சென்ற பதிவினில் மனிதன் என்பவன் இயந்திரமாகப் படைக்கப்படவில்லை என்றும் அவனது முடிவுகளை அவனே எடுக்கும் வல்லமையை அவன் பெற்று உள்ளான் என்றுமே நாம் கண்டு இருக்கின்றோம்.


இப்பொழுது அதனைப் பற்றித் தான் நாம் விரிவாக காண வேண்டி இருக்கின்றது. அதற்கு நாம் சில கேள்விகளையும் காண வேண்டி இருக்கின்றது.

1) இறைவன் மனிதனைப் படைத்தான் சரி. இறைவன் உங்களின் கூற்றின் படி நன்மையே வடிவானவன். அவ்வாறு இருக்கையில் அவன் படைத்த மனிதனும் நல்லவனாகத் தானே இருக்க வேண்டும். அவ்வாறு இருக்கையில் தீமை எவ்வாறு வந்தது? தீமையைப் படைத்தது யார்?

இறைவனைப் பற்றிப் பேசுகையில் நிச்சயமாய் இக்கேள்வியினை நாம் கடந்து வராது இருக்க முடியாது. எனவே இக்கேள்விக்கு நாம் விடையினைக் காணுவது இங்கே முக்கியமானதொன்றாகின்றது. அதற்கு நாம் இருளையும் வெளிச்சத்தையும் காண வேண்டி இருக்கின்றது.

ஒரு இடத்தில் இருள் இருக்கின்றது. அங்கே நாம் ஒளியைக் கொண்டு வந்தால் இருள் மறைந்து விடுகின்றது. அதாவது ஒளி இருந்தால் அங்கே இருள் இருப்பதில்லை. ஒளி இல்லாத இடத்தில் தான் இருள் இருக்கின்றது. அதாவது ஒளி இல்லாத நிலையே இருள் ஆகும்.

எனவே ஒளி-இருள் ஆகியவை இரு வெவ்வேறு பொருட்கள் அல்ல. ஒளி இல்லாத இடத்தில் இருள் இருக்கும். அவ்வளவே.

அதனைப் போன்று தான் நன்மையையும் தீமையும்..எங்கே நன்மை இல்லையோ அங்கே தீமை இருக்கும். நன்மை இல்லாத நிலை அனைத்தும் தீமை ஆகும்.

சமயங்கள் இறைவனை அன்பின் வடிவமாகவே கூறுகின்றன.

சைவம் 'அன்பே சிவம்' என்கின்றது.

கிருத்துவம் 

"நான் உங்களுக்குச் சொல்கின்றேன்; உங்கள் எதிரிகளை நேசியுங்கள்...உங்களைச் சபிக்கின்றவர்களை ஆசிர்வதியுங்கள்; உங்களை வெறுப்பவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துபவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள். இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்தில் இருக்கின்ற உங்கள் பிதாவுக்குப் பிள்ளைகளாக இருப்பீர்கள்; அவர் நல்லோர் மேலும் தீயோர் மேலும் தமது சூரியனை உதிக்கப் பண்ணி, நீதி உள்ளவர்கள் மேலும் அநீதி உள்ளவர்கள் மேலும் ஒரு சேர மழையைப் பெய்யப் பண்ணுகின்றார்." - மத்தேயு 5:44,45

என்றுக் கூறுகின்றது.

எனவே இறைவன் அன்பின் வடிவாக இருக்கின்றார் என்றே நாம் அறியப் பெறுகின்றோம். இந்நிலையில் அன்பு எங்கே இருக்கின்றதோ அங்கே இறைவன் இருக்கின்றார். அன்பு எங்கே இல்லையோ அங்கே தீமை இருக்கின்றது. அதாவது தீமை என்று ஒன்று தனியாகக் கிடையாது...அன்பு இல்லாத நிலையே தீமையாகும்.

நாம் சென்றப் பதிவினில் கண்டவாறு மனிதனால் இவ்விரண்டு நிலைகளும் எந்த நிலையை வேண்டும் என்றாலும் தேர்வு செய்ய இயலும். அன்பின் பாதையையும் அவனால் தேர்வு செய்ய இயலும்...அன்பிலாத சுயநலப் பாதையையும் அவனால் தேர்வு செய்ய இயலும். அவனுடைய அத்தேர்வின் படியே உலகம் அமைகின்றது. அவன் எதனைத் தேர்வு செய்து இருக்கின்றான் என்பதனை இன்றைக்கு உலகம் இருக்கும் நிலையை வைத்தே அறிந்துக் கொள்ளலாம்.

சரி அதனைப் பற்றி மற்றக் கேள்விகளில் விரிவாகக் காணலாம் இப்போதைக்கு தீமையைப்/சாத்தானைப் படைத்தது யார் என்றக் கேள்விக்கு விடை, தீமை/சாத்தான் என்று ஒன்று தனியாகக் கிடையாது...நன்மை/அன்பு/கடவுள்தன்மை இல்லாத நிலையே அது ஆகும். அது ஆணவ நிலை. அன்பு வரும் பொழுது அந்த ஆணவ நிலை ஒடுங்கி விடும்.

2) சரி இறைவன் தீமையைப் படைக்கவில்லை என்றே வைத்துக் கொள்வோம்...பின்னர் ஏன் மனிதன் தீய நிலைக்கு சென்றதை இறைவன் கண்டிக்கவில்லை? அவன் தீமை செய்யாது ஏன் தடுக்கவில்லை? எல்லாம் வல்ல இறைவனால் தீமையைத் தடுக்க முடியாதா?

இந்தக் கேள்வியையும் நாம் இறைவனைப் பற்றிப் பேசுகையில் எதிர்கொண்டாகத் தான் வேண்டி இருக்கின்றது. சரி இப்பொழுது இதற்கும் விடையினைக் காண முயற்சிப்போம்.

சமயங்கள் இறைவனுக்கும் மனிதனுக்கும் உள்ள உறவை தந்தை-பிள்ளைஎன்ற நிலையிலேயே கூறுகின்றன. இந்நிலையில் இறைவன் மனிதனுக்கு அவன் ஆண்டுக் கொள்ள ஒரு உலகைப் படைத்து தந்து விட்டான். அந்த உலகத்தின் ஆட்சி மனிதனின் கைகளில் இருக்கின்றது.

அவ்வுலகத்தின் ஆட்சியோடு முடிவெடுக்கும் சுதந்திரத்தையும் மனிதனுக்கு இறைவன் வழங்கி உள்ளார். காரணம் மனிதனை வெறும் விலங்கினைப் போல் இல்லாது அவரது மகனினைப் போலவே படைத்து உள்ளார்.

அதாவது மனிதனுக்கு சுதந்திரமும் இருக்கின்றது அதே நேரம் ஆட்சிப் புரிய ஒரு உலகமும் இருக்கின்றது. ஆனால் இங்கே தான் மனிதன் தவறு செய்ததாக சமயங்கள் கூறுகின்றன.

முதல் மனிதன் 'இறைவனின் சொல்லினைக் கேட்காமல் அவரது கூற்றினை மீறியதால் இறைவனின் தொடர்பை இழந்து தீமையுள் மூழ்கினான்' என்று கிருத்துவம் கூறுகின்றது.

அதைப் போன்றே சைவ சித்தாந்தமும்

"முத்தி முதற்கொடிக்கே மோகக் கொடிபடர்ந்
அத்தி பழுத்தது என்று உந்தீ பற
அப்பழம் உண்ணாதே உந்தீ பற – திருஉந்தியார் – 41"

""அவன் அவள் அது எனும் அவை மூவினைமையின்
தோற்றிய திதியே ஒடுங்கி மலத்துளதாம்
அந்தம் ஆதி என்மனார் புலவர்" - சிவஞானபோதம் 1

என்று முதல் மனிதன் பாவத்தில் வீழ்ந்த நிலையைக் கூறுகின்றது. அதாவது சுதந்திரமாக முடிவினை எடுக்கும் வல்லமையை பெற்று இருந்த மனிதன் அன்பிற்கு மாறான முடிவினை எடுத்ததால் தீமையில் விழுந்து நன்மையை விட்டு விலகி விட்டான் என்பதே அவை கூறும் கருத்தாகும்.

இதனைப் பற்றி இன்னும் விரிவாக பார்க்க நாம் விவிலியத்தின் சில விடயங்களைக் காண வேண்டி இருக்கின்றது. விவிலியத்தின் படி இறைவன் உலகைப் படைத்து விட்டு அதன் ஆட்சியை மனிதனிடத்து கொடுத்தார் என்று இருக்கின்றது.

"தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்.

பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்." - ஆதியாகமம் 1:27-28

ஆனால் இயேசு வருகையிலோ நிலைமை வேறாக இருக்கின்றது. இயேசுவிடம் சாத்தான், அவர் சாத்தானை வணங்கினால் உலகின் அனைத்து அரசுகளையும் அவருக்குத் தருவேன் என்றுக் கூறுவதனைப் போல் வருகின்றது.

"மறுபடியும் பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து:

நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன் என்று சொன்னான்." - மத்தேயு 4:8-9

இங்கே தான் ஒரு கேள்வி...மனிதனுக்காக இறைவன் படைத்த உலகின் ஆட்சியை எப்படித் தீயது மற்றொருவருக்கு வழங்க முடியும்? ஒரு பொருள் என்னுடைய பொருளாக இருந்தால் தானே என்னால் அதனை மற்றவருக்கு வழங்க முடியும்?

எனவே உலகின் ஆட்சியை சாத்தான் வழங்க வல்லதாக இருக்கின்றது என்றால் உலகின் ஆட்சி யாரிடம் இருக்கின்றது என்றுப் பொருள்? தீமையிடம் அல்லவா இருக்கின்றது என்றுப் பொருள்!!! அது தான் நிலவரம்.

அன்பின் வழி ஆட்சி செய்ய வேண்டிய மனிதன் தீமைக்கு வீழ்ந்ததால் அவனது ஆட்சி இன்று தீமையின் வசம் இருக்கின்றது. மனிதன் அவனது ஆட்சியை தீமையிடம் இழந்து விட்டு நிற்கின்றான். இதனை நாம் இன்றைய உலகினைக் கண்டாலே அறிந்துக் கொள்ளலாம்.

இலட்சக்கணக்கான மனிதர்களைக் கொன்றவர்களும் பேராசை பொறாமை ஆகியத் தீய குணங்களை அடிப்படையாகக் கொண்ட மனிதர்களும் அரசுகளும் தான் இன்று ஆண்டுக் கொண்டு இருக்கின்றனர்.

அன்பிற்கு மாற்றாக பயமும் சுயநலமும் இன்று உலகத்தின் அடிப்படையாக இருக்கின்றன. தீமை உலகை ஆண்டுக் கொண்டு இருக்கின்றது.

இது தான் நிலவரம்.

மனிதன் அவனது ஆட்சியினை இழந்து விட்டான். அதனை மீட்டு எடுக்கத் தான் அவன் முயன்றுக் கொண்டு இருக்கின்றான். நிற்க.

இதுவரை மனிதன் அவனது ஆட்சியை இழந்தான் என்றும் இன்று தீமை தான் ஆண்டுக் கொண்டு இருக்கின்றது என்றும் கண்டோம்...இங்கே சில கேள்விகள் எழலாம், இவ்வளவு நடக்கும் பொழுது எல்லாம் உங்க எல்லாம் வல்ல இறைவன் எங்கே சென்றார் என்று....ஏன் இதனை எல்லாம் அவர் அனுமதித்தார் என்று?

அக்கேள்விகளுக்கு விடையினைக் காண நாம் நாம் ஒரு சூழலைக் காண வேண்டி இருக்கின்றது.

நமக்கு ஒரு மகன் இருக்கின்றான் என்று வைத்துக் கொள்வோம். ஒரு நல்ல பெற்றோராக நாம் அவனுக்கு நல்லவற்றை சொல்லிக் கொடுத்து அவனுக்குரிய சுதந்திரத்தையும் அவனிற்கு கொடுத்து வைப்போம். அது தான் கடமை. மேலும் ஒரு பெற்றோராக நமது பிள்ளை நல்லதே செய்வான் என்ற நம்பிக்கையுடனே இருப்போம். அவன் தவறு செய்தால் "தம்பி...நீ செய்வது தவறு" என்று அன்பின் அடிப்படையிலேயே கூறுவோமே தவிர அவனை வெறுக்க மாட்டோம். வேறு வழி இல்லை அவன் நமது பிள்ளை. அவனை நல்வழிக்கு கொண்டு வர நம்மால் இயன்ற அனைத்தையும் செய்வோம். ஆனால் நம்முடைய அன்பினை உணர்ந்துக் கொண்டு நல்வழிக்கு வருவதும் வராததும் முற்றிலும் அவனைப் பொறுத்தது. அந்த சுதந்திரம் நாம் அவனுக்கு வழங்கியது. எனவே அவனாக உணர்ந்து திருந்தினால் ஒழிய அம்மாற்றம் நிரந்திரமான உண்மையான மாற்றமாக இருக்காது. நல்ல குணங்கள் அவனுக்கு உள்ளே இருக்கின்றன...நிச்சயம் ஒரு நாள் அவன் திருந்தி வருவான் என்ற நம்பிக்கையுடனே தான் நாம் காத்து இருப்போம்.

அதே நிலைமை தான் இறைவனுக்கும். இறைவனால் நிச்சயம் மாற்ற முடியும்...ஆனால் அதற்காக சுய சிந்தனையையும் சுதந்திரத்தையும் மனிதர்களுக்கு அவன் வழங்கவில்லை...முடிவெடுக்கும் உரிமை நமக்கு இருக்கின்றது. அதனை வைத்து நாம் என்ன செய்யப் போகின்றோம் என்றே அவன் கவனித்துக் கொண்டு இருக்கின்றான்...வழி காட்டியவாறே. அவன் காட்டும் வழியினில் போவதும் போகாததும் நமது கைகளிலேயே இருக்கின்றன.

" இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர்." -மத்தேயு7:13

எனவே உலகை மாற்ற வேண்டும் என்றால் நாம் கேட்க வேண்டியக் கேள்வி இறைவன் என்ன செய்தான்/என்ன செய்வான் என்பதல்ல...மாறாக சகோதரர்களாக நாம் என்ன செய்யப் போகின்றோம் என்பதே ஆகும். காரணம் வழிகாட்ட அவன் தயாராக இருக்கின்றான் ஆனால் அன்பின் வழியாக பயணிக்க நாம் தயாராக இருக்கின்றோமா?

சரி இருக்கட்டும்...இன்னும் பல விடயங்களை நாம் காண வேண்டி இருக்கின்றது காண்போம்...!!!

தொடரும்...!!!

பி.கு:

1) வழக்கம் போல் உங்களின் கேள்விகளும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

1 கருத்துகள்:

//"மறுபடியும் பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து:
நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன் என்று சொன்னான்." - மத்தேயு 4:8-9
இங்கே தான் ஒரு கேள்வி...மனிதனுக்காக இறைவன் படைத்த உலகின் ஆட்சியை எப்படித் தீயது மற்றொருவருக்கு வழங்க முடியும்? ஒரு பொருள் என்னுடைய பொருளாக இருந்தால் தானே என்னால் அதனை மற்றவருக்கு வழங்க முடியும்?

எனவே உலகின் ஆட்சியை சாத்தான் வழங்க வல்லதாக இருக்கின்றது என்றால் உலகின் ஆட்சி யாரிடம் இருக்கின்றது என்றுப் பொருள்? தீமையிடம் அல்லவா இருக்கின்றது என்றுப் பொருள்!!! அது தான் நிலவரம்.//


இன்றைய உலகம் தீமையிடம் தான் உள்ளது என்பது மேலே உள்ள வசனங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். நீங்கள் கூறிய மத்தேயு வசனம் அவ்வாறு தான் கூறுகிறது. ஆனால் லூக்கா 4:5. பின்பு பிசாசு அவரை உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் ஒரு நிமிஷத்திலே அவருக்குக் காண்பித்து: 6. இவைகள் எல்லாவற்றின்மேலுமுள்ள அதிகாரத்தையும் இவைகளின் மகிமையையும் உமக்குத் தருவேன், இவைகள் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; எனக்கு இஷ்டமானவனுக்கு இவைகளைக் கொடுக்கிறேன்.
இவ்வாறு லூக்கா அவர்கள் எழுதி உள்ளார். இதில் நாம் அறிவது என்னவெனில் சாத்தானுக்கு இவ்வுலகம் ஒப்புகொடுக்கப்பட்டு உள்ளது அதாவது தீமையின் பிடியில் உலக மக்கள் அனைவரும் உள்ளனர் எனில் சாத்தனிடம்(தீமையிடம்) ஒப்பு கொடுத்தது யார்?

// "தம்பி...நீ செய்வது தவறு" என்று அன்பின் அடிப்படையிலேயே கூறுவோமே தவிர அவனை வெறுக்க மாட்டோம். வேறு வழி இல்லை அவன் நமது பிள்ளை. அவனை நல்வழிக்கு கொண்டு வர நம்மால் இயன்ற அனைத்தையும் செய்வோம்.//
ஒரு தந்தை தன் பிள்ளை தவறு செய்தால் முதலில் அன்பின் அடிப்படையிலும் பிறகு தவறு மேல் தவறு செய்தால் கண்டிப்பாகவோ அல்லது அடித்தும் கூட வளர்க்க வேண்டிவரும். அன்பின் அடிப்படையிலே மாற்ற நினைக்கலாம் என்பது நடவாத காரியம்...

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு