காந்தி அவர்கள் தென்னாப்பிரிக்காவில் முதன்முறையாக தன்னுடைய சத்தியாக்கிரக போராட்டத்தினைத் துவங்கிய காலகட்டத்தினில் இந்தக் கடித உரையாடலானது நிகழப்பெற்றது. தென்னாப்பிரிக்காவில் இந்திய மக்களின் உரிமைகளானவை மறுக்கப்பட்ட பொழுது காந்தி அவர்கள் அந்த அரசாங்கக் கொள்கைகளுக்கு எதிராக தனது போராட்டத்தினை துவங்குகின்றார். அத்தகைய போராட்டமானது நிகழ்ந்து கொண்டிருக்கும் பொழுது, இங்கிலாந்திலுள்ள அரசு அதிகாரிகளைச் சந்தித்து தென்னாப்பிரிக்காவில் இருக்கின்ற ஆங்கிலேய இந்தியர்கள் படும் இன்னல்களைக் குறித்து மனு ஒன்றினை அளிக்க அவர் சென்றிருந்த பொழுது டால்ஸ்டாயுடனான அவரது இந்தக் கடிதப்போக்குவரத்து துவங்குகின்றது. தென்னாப்பிரிக்காவில் நடைப்பெற்ற அந்த வரலாற்றினை அறிந்து கொள்வதற்கு 'தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம்' என்ற காந்தியின் நூலினை படிப்பது உதவியாக இருக்கும்.

கடிதம் 1

வெஸ்ட்மின்ஸ்டர் பிளேஸ் ஹோட்டல்
4 ,விக்டோரியா ஸ்ட்ரீட்,
இலண்டன்,S.W.
அக்டோபர் 1,1909.

டால்ஸ்டாய் பிரபு அவர்களுக்கு:

டிரான்ஸ்வாலில் (தென்னாப்பிரிக்கா) கிட்டத்தட்ட கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்துவந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளை உங்களது கவனத்திற்கு கொண்டு வருவதற்கான உரிமையினை இக்கடித்ததின் வாயிலாக நான் எடுத்துக் கொண்டிருக்கின்றேன்.

அங்கே கிட்டத்தட்ட பதிமூன்றாயிரம் ஆங்கிலேய இந்தியர்களைக் கொண்ட ஒரு குடியேற்றப்பகுதி இருக்கின்றது. அங்கிருக்கின்ற இந்த இந்திய மக்களானவர்கள் பல வருடங்களாக, சட்டபூர்வமாக்கப்பட்ட பல்வேறு விதமான உரிமை மறுப்புகளுக்கு மத்தியிலேயே உழைத்து வந்து இருக்கின்றனர். நிறத்தினை மையமாக வைத்தும், ஆசியர்கள் என்கின்ற காரணத்தினை மையமாக வைத்தும் மக்களிடையே ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கக்கூடிய தவறான கருத்துக்கள் அந்தக் குடியேற்றப்பகுதியில் தீவிரமாக பரவி இருக்கின்றன. ஆசியர்களைப் பொருத்தவரை, அத்தகைய தவறான எண்ணமானது நிலைபெற்று இருப்பதற்கு, வணிகத்தினை அடிப்படையாகக் கொண்ட பொறாமையே தான் ஒரு பெரிய காரணமாக இருக்கின்றது. மூன்று வருடங்களுக்கு முன்பு வெளியான ஒரு சட்டத்தின் வாயிலாக அங்கிருந்த நிலையானது அதன் உச்சத்தை எட்டியது.

அந்த சட்டமானது எவர்களுக்கு எல்லாம் பொருந்துமோ, அவர்கள் அனைவரையும் அது தரம் தாழ்த்துவதுடன் நில்லாமல், அவர்கள் அனைவரும் மனிதர்களே அல்ல என்று கருதப்படும் ஒரு நிலைக்கே அது அவர்களைக் கொண்டு வந்து விடும் என்றே நானும், ஏனைய மக்கள் பலரும் கருதினோம். அத்தகைய ஒரு சட்டத்திற்கு அடிபணிவது என்பது மெய்யான சமய உணர்ச்சியுடன் ஒன்றிப்போகக் கூடியது அல்ல என்றே எனக்குத் தோன்றியது. நானும் என்னுடைய நண்பர்கள் சிலரும், தீமையை வன்முறையால் எதிர்க்கக் கூடாது என்கின்ற கோட்பாட்டினில் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தோம். இன்றும் அந்தக் கோட்பாட்டினில் தீவிர நம்பிக்கையினைக் கொண்டே தான் இருக்கின்றோம். மேலும் உங்களுடைய எழுத்துக்களைப் படிக்கக் கூடிய பேறும் எனக்கு கிட்டி இருந்தது. உங்களுடைய அந்த எழுத்துக்கள் என்னுடைய சிந்தனையில் ஒரு ஆழமான தாக்கத்தினை ஏற்படுத்தி விட்டிருந்தன.

எங்களுடைய நிலையினைக் குறித்து முழுமையாக அங்கிருந்த ஆங்கிலேய இந்திய மக்களுக்கு  விளக்கிய பொழுது அவர்கள், 'அந்த சட்டத்திற்கு நாம் அடிபணியக்கூடாது மாறாக அச்சட்டத்தினை மீறுவதனால் கிடைக்கப்பெறும் சிறைத் தண்டனையையும் ஏனைய மற்றத் தண்டனைகளையும் நாம் அனுபவிப்பதற்கு தயாராக இருக்க வேண்டும்' என்ற எங்களது ஆலோசனையினை ஏற்றுக் கொண்டார்கள். அதன் விளைவாக, அங்கிருந்த இந்திய மக்களில் கிட்டத்தட்ட பாதிக்கும் மேற்பட்டோர், அந்தப் போராட்டத்தின் வீரியத்தினை தாங்கிக் கொள்ள முடியாமலும், சிறைத் தண்டனையின் கொடுமைகளை தாங்கிக் கொள்ள முடியாமலும், மேலும் தங்களைத் தரம் குறையச் செய்யும் வண்ணம் அமைந்திருக்கும் அந்தச் சட்டத்திற்கு அடிபணிய விரும்பாமலும் டிரான்ஸ்வாலில் இருந்து வெளியேறி வேறு பகுதிகளுக்கு குடியேறி விட்டனர்.

எஞ்சி இருந்த மக்களில், கிட்டத்தட்ட இரண்டாயிரத்தி ஐந்நூறு பேர் தங்களது மனசாட்சிக்கு ஏற்ப தங்களைத் தாங்களே சிறைத் தண்டனைக்கு ஆளாக்கிக் கொண்டனர். ஒரு சிலர் ஐந்து முறை கூட சிறைக்குச் சென்று இருக்கின்றனர். அத்தகைய சிறைத் தண்டனைகள் சில நேரங்களில் நான்கு நாட்களாகவும் இருந்து இருக்கின்றன, சில நேரங்களில் ஆறு மாதங்களாகவும் இருந்து இருக்கின்றன. அநேக நேரங்களில் அந்த சிறைத் தண்டனைகளின் பொழுது கடினமான உடற் வேலையினையும் மக்கள் சந்திக்க வேண்டி இருந்தது. பலர் பொருளாதார ரீதியாக பெரும் நாசத்தினை சந்தித்து இருக்கின்றனர். தற்சமயம் கிட்டத்தட்ட நூற்றுக்கும் அதிகமான அகிம்சை வழி போராளிகள் டிரான்ஸ்வால் நகரச் சிறைகளினில் அடைக்கப்பட்டு இருக்கின்றனர். அவர்களில் ஒரு சிலர் மிகவும் ஏழ்மையான நிலையினில் இருப்பவர்கள். தங்களது வாழ்விற்குத் தேவையானவற்றைத் தங்களது தினசரி உழைப்பினால் மட்டுமே ஈட்டிக் கொள்ளக் கூடிய நிலையினில் இருப்பவர்கள். அப்படிப்பட்ட அவர்கள் சிறையினில் இருப்பதன் விளைவாக, அவர்களது மனைவிகளுக்கும் குழந்தைகளுக்கும் பொதுவாக திரட்டப்படுகின்ற காணிக்கைகளின் மூலமாகவே ஆதரவினை வழங்க வேண்டி இருக்கின்றது. அத்தகைய பொதுவான காணிக்கைகளையும் அகிம்சை வழிப் போராளிகளே பெருவாரியாக  திரட்டுகின்றனர்.

இத்தகைய நிலையானது ஆங்கிலேய இந்தியர்களை ஒரு மாபெரும் சிரமத்திற்கு உள்ளாக்கி இருக்கின்றது. இருந்தும், என்னுடைய கருத்தின்படி, அவர்கள் அந்த சூழலிற்கு ஏற்ப உறுதியாக எழுந்து இருக்கின்றனர். எப்பொழுது முடிவிற்கு வரும் என்பதனை அறியாது இன்றும் இப்போராட்டம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது. எது எப்படி இருந்த போதிலும், முரட்டுத்தனமான வன்முறையானது எந்த இடத்தினில் தோற்குமோ, அந்த இடத்தினில் அகிம்சை வழியிலான எதிர்ப்பானது நிச்சயமாக வெல்லும் என்பதனை எங்களுள் ஒரு சிலரேனும் தெளிவாக அறிந்து இருக்கின்றோம். மேலும், எங்களது இந்தப் போராட்டமானது இத்தனை காலமாக நீடித்துக் கொண்டே போவதற்கு எங்களுடைய பலவீனமே முக்கியமான காரணமாக இருக்கின்றது என்பதனையும், அந்த பலவீனமே அரசாங்கத்தின் சிந்தனையில் 'நாங்கள் தொடர்ச்சியான இடர்பாடுகளைத் தாக்குப்பிடிக்க மாட்டோம்' என்கின்ற நம்பிக்கையினை விதைத்து இருக்கின்றது என்பதனையும் அறிந்து இருக்கின்றோம்.

என்னுடைய நண்பர் ஒருவருடன், இம்பீரியல் அதிகாரிகளை (ஆங்கிலேயே அரசு) சந்தித்து அவர்களின் முன்னே எங்களுடைய பிரச்சனைக்கு தீர்வினைக் காண்பதற்காக ஒரு விண்ணப்பத்தினை வைப்பதற்கு நான் இங்கே வந்துள்ளேன். அகிம்சை வழியிலான போராளிகள், அரசாங்கத்துடன் மன்றாடும் வண்ணம் யாதொரு செயலினையும் தாங்கள் செய்ய கூடாது என்பதனை உணர்ந்தே தான் இருக்கின்றார்கள். இருந்தும் அரசாங்கத்துடன் இங்கே நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த வந்திருப்பதற்கு காரணம், எங்களது சமூகத்தில் இருந்த வலு குறைந்த மக்களின் வேண்டுகோளே ஆகும். இத்தகைய ஒரு செயலானது அவர்களது பலத்தைக் காட்டிலும் அவர்களது பலவீனத்தையே அதிகமாக காட்டுகின்றது.

ஆனால் இங்கே நான் கண்டறிந்து கொண்ட விடயங்களை அடிப்படையாக வைத்துப் பார்க்கும் பொழுது, நீதிநெறிகளைப் பற்றியும் அகிம்சை வழியிலான போராட்டத்தின் பலன்களைப் பற்றியும் பொதுவான ஒரு கருத்தரங்கினை இங்கே நாம் நடத்த முற்பட்டோம் என்றால், அத்தகைய ஒரு செயலானது இங்கே இருக்கின்ற மக்களின் மத்தியில் இந்த இயக்கத்தை பிரபலமடையச் செய்வதோடு அவர்களைச் சிந்திக்க வைக்கவும் செய்யும் என்றே எனக்கு தோன்றுகின்றது. ஆனால் அப்படி ஒரு கருத்தரங்கினை நடத்துவது என்பது சரியான ஒன்றாக இருக்குமா என்ற கேள்வி ஒன்றினை என்னுடைய நண்பர் ஒருவர் எழுப்பி இருக்கின்றார். அவருடைய பார்வையின்படி, அத்தகைய ஒரு முயற்சியானது அகிம்சை வழியிலான எதிர்ப்பின் உண்மை உணர்வோடு ஒவ்வாத ஒன்றாக இருப்பதோடு நில்லாமல், கருத்துக்களை வாங்குவதற்கு சமமான ஒரு செயலாகவும் இருக்கும்.

எனவே இத்தகைய முயற்சியானது சரியானதொன்றாக இருக்குமா இல்லையா  என்பதனைப் பற்றிய உங்களது கருத்தினை எனக்குத் தந்தருளுமாறு உங்களிடம் நான் கேட்டுக் கொள்ளலாமா? இத்தகைய முயற்சிக்கு பங்களிப்புகளை வரவேற்பதில் தவறேதும் இல்லை என்றே நீங்கள் நினைத்தீர்களேயானால், இந்தத் தலைப்பினில் கட்டுரைகளை எழுதுவதற்கு நான் எவரை எல்லாம் குறிப்பாக அணுக வேண்டுமோ அவர்களது பெயர்களை எல்லாம் எனக்குத் தருமாறும் நான் உங்களிடம் கேட்டுக் கொள்ளுகின்றேன்.

உங்களுடைய நேரத்தினை நான் அத்துமீறி எடுத்துக் கொள்வதற்கு குறிப்பிட்ட மற்றுமொரு காரணமும் இருக்கின்றது. இன்றைக்கு இந்தியாவில் நிலவிக் கொண்டிருக்கின்ற அமைதியற்ற சூழலினைக் குறித்த உங்களது 'இந்துவிற்கு ஒரு கடிதம்' என்ற படைப்பின் பிரதி ஒன்று, ஒரு நண்பரின் வாயிலாக என்னுடைய கையிற்கு வந்து சேர்ந்து இருக்கின்றது. வெளிப்புறமாகப் பார்க்கும் பொழுது அது உங்களுடைய கருத்துக்களை பிரதிபலிப்பதனை போன்றே தான் தோன்றுகின்றது. உங்களுடைய அந்த படைப்பினை, கிட்டத்தட்ட இருவதாயிரம் பிரதிகள், தன்னுடைய சொந்த செலவினில் அச்சடித்து அவற்றை விநியோகம் செய்ய வேண்டும் என்பதே எனது நண்பரின் எண்ணமாக இருக்கின்றது. மேலும் அந்த படைப்பினை அவர் மொழிபெயர்க்க வேண்டும் என்றும் எண்ணுகின்றார். ஆனால் எங்களால் எவ்வளவு முயன்றும் அந்தப் பிரதியின் அசலினைக் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே, அந்தக் கடிதமானது உங்களுடையது தான் என்பதனையும் அது எவ்விதமான மாற்றத்தினையும் அடைந்து இருக்கவில்லை என்பதனையும் உறுதி செய்து கொள்ளாமல் அதனை அச்சடிப்பது என்பது சரியான ஒரு செயலாகாது என்றே நாங்கள் எண்ணுகின்றோம். எனவே இந்த மடலுடன் எங்களிடம் இருக்கின்ற அந்தப் பிரதியினை இணைத்து அனுப்பி இருக்கின்றேன். அந்த படைப்பானது உங்களுடையது தானா என்பதனையும், அது எவ்விதமான மாற்றத்தினையும் கொண்டிராமல் சரியாக இருக்கின்றதா என்பதனையும், அத்துடன் அதனை நாங்கள் மேற்கூறியவாறு வெளியிடுவதற்கு நீங்கள் சம்மதிக்கின்றீர்களா என்பதனையும் நீங்கள் தயை கூர்ந்து தெரிவித்தீர்கள் என்றால் அது எனக்கு மிக்க உதவியாக இருக்கும். நீங்கள் அந்தக் கடிதத்துடன் வேறு ஏதேனும் சேர்க்க விரும்பினீர்கள் என்றால், உங்களின் விருப்பப்படி அவ்வாறே செய்யுங்கள்.

மேலும் இங்கே நான் என்னுடைய ஒரு கருத்தினையும் கூற விரும்புகின்றேன். உங்களுடைய கடிதத்தின் இறுதி பத்தியில் மறுபிறவிக் கொள்கையில் இருக்கும் நம்பிக்கையில் இருந்து விடுபடுமாறே நீங்கள் வாசகர்களைக் கேட்பது போல் தோன்றுகின்றது. குறிப்பிட்ட அந்தக் கொள்கையினைப் பற்றி நீங்கள் படித்து இருக்கின்றீர்களா இல்லையா என்பது எனக்குத் தெரியாது (இதனை நான் ஆணவத்தினால் குறிப்பிடவில்லை). மறுபிறவி என்பதும் கூடு விட்டு கூடு பாய்வதும் இலட்சக்கணக்கான இந்திய மக்களினால் போற்றப்படும் நம்பிக்கைகளாகும். சீனர்களும் இவற்றை நம்புகின்றனர். இந்தக் கோட்பாடுகளானவை, வெறும் பாடங்களாக ஒப்புக்கொள்ளப்பட்ட நிலையினைத் தாண்டி, பலரால் உணரப்பட்ட அனுபவங்களாகவே இருக்கின்றன என்றே ஒருவரால் கிட்டத்தட்ட கூற முடியும். வாழ்வின் பல மர்மங்களை இது நியாயமான முறையில் விளக்குகின்றது. டிரான்ஸ்வாலில் சிறைத் தண்டனைக்கு உட்பட்ட பல அகிம்சை வழிப் போராளிகளுக்கு இந்தக் கோட்பாடே தான் ஆறுதலாக இருந்து இருக்கின்றது.

நான் இதனை எழுதுவதன் நோக்கம், அந்தக் கொள்கையின் உண்மைத்தன்மையினை உங்களை ஏற்றுக் கொள்ள வைக்க வேண்டும் என்பது அல்ல. ஆனால் உங்களது கடிதத்தில் நீங்கள் உங்களது வாசகர்களை எவற்றில் இருந்து எல்லாம் அவர் விலக வேண்டும் என்றே குறிப்பிட்டு இருக்கின்றீர்களோ, அதில் இருந்து இந்த 'மறுபிறவி கோட்பாட்டினை' மட்டும் தயைக்கூர்ந்து விலக்கிக் கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொள்ளுவதற்காகவே தான் நான் இதனை எழுதுகின்றேன்.

மேலும், எந்தக் கடிதத்தினைப் பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கின்றோமோ, அந்தக் கடிதத்தில் நீங்கள் பெருவாரியாக கிருஷ்ணரின் உபதேசங்களையும், பிற பகுதிகளுக்கு குறிப்புகளையும் தந்து இருக்கின்றீர்கள். அந்த உபதேசங்களை நீங்கள் எந்த புத்தகத்தில் இருந்து எடுத்து இருக்கின்றீர்கள் என்று அந்த நூலின் பெயரினை என்னிடம் சொன்னீர்கள் என்றால் நான் உங்களுக்கு மிகவும் நன்றியுடையவனாய் இருப்பேன்.

இந்தக் கடிதத்தின் மூலமாக நான் உங்களைக் களைப்படையச் செய்து இருக்கின்றேன். உங்களை மதித்து, உங்களைப் பின்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தினைக் கொண்டிருக்கும் மக்களுக்கு உங்களுடைய நேரத்தினை அத்துமீறி எடுத்துக் கொள்வதற்கு எந்த ஒரு உரிமையும் இல்லை என்பதனை நான் அறிவேன். மாறாக தங்களால் இயன்ற அளவு உங்களுக்குத் தொந்தரவு தராத வண்ணம் இருக்க முயல்வதே அவர்களது கடமையாக இருக்கின்றது. இருந்தும் உங்களுக்கு முற்றிலுமாக அந்நியனாக இருக்கின்ற நான், உண்மையின் மீது இருக்கின்ற ஆர்வத்தின் காரணமாகவும், உங்களுடைய வாழ்வினில் நீங்கள் மேற்கொண்ட பணிகளின் மூலமாக நீங்கள் பெற்று இருக்கின்ற தீர்வினை அடிப்படையாக வைத்து, சில பிரச்சனைகளுக்கு தீர்வினைக் காண உங்களிடம் இருந்து ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வதற்காகவுமே உங்களிடம் நான் தொடர்பு கொள்ளக்கூடிய இந்த உரிமையினை எடுத்து இருக்கின்றேன்.

மதிப்புடன்,
என்றென்றும் உங்களது சேவகனாய்
மோ.. காந்தி
அக்டோபர்
 

1 கருத்துகள்:

காந்தி, டால்ஸ்டாய் - கடிதத் தொடர்புகள்
அருமையான பகிர்வு

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு