மூவொரு கடவுள் என்னும் உண்மையை உணர்ந்தவர் புனித தோமா மட்டுமே. எவ்வாறு?

இயேசு கிருத்து உயிர்த்தெழுந்ததைக் கூறிய மகதலேனா மரியாளின் செய்தியை அவருடைய சீடர்களில் யாருமே நம்பவில்லை. உயிர்த்தெழுந்த கிருத்துவை நேரில் பார்த்த பிறகே நம்பினார்கள்.

மற்ற சீடர்கள் தாங்கள் பார்த்த செய்தியை தோமாவிடம் கூறிய பொழுது, அவர் அறிவியல் ரீதியாக நான் தொட்டுப் பார்க்க வேண்டும் என்று உறுதியாகச் சொன்னதற்குக் காரணம் அவர்கள் ஓர் ஆவியைப் பார்த்திருக்கலாம் என எண்ணினார் என்பது நமக்குத் தெரிகிறது.

இதனால் தாம் தோமா,

"மற்றச் சீஷர்கள்: கர்த்தரைக் கண்டோம் என்று அவனுடனே சொன்னார்கள். அதற்கு அவன்: அவருடைய கைகளில் ஆணிகளினாலுண்டான காயத்தை நான் கண்டு, அந்தக் காயத்திலே என் விரலையிட்டு, என் கையை அவருடைய விலாவிலே போட்டாலொழிய விசுவாசிக்கமாட்டேன் என்றார்." (யோ. 20:25)

இவ்வளவு தெளிவாகப் பேசிய தோமா இயேசு கிருத்து அவர் முன் தோன்றி

" நீ உன் விரலை இங்கே நீட்டி, என் கைகளைப் பார், உன் கையை நீட்டி, என் விலாவிலே போடு," (யோ. 20:27)

என்று கூறிய பொழுது உண்மையை அறிந்து உணர்ந்து

"என் ஆண்டவரே! என் தேவனே!" (கடவுளே) (யோ.20:28)

என்றார். தோமா இவ்வாறு இரண்டு சொற்களால் இரண்டு உண்மைகளை வெளியிட்டார்.

"என் ஆண்டவரே" என்பது அவருக்கு குருவாகிய மனிதனாக வாழ்ந்த இயேசு கிருத்துவைக் குறிப்பிடுகிறது.

"என் தேவனே" என்பது மற்ற சீடர்களுக்கு விளங்காத அடிப்படை உண்மையாகிய இயேசு கிருத்து கடவுள் என்பதைக் குறிப்பிடுகிறது.

அதாவது இயேசு கிருத்து யூதர்கள் எதிர்பார்த்த யூத இனத்தில் பிறந்த, யூத இனத்தின் மீட்பராகிய இவ்வுலக அரசன் அல்லர். உலக மீட்பராகிய பரலோக அரசனாகிய கடவுள் என்பதைக் குறிக்கிறது.

அவர் பார்த்த உருவம், உயிர்தெழுந்த கிருத்துவின் உருவம். அந்த உருவத்தில் தந்தை, மகன், பரிசுத்த ஆவி ஆகிய மூவொரு கடவுளின் நிலை இருக்கிறது என்பதை உணர்ந்து உலகுக்கு முதன் முதலில் அறிவித்த பெருமை தோமாவையே சேர்க்கிறது. எவ்வாறு?

1. மகனும் தந்தையும் இணைந்த நிலை

"இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்". (லூக். 23:46)

என்று கூறினார்.

"என் ஆவியை உமது கையில் ஒப்படைக்கின்றேன்" எனக் கூறி தம் ஆவியைப் பிதாவிடம் ஒப்படைத்த பொழுது பிதாவும் மகனும் ஒன்றாகி விட்டார்கள்.

2. தந்தை மகனுடன் பரிசுத்த ஆவியும் இணைந்த நிலை

"(உயிர்த்தெழுந்த இயேசு) அவர்கள்மேல் ஊதி: பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்;" (யோ. 20:22)

என்று கூறிய பொழுது பிதாவிலும் மகனிலுமிருந்து பரிசுத்த ஆவியானவர் புறப்பட்டு வருவதை அந்த நிகழ்ச்சி காட்டுகிறது.

இதனால், உயிர்த்தெழுந்த கிருத்து, தந்தை, மகன், பரிசுத்த ஆவி ஆகிய மூவொருவராய் இருப்பது தெளிவுப்படுத்தப்படுகிறது.

மற்றச் சீடர்களின் நிலை

தோமாவைத் தவிர மற்ற சீடர்கள், இயேசு கிருத்துவை யூத இனத்தின் மீட்பராகிய யூத இனத்தினர் என்பதாக மட்டுமே அறிந்திருந்தார்கள் என்பதும், தோமா மட்டுமே உயிர்த்தெழுந்த கிருத்து உலக மீட்பராகிய மூவொரு கடவுள் என்பதாக அறிந்துக் கொண்டார் என்பதும் நமக்கு விளங்குகின்றன.

மூவொரு கடவுளாகத் தோமாவால் புரிந்து கொல்லப்பட்ட இந்த நிலையை மற்றச் சீடர்களுக்கு அவர் விளக்கினார் என்பதற்கு பைபிளில் ஆதாரம் இல்லை. விளக்கினாலும் அவர்களால் புரிந்து கொள்ள இயலுமா? என்பது அடுத்த கேள்வி. ஏனெனில் அவர்கள் யோசேப்புக்குப் பிறந்த யூதனாக இயேசுவை நம்பினார்கள் என்பதைப் பார்த்தோம்.

கடவுளின் இரண்டாம் வருகையாகிய பரிசுத்த ஆவியானவரின் பொழிவைப் பெற்ற பின்னர், இயேசு கிருத்து கொடுத்த கட்டளையாகிய

"பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்" (அப். 1:8)

இதன் படி, உலகின் கடைசி வரை தோமா சென்று விட்டார் என்பதை உலகில் வேறு எங்கும் இல்லாமல், தமிழகத்திலுள்ள அவருடைய அடக்க இடம் சுட்டிக் காட்டுகிறது. இதனால், அப்போஸ்தலர் இரண்டாம் அதிகாரத்திற்குப் பின்னர் அவரைப் பற்றிய செய்தி எதுவும் பைபிளில் இல்லை.

தொடரும்....!!!

பி.கு:

1) பொதுவாக ஒரு புத்தகத்தினை அப்படியே எனது வலைத்தளத்தில் பதிவிட்டது கிடையாது. ஆனால் 'இரண்டாம் வருகையும் பரலோக ராஜ்யமும் - புனித தோமா வழிப் பார்வை' என்ற தலைப்பில் ஆய்வாளர் முனைவர்.மு.தெய்வநாயகம் அவர்கள் எழுதிய நூலினை அப்படியே பதிவுகளாக இடுவது, அறிந்துக் கொள்ளவும் விவாதிக்கவும், நலமாக இருக்கும் என்ற எண்ணத்தினால் அப்புத்தகத்தை அப்படியே பதிவுகளாக இடுகின்றேன். நன்றி.

2) இப்புத்தகத்தை கீழ் கண்ட முகவரியில் வாங்கலாம்

மெய்ப்பொருள் அச்சகம்
278, கொன்னூர் நெடுஞ்சாலை
அயன்புரம், சென்னை - 600 023.
மின்னஞ்சல் - thamizharsamayam2010@gmail.com
தொலைபேசி - 044 - 26743842

2 கருத்துகள்:

புனித தோமாவிக்கு ஏசுவின் இரண்டாம் வருகை முடிந்து விட்டது என்று தெரிந்து இருந்தால் விண்ணேர் ஏன் அந்த கல்கி அவதாரம் பற்றிய குறிப்புகள் உண்டானது ?

@ சுந்தர்,

தோமாவின் காலம் கி.பி முதல் நூற்றாண்டு. கல்கி மற்றும் ஏனைய அவதாரங்கள் குறித்துக் காணப்படும் செய்திகள் அக்காலத்திற்கு மிகவும் பிந்தி தான்...காலப்போக்கில் சமயங்கள் அரசியல் கருவிகளாக மாற்றப் பெறும் பொழுது சமயங்களின் கருத்துகளில் இடைச் செருகல்கள்/மாற்றங்கள் நேருவது என்பது நடைமுறையில் நாம் காண்கின்ற விடயங்கள் தான். இதனை அனைத்துச் சமயங்களிலும் நாம் காணலாம்... கல்கி அவதாரமும் அத்தகைய ஒரு விடயம் தான்...!!! தோமாவிற்கும் அதற்கும் சம்பந்தங்கள் கிடையாது...!!!

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு