முந்தையப் பதிவு

சூத்திரம் 6: கடவுளை உணர இயலுமா?

உணர்வு உரு அசத்து எனின் உணராது இன்மையின்
இருதிறன் அல்லது சிவசத்தாம் என
இரண்டு வகையின் இசைக்கும் மன் உலகே.

பதவுரை:

உணர்வு உரு எனின் - (கடவுள்) ஐம்பொறிகளால் அளந்து அறிந்து உணரக்கூடிய உருவப் பொருளே என்றால்

அசத்து - நிலை இல்லாத அழியும் பொருள் ஆவான்

உணராது - கருவிகளால் உணர முடியாதவன் என்றால்

இன்மையின் - இல்லாத பொருள் ஆவான்

சிவசத்து - என்றும் நின்று நிலைபெறும் அன்பாகிய கடவுள்

இருதிறன் - உணரக்கூடியதும், உணரக் கூடாததும் ஆகிய இரண்டு தன்மைகளையும்

அல்லது என - அல்லாதவன் என்று

மன்உலகு - நிலைபேறுடைய மெய்யுணர்வு பெற்ற சான்றோர்கள்

இரண்டு வகையின் - இரண்டு வகையாலும்

இசைக்கும் - சொல்லுகிறார்கள்

விளக்கம்:

கடவுள் ஐம்பொறிகளால் அளந்து அறிந்து உணரக்கூடிய உருவப்பொருள் என்றால் உருவப் பொருள் யாவும் அழியக் கூடியதாய் இருப்பதைப் போன்று, கடவுளும் நிலை இல்லாத அழியும் பொருள் ஆவான். கடவுள் நமது கருவிகளால் உணர இயலாதவன் என்றால் இல்லாத பொருள் ஆவான். என்றும் நின்று நிலைபெறும் அன்பாகிய கடவுள், உணரக்கூடியதும், உணரக்கூடாததும் ஆகிய இரண்டு தன்மையையும் அல்லாதவன் என நிலைபேறுடைய மெய்யுணர்வு பெற்ற சான்றோர்கள் இரண்டு வகையாலும் சொல்கின்றார்கள். கடவுளுடைய அருள் பெற்றவர்களால் கடவுளை உணர இயலும். அருள் பெறாதவர்களால் கடவுளை உணர இயலாது.

கடவுள் உணர்த்தும் பொழுது மட்டுமே கடவுளை உணரக் கூடியது ஆன்மா என்பதாகப் பார்த்தோம். அப்படியானால் கடவுள் ஆன்மாவினால் உணரக்கூடிய பொருளா என்ற கேள்வி எழுகின்றது. கடவுள் உணரக்கூடிய பொருள் என்றால் அவனுடைய அழியாத்தன்மை கேள்விக்குரியதாக மாறி விடுகின்றது. எவ்வாறெனில், உலகத்துப் பொருள்களை எல்லாம் நமது ஐம்புலன்களால் கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்று அறிகின்றோம். அவ்வாறு அறியக்கூடிய பொருளாக, கடவுள் இருப்பானானால், உலகத்துப் பொருட்களைப் போல அவன் அழியக்கூடிய தன்மை உடையவன் என்று ஆகிறது. அது கடவுளுடைய தன்மைக்கு இழுக்காகும். கடவுள் அழியக்கூடிய பொருளாகிய அசத்து அல்லன். என்றும் அழியாப் பொருளாகிய சத்தாக நிற்பவனே கடவுள்.

அப்படியானால், கடவுள் அறிந்து உணர முடியாப் பொருளா? என்ற கேள்வி எழுகின்றது. அறிந்து உணர முடியாப் பொருள் என்றால் அப்படி ஒரு பொருள் உலகில் இருக்க இயலாது என்பது தெளிவு. ஆகவே கடவுள் இல்லாப் பொருளாகி விடுவான்.

உலகில் என்றும் நிலைபெறும் பெரியவர்களை இதைப் பற்றிக் கேட்டால், அவன் உணரக்கூடிய பொருளும் அல்லன்; உணர இயலாப் பொருளும் அல்லன்; உணர்தல், உணராமை ஆகிய இரண்டிற்கும் அப்பாற்பட்டு விளங்குபவன் கடவுள் என்று கூறுகின்றனர்.

இது எவ்வாறு பொருந்தும்? என்ற எண்ணம் ஏற்படலாம். அவன் தன்னை யாருக்கு உணர்த்துகின்றானோ அவர்களால் மட்டுமே அவனை உணர முடியும். மற்றவர்களால் அவர்கள் எவ்வளவு முயன்றாலும் அவனை உணர்தல் இயலாது.

இதே கருத்து கிருத்துவத்திலும் வருவது குறிப்பிடத்தக்கது.

// சகலமும் என் பிதாவினால் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது. பிதா தவிர வேறொருவனும் குமாரனை அறியான்; குமாரனும், குமாரன் எவனுக்கு அவரை வெளிப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனும் தவிர, வேறொருவனும் பிதாவை அறியான்.// - மத்தேயு 11:27

சிவம் என்பது அன்பைக் குறிக்கும்.

அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே!

அன்பு என்ற உணர்வைப் பெற்றவர்களுக்கே அதன் தன்மை விளங்கித் தோன்றும். அன்பை உணராதவர்களுக்கு அன்பை விளக்கிக் காட்டவோ, நிலை நிறுத்தவோ மற்றவர்களால் முடியாது. என்றும் நிலை பெற்று விளங்கும் கடவுளாகிய சத்துப் பொருளும் அன்பாகிய சிவசத்தாகவே இருக்கின்றது. ஆகவே கடவுளை உணரக்கூடியவன் என்றும், உணர இயலாதவன் என்றும் இரண்டு வகையாகக் கூறலாம் என நிலைப் பெற்ற பெரியோர் விளக்கிக் கூறுகின்றனர்.

தொடரும்....!!!

பி.கு:

1) ஆய்வாளர்.தெய்வநாயகம் என்பவரின் ஆய்வுகளில் இருந்து நான் அறிந்தவற்றையே இங்கே பதிவிட்டு இருக்கின்றேன்.

2) விவாதங்களும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

2 கருத்துகள்:

அருமையான பதிவு ----

அருமயான பதிவுகள்

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு