும் வண்ணம் போலியான சமய ஆசிரியர்கள் சமயங்களை சிதைத்து வைத்து இருக்கின்றனர். அதனால் வாழ்வென்றால் என்ன, அதனை எவ்வாறு வாழ வேண்டும் என்று ஒரு மனிதனுக்கு எடுத்துக் கூறி அவனை நல்வழியில் நடக்க வைக்க வேண்டிய சமயங்கள் இன்று மனிதர்களை தவறான வழியில் வழிநடத்திக் கொண்டிருக்கின்றன. இவ்வாறு திரிக்கப்பட்டு இருக்கின்ற ஆன்மீக போதனைகளில் இருந்து மெய்யான ஆன்மீகத்தினை விடுதலை செய்து, அவனுள் இயல்பாகவே வீற்று இருக்கின்ற அன்பினை மனிதனானவன் முழுமையாக உணர்ந்துக் கொள்ளும் வண்ணம் செய்வதே அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வாகும் என்றே அவர் கூறுகின்றார்.

ஒன்று இந்த உலகினில் அன்பினை மட்டுமே பரப்புகின்ற உண்மையான சமயமானது இருக்க முடியும் அல்லது மக்களை பிரித்து வைத்திருக்கும் தேசங்கள் இராணுவங்கள் போன்ற பிரிவுகள் இந்த உலகினில் இருக்க முடியும் மாறாக முற்றிலுமாக முரண்பட்ட அந்த இரண்டும் ஒன்றாக இவ்வுலகில் இருக்க முடியாது...ஒன்று தேசப் பிரிவினையானது மெய்யான சமயத்தினை அழித்து விடும் அல்லது மெய்யான சமயமானது தேசப் பிரிவினைகளை அழித்து விடும் என்ற டால்ஸ்டாயின் கூற்றில் உள்ள உண்மையினை நம்மால் மறுக்க முடியாது.

பெரும்பணக்காராக, ஒரு இராணுவ வீரராக, உலகப்புகழ் பெற்ற எழுத்தாளராக, நம்பிக்கையற்றவராக (நாத்திகராக), ஆன்மீகப் போராளியாக, 'காந்தி' 'மார்ட்டின் லூதர் கிங்' போன்றவர்களுக்கு அகிம்சை வழிப் போராட்டத்தின் வழிகாட்டியாக, தனது நூல்களை பொதுவுடைமையாக்கிய ஒரு பொதுவுடைமைவாதியாக என்று பல்வேறு பரிமாணங்களைக் கொண்டு அமைந்து இருக்கின்ற வாழ்க்கையினை கொண்டிருக்கின்ற அவரின் அனுபவத்திற்கும் சரி கூற்றிற்கும் சரி நாம் செவி கொடுத்ததாகத் தான் வேண்டி இருக்கின்றது. அதுவும் கிருத்துவ சமயத்தினைச் சார்ந்தவராக இருந்து கொண்டு திருக்குறளினையும் (காந்திக்கு திருக்குறளினை அறிமுகம் செய்து வைத்தவர் டால்ஸ்டாய் தான். இந்த கடிதத்தினில் திருக்குறளினை அவர் 'இந்து குறள்' என்றே குறிப்பிட்டு இருக்கின்றார்) கிருஷ்ணரின் உபதேசங்களையும் உபநிடதங்களையும் பற்றி கூறி இருக்கின்ற அம்மனிதரின் கூற்றினை நாம் சற்று பொறுமையாக சிந்தித்துப் பார்த்தாகத் தான் வேண்டி இருக்கின்றது.

இளவயதில் நம்பிக்கையற்றவராக இருந்து, பின்னர் வாழ்வென்றால் என்னவென்ற ஒரு தேடலினைக் கொண்டு, அதன் முடிவில் ஒரு ஆன்மீகப் போராளியாக போலி சமயங்களையும் போலி அறிவியலையும் ஒரு சேர எதிர்த்த அவரது வாழ்வில் இருந்தும் சரி அவரது படைப்புகளில் இருந்தும் சரி இன்றைக்கு இருக்கின்ற இளைய தலைமுறையினர் நிச்சயமாக அதிகம் கற்றுக் கொள்ளலாம். கற்றுக் கொள்ள வேண்டும்.

டால்ஸ்டாய் என்கின்ற மாமனிதரையும் காந்தி என்கின்ற மாமனிதரையும் ஒன்றாக ஒன்றிணைத்த சிந்தனைகளை மக்கள் அறிந்து கொள்வதற்கு இந்நூல் உதவும் என்றும் அச்சிந்தனைகளைக் குறித்து அவர்கள் மேலும் தேடுவதற்கும் விவாதிப்பதற்கும் இந்நூலானது வழிவகுக்கும் என்றே நான் கருதுகின்றேன்.

அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை

என்ற வள்ளுவரின் குரளிற்கேற்ப அன்பினையே தங்களது ஆயுதமாக அமைத்துக் கொண்ட அவர்களது வழிமுறைகளில் இருந்தே நமது சமூகம் அநேகம் கற்றுக்கொள்ள வேண்டி இருக்கின்றது. எவ்வாறு தீயினைக் கொண்டு தீயினை அழிக்க முடியாதோ அதனைப் போன்றே தான் தீமையான செயல்களை வேறொரு தீமையான செயலினைக் கொண்டு அழிக்க முடியாது. நல்ல செயல்களாலேயே தான் தீய செயல்களை அழிக்க முடியும். அதனையே தான் சமயங்கள் போதிக்கின்றன. அவற்றையே தான் காந்தியும் சரி டால்ஸ்டாயும் சரி நமக்குத் தெளிவுபடுத்துகின்றனர். அன்பும் மற்ற நற்பண்புகளும் நலிந்து போய் கிடக்கின்ற நம்முடைய இன்றைய காலகட்டத்தினில் நாம் அவர்களது கூற்றினுக்கு செவி சாய்த்தாகத்தான் வேண்டி இருக்கின்றது. அன்பே அனைத்திற்குமான தீர்வாக இருக்கின்றது. அன்பே இறைவன்.

1 கருத்துகள்:

அருமையான ஆய்வுக் கட்டுரை

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு