மகாபலியும் மகாபலிபுரமும்...!!! தமிழர்களுக்கு இவ்விரண்டு பெயர்களும் நன்றாகப் பழக்கப்பட்ட பெயர்கள் தான். சிறிதளவு வரலாற்று அறிவும் இதிகாச அறிவும் ஒருவனிடம் இருந்தது என்றால் தெளிவாக அவன் கூறி விடுவான்...

மகாபலி என்பது வாமன அவதாரம் என்று கருதப்படும் பெருமாளின் அவதாரங்களில் வரும் ஒரு அரசன் என்று. அன்றைய சேர நாடான இன்றைய கேரளாவில் வருடத்திற்கு ஒரு முறை மகாபலியின் (மாபலி) வருகை மிகவும் சிறப்பாக ஓணம் பண்டிகையென கொண்டாடப்படுகின்றது என்றும் மக்கள் பலரும் அறிவர்.

அதனைப் போன்றே மகாபலிபுரம் என்றால் அது தமிழகத்தின் தொண்டை நாட்டினில் (இன்றைக்கு சென்னைக்கு அருகில்) பல்லவ மன்னர்களால் கட்டப்பட்ட ஒரு சிற்ப நகரம் என்றுமே மக்கள் பலரும் அறிவர். இவை எல்லாம் மக்கள் பலரும் பெருவாரியாக அறிந்து இருக்கும் விடயங்கள். புராணக் கருத்துக்களை அறிந்துக் கொள்வதற்காகவும் சுற்றுப் பயணத்திற்காகவும் மட்டுமே அந்த விடயங்களை பெருவாரியான மக்கள் அறிந்து வைத்து இருக்கின்றனர். எனவே அந்தப் மகாபலி என்ற அரசனைக் குறித்தோ அல்லது மகாபலிபுரத்தின் தோற்றத்தின் காரணத்தைக் குறித்தோ அல்லது இவ்விரண்டு பெயர்களில் இருக்கும் ஒற்றுமையினைக் குறித்தோ அவர்கள் அறிந்து இருக்க வேண்டியத் தேவை இல்லை. ஆனால் அறியாத விடயங்களையும் உண்மையினையும் குறித்தே நாம் நம்முடைய பதிவுகளில் கண்டு வந்துக் கொண்டிருக்கின்றோம். அந்நிலையில் நாம் மகாபலியினைப் பற்றியும் மகாபலிபுரத்தினைப் பற்றியும் சற்றுத் தெளிவாக காண வேண்டி இருக்கின்றது.

மகாபலி என்ற அரசனை வாமன அதிகாரத்தில் வந்த பெருமாள் பாதாள உலகத்திற்கு அனுப்பி விடுகின்றார். இருந்தும் அவன் தனது மக்களை காண விரும்புவதனால் வருடத்திற்கு ஒரு முறை அவன் அவனுடைய நாட்டு மக்களை வந்து சந்தித்து அவர்களுடைய குறைகளைத் தீர்த்துக் கொள்ளலாம் என்றே அவனுக்கு வரமும் அவர் அளிக்கின்றார்.  இது தான் சுருக்கமாக வாமன அவதாரத்தின் கதை. இங்கே தான் நாம் சில கேள்விகளை எழுப்ப வேண்டி இருக்கின்றது.

மகாபலி என்ற அரசன் இருந்தமைக்கு சான்றுகள் இருக்கின்றனவா? அவ்வாறு அவன் இருந்தான் என்றால் அவன் ஆண்ட காலம் எது? இன்றைக்கு கேரள நாட்டினில் தான் மகாபலி சிறப்பாக கருதப்பட்டு வருகின்றான். இன்றைக்கு கேரளா என்று இருக்கும் இடமானது தமிழர்களின் சேர நாடே ஆகும். அவ்வாறு இருக்கையில் தமிழ் சங்க இலக்கியங்களில் மகாபலியைப் பற்றி குறிப்புகள் இருக்கின்றனவா?

இந்த கேள்விகளுக்கு விடை மகாபலி என்ற அரசன் வரலாற்றில் இருந்தமைக்கு சான்றுகள் இல்லை என்றே வருகின்றது. மேலும் அவனது காலத்தினை கோடி ஆண்டுகளுக்கு முன்னர் என்றும் புராணக் கதைகளைக் கூறுவோர் கூறலாம்...ஆனால் சான்றுகள் இன்றி அதனை எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

எனவே மகாபலி என்ற ஒரு வரலாற்று மன்னன் இருந்தமைக்கு சான்றுகள் புராணக் கதைகளைத் தவிர்த்து வேறு எந்த வடிவிலும் இல்லை. சரி இப்பொழுது மகாபலிபுரத்தினைப் பற்றி காண்போம். மகாபலிபுரத்தினைப் பற்றி பொதுவாக நாம் அறிந்து இருக்கும் விடயங்கள் என்னவென்றால்...

மகாபலிபுரம் உலகப்புகழ் பெற்ற ஒரு சிற்ப நகரமாகும். சிற்ப கலைகளின் மூலமாக இந்த நகரினை உலகப் புகழ் பெற வைத்தது பல்லவ மன்னவர்களாவர். இங்கே நாம் ஒரு கேள்வியினைக் காண வேண்டி இருக்கின்றது. பல்லவ மன்னர்கள் என்பவர்கள் யார்? என்பதே அந்த கேள்வியாகும்.

சங்க இலக்கியங்களில் அவர்களைப் பற்றியக் குறிப்புகள் இல்லை. தமிழ் கூறும் மூவேந்தர்களுள் அவர்கள் இல்லை...தமிழகத்தின் இருண்ட காலம் என்று இன்று அறியப்பெறும் களப்பிரர்களின் காலத்திற்குப் பின்னர் தமிழகத்தில் செல்வாக்குடன் இவர்கள் ஆண்டு வந்து இருக்கின்றனர். காஞ்சியும் மகாபலிபுரமும் இவர்களின் காலத்தில் சிறப்புற்று விளங்கி இருக்கின்றது. சமஸ்கிருதம் இவர்களுடைய ஆட்சியில் செல்வாக்கில் இருந்து உள்ளது. இப்படிப்பட்ட இவர்கள் யார்? தமிழர்களா அல்லது வேற்று இனத்தவர்களா?

இந்த கேள்விக்கு விடையினைக் கண்டோம் என்றால் அதுவும் தெளிவில்லாத நிலையில் தான் இருக்கின்றது. (பல்லவர்களைப் பற்றித் தனியாக ஒரு பதிவினில் காண்போம். இப்பதிவில் அவர்களைப் பற்றி விரிவாகக் காணத் தேவை இல்லை)

இந்நிலையிலேயே தான் நாம் மகாபலி என்ற பெயரினையும் மகாபலிபுரம் என்ற பெயரினையும் காண வேண்டி இருக்கின்றது. இவ்விரண்டு பெயர்களும் சங்க இலக்கியங்களில் காணப்படவில்லை. மகாபலி என்ற பெயர் தமிழகத்தின் மேற்குத் திசையில் பரவலாக அறியப்பட்டு இருக்கின்றது. மகாபலிபுரமோ தமிழகத்தின் கிழக்குத் திசையில் அமைந்து இருக்கின்றது. இந்நிலையில் மகாபலி என்ற அரசன் ஒருவன் அந்த நிலப்பரப்பு முழுமையினையும் ஆண்டானா என்ற கேள்வியினை நாம் முன் வைப்போமே என்றால் அதற்குரிய சான்றுகள் எவையும் நமக்கு கிட்டப் பெறவில்லை.

மேலும் பெருமாளின் அவதாரங்களைக் கூறும் நூல்களுள் மிகவும் பழமையான நூல் பரிபாடலாகும். இதன் காலம் கி.பி நான்காம் நூற்றாண்டு என்று கூறுவர் அல்லது அதற்கும் பிந்திய காலம் என்றும் கூறுவர். அத்தகைய அந்த நூலினில் வாமன அவதாரத்தினைப் பற்றியக் குறிப்பு இல்லை. எனவே வாமன அவதாரம் என்பது கி.பி நான்காம் நூற்றாண்டிற்குப் பின்னர் எழுந்த ஒரு கதை என்றே நாம் கருத முடிகின்றது.

மேலும் சைவ சமயமானது இறைவன் ஒருமுறை தான் உலகிற்கு வந்தான் என்றுக் கூறுவதையும், பெருமாளினை சக்தியின் ஆண் வடிவமாகக் கருதுவதையும் நாம் இங்கே கருத்தில் கொள்ளத் தான் வேண்டி இருக்கின்றது. இவை அனைத்தையும் வைத்துப் பார்த்தால் மகாபலி என்றொரு அரசன் உண்மையில் வாழ்ந்து இருக்கவே இல்லை என்றே நாம் கருத வேண்டி வருகின்றது.

அந்நிலையில் சங்க இலக்கியங்களிலும் அந்த கால கட்டத்திலும் காணப்படாத மகாபலி என்கின்ற சொல், ஏன் பிற்காலத்தில் காணப்படுகின்றது என்றே நாம் சிந்திக்க வேண்டி இருக்கின்றது. அதற்கு நாம் மகாபலி என்ற சொல்லினைக் காண வேண்டி இருக்கின்றது. அவ்வாறு அந்தச் சொல்லினை நாம் கண்டோம் என்றால்

மகாபலி - மகா + பலி = மிகப் பெரிய பலி என்றே அது பொருள் தருகின்றது.
மகாபலிபுரம் - மகா + பலி + புரம் = மிகப் பெரிய பலிக்கான இடம்.

இதனை வைத்துப் பார்க்கும் பொழுது, இங்கும் ஒரு கேள்வி எழுகின்றது. அது என்ன மிகப் பெரிய பலி? எது அந்த மிகப் பெரிய பலி?

இந்தக் கேள்விகளுக்குத் தான் நாம் இப்பொழுது விடையினைக் காண வேண்டி இருக்கின்றது.

காண்போம்...!!!

தொடரும்...!!!

தொடர்புடைய இடுகைகள்:

சமயங்களும் வரலாறும் - முகப்புப் பக்கம்
அம்மனும் பெருமாளும் 
தொண்டை நாடு சான்றோர் உடைத்து…!!! 

2 கருத்துகள்:

கடற்கரை நகரம் அருகில் மகாபலி நடந்தது என்றால் அது சுனாமியின் மூலமாக தானே நடந்து இருக்க முடியும்... ஒருவேளை அது தான் நோவா காலத்து சுனாமியா ?

Bali endral iraivanukkaga makkal koduppathu, tsunami epdi Ithula adangum?

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு