இன்றைக்கு தமிழகம் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கின்றது. தமிழ் நாட்டின் வளங்களும் வாழ்வாதாரங்களும் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. தமிழ் மொழியோ புறக்கணிக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றது. அதன் செல்வங்கள் மறைக்கப்பட்டும் அழிக்கப்பட்டும் இருக்கின்றன. இதனைக் தடுக்க வேண்டிய தமிழ் மக்களோ ஒரு புறம் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டு இருக்கின்றனர்...மற்றொரு புறமோ அவர்களுக்குள்ளேயே நான் உயர்ந்தவன் நீ தாழ்ந்தவன் என்று வேறுபாடுகளைக் கூறிக் கொண்டு சண்டையிட்டுக் கொண்டு இருக்கின்றனர். உண்மையிலேயே இக்கட்டான ஒரு நிலை தான்.

இந்நிலையில் தமிழர்களின் இத்தகைய நிலைக்கு காரணம் என்ன என்று நாம் தேடினோம் என்றால் விடை பிராமணர்கள்/ஆரியர்கள் என்றே வருகின்றது. அனால் இன்று தமிழர்கள் பலரே இக்கூற்றினை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்..."அட என்னங்க...எதுக்கு எடுத்தாலும் பிராமணன் தானா...இங்க ஒவ்வொரு சாதிக்காரனும் சாதி வெறி பிடித்து அடுத்த சாதிக்காரன் கூட சண்டை போடுறான்...அதுக்கு எப்படி பிராமணன் காரணமாக இருப்பான்?...பேராசை பிடிச்சி தமிழகத்தை சுரண்டுறது பல தமிழ் மக்கள் தான்...அதுக்கும் பிராமணனை குறைக் கூறினால் எவ்வாறு?" என்பதே அவர்களின் கருத்தாக இருக்கின்றது.

இப்பொழுது இவர்களின் இந்தக் கேள்விக்கே நாம் விடையினைத் தேட வேண்டி இருக்கின்றது.

தமிழர்கள் பல்வேறு சாதிகளாக பிரிந்து இருக்கின்றனர். சிலர் உயர்ந்த சாதிகள் என்றும் பலர் தாழ்ந்த சாதிகள் என்றுமே இன்று பிரிக்கப்பட்டு இருக்கின்றனர். இந்த ஏற்றத்தாழ்வுகள் மூலமாகத் தான் இன்று சாதிப் பிரச்சனைகள் பெரும்பாலும் எழுகின்றன. இப்பொழுது ஒரு கேள்வி...எதனால் ஒரு மனிதன் அவன் சாதியை உயர்ந்த சாதி என்று எண்ணுகின்றான்?

இறைவன் அவ்வாறு படைத்தான் என்று அவன் நம்புவதினால் அவன் அவ்வாறு எண்ணுகின்றான். அவன் அவ்வாறு இறைவன் சாதிகளைப் படைத்தான் என்று நம்புவதற்கு காரணம் அவனிடம் அவ்வாறு தான் கூறப்பட்டு இருக்கின்றது. அதனை அவன் கேள்வி கேட்காமல் நம்புகின்றான். அவ்வளவே. மாறாக அவன் அவனது சமய நூல்கள் அனைத்தையும் கற்று அதனில் அவனது சாதி உயர்ந்த சாதி என்று கூறப்பட்டு இருப்பதனால் அவன் உயர்ந்தவன் என்ற எண்ணத்தினைக் கொண்டு இருக்கவில்லை. அவ்வாறு அவன் அவனது சமய நூல்களில் மெய்யாகவே தேடி இருந்தான் என்றால் அவனுக்கும் சாதி ஏற்றத் தாழ்விற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதனை அவன் அறிந்து இருப்பான். ஆனால் நீங்களே எண்ணிப் பாருங்கள் இன்று எத்தனைத் தமிழர்களுக்கு அவர்களின் சமய நூல்களோ அல்லது கருத்துக்களோ தெரியும்? நூல்களின் பெயர்களே அறியாத தமிழர்கள் தான் அதிகம் இருக்கின்றனர்.

இந்நிலையில் அவனிடம் அவன் சாதி உயர்ந்த சாதி என்றுக் கூறப்படுகின்றது அவன் அதனை அப்படியே நம்புகின்றான். அவ்வாறு அவனிடம் கூறுபவர்கள்/கூறியவர்கள் யார்?

கோவிலைக் கைப்பற்றி அங்கே அமர்ந்துள்ள பிராமணர்கள். அவர்கள் அவ்வாறு ஏன் கூற வேண்டும்? இறைவன் மனிதனை வர்ணங்களாகப் பிரித்து உள்ளான் என்றால் அவர்களுக்கு இயல்பாகவே முதல் இடம் ஒதுக்கப்பட்டு விடும். மற்ற மக்கள் அனைவரும் அவர்களுக்கு கீழ் நிலையில் தான் இருப்பர். அதனால் அவர்கள் அவ்வாறு கூறுகின்றனர். இறைவன் கூறினான் என்றுக் கூறினால் மக்கள் ஏற்றுக் கொள்வர் என்பதனால் இறைவனின் பெயரினை பயன்படுத்தி மக்களை அவர்கள் பிரித்து வைக்கின்றனர்.

சைவ வைணவ சமயங்களுக்கு துளியும் தொடர்பில்லாத சாதி ஏற்றத் தாழ்வுக் கொள்கையை தங்களின் சுயநல ஆதிக்கத்திற்காக அச்சமயங்களுடன் சேர்த்து மக்களை அடிமைப்படுத்தி வைத்து இருக்கின்றனர். அதனால் தான் அவர்களை தமிழகத்தின் இழி நிலைக்கு காரணம் என்று சொல்கின்றோம். இங்கே நாம் மேலும் சில விடயங்களைக் காண்பது நலமாக இருக்கும்.

1) வரலாற்றில் இருந்து நாம் கி.பி 12 ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் தான் தமிழ் கோவில்கள் பிராமணர்களின் கீழ் போகின்றன என்றும் விசயநகர பேரரசில் தான் அனைத்து கோவில்களும் பிராமண மயமாக்கப் படுகின்றன என்றும் நாம் அறிகின்றோம். அதற்கு முன்னர் அக்கோவில்களில் பூசை செய்துக் கொண்டு இருந்தவர்கள் தமிழர்கள் தாம்.

இந்நிலையில் இன்று 'அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்' என்ற தமிழக அரசின் சட்டத்திற்கு பிராமணர்கள் உச்ச நீதி மன்றத்தில் தடை வாங்கி வைத்து இருக்கின்றனர். கேட்டால் மற்ற சாதியினர் அர்ச்சகர் ஆனால் தீட்டு பட்டுவிடுமாம். சைவ ஆகமங்களிலும் சரி ஏனைய சமய நூல்களிலும் சரி இன்ன சாதியினர் தான் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று எந்தக் குறிப்பும் இல்லாத பொழுது இவர்கள் எதன் அடிப்படையில் மற்ற சாதியினர் அர்ச்சகர் ஆவதை தடுக்கின்றனர்? மேலும் விசயநகர அரசின் காலத்தில் தான் இவர்களே கோவிலை தமிழர்களிடம் இருந்து கைப்பற்றி இருக்கின்றனர்...அப்படி இருக்கையில் அக்கோவில்கள் அதற்கு முன்பு வரை தீட்டுப் பட்டா இருந்தன?

அப்படி இருக்கையில் கோவிலில் வேற்று சாதியினரை விடாது இருப்பதன் காரணம் கோவிலின் மேல் தங்களுக்கு உள்ள பிடியினை விடக் கூடாது என்ற அரசியல் எண்ணம் தானே...இதனை அவர்களால் மறுக்க முடியுமா?

2) இராச இராச சோழன் காலத்திலும் அதனைத் தொடர்ந்த காலத்திலும் சரி கோவில்களில் தமிழ் ஒலிக்கப்பட்டுக் கொண்டு இருந்து இருக்கின்றது. இந்நிலையில் இன்று இவர்கள் தமிழை தீட்டு மொழி...நீச பாஷை என்று கூறுவதன் காரணம் என்ன?

சமசுகிருதம் போய் தமிழ் மீண்டும் வந்து விட்டால் கோவில்களில் இவர்களது செல்வாக்கு சரிந்து விடும் என்பதனாலா...இல்லை தமிழ் வெளிச்சத்திற்கு வந்து விட்டால் சைவ வைணவ சமயங்களை தாங்கள் அடிமைப்படுத்தி வைத்து இருக்கும் விடயம் வெளியே வந்து விடும் என்பதனாலா?

3) படித்தால் கேள்வி கேட்டு விடுவான் என்ற காரணத்தினாலேயே ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வி மறுக்கப்பட்டுக் கொண்டு வந்து இருக்கின்றது. இந்நிலையில் சுதந்திரம் பெற்ற பின்னர் இராசாசி என்ற பிராமணர் குலக் கல்வியினைக் கொண்டு வந்து 3000 பள்ளிகளை மூடியது எதனால்?

அவன் அவன் அவனவன் தொழிலைச் செய்ய வேண்டும் என்ற வர்ணாசிரம தர்மத்தினை நிலை நாட்டுவதற்குத் தானே...இதனை மறுக்க முடியுமா?

4) அக்குலக் கல்வி திட்டத்தினை ஒழித்து 6000 பள்ளிகூடங்களையும் இன்ன பல திட்டங்களையும் அமைத்து தமிழர்களின் வளமும் தரமும் வளர காரணமாக இருந்த காமராசரைக் கொல்ல பிராமணர்கள் முயன்றது ஏன்? (இதனைப் பற்றி மேலும் படிக்க இணைப்பு: காமராஜர் கொலை முயற்சி சரித்திரம் )

ஒரு தமிழனின் கீழ் தமிழர்கள் வளர்கின்றனரே என்பதினாலா அல்லது ஒரு சூத்திரன் அரசாள்வதா என்ற மனு தர்ம வெறியினாலா?

5) அவன் அவன் அவனவன் வேலையை செய்ய வேண்டும் என்று கூறுகின்றீர்...அப்படி என்றால் மந்திரம் ஓதுவது தானே உமது வேலை...அதை விட்டுவிட்டு அரசினை ஆள்வதற்கும் அரசாங்க பணிகளுக்கும் நீங்கள் ஏன் சண்டை இடுகின்றீர் என்று பிராமணர்களை காந்தி கேட்டதன் காரணமாகத் தான் அது வரை பிராமணர்கள் தூக்கி வைத்துக் கொண்டாடிய காந்தியை பிராமணர்களே கொலை செய்தார்கள் என்ற பெரியாரின் கூற்றினை மறுக்க முடியுமா?

6) ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் உரிமைகள் கிடைக்க இட ஒதுக்கீட்டை வ.பி. சிங் தலைமையிலான அரசு 1989 ஆம் ஆண்டு நிறைவேற்ற, அந்த ஒரே காரணத்திற்காக அவரது ஆட்சியை ஒரு வருடத்தில் கலைத்தனர் பிராமணர்கள் என்றும் இட ஒதுக்கீட்டின் மூலமாக, இது வரை எந்த மக்களின் வளர்ச்சியை தடுத்து பிராமணர்கள் பிழைப்பினை ஒட்டிக் கொண்டு இருந்தனரோ, அம்மக்களும் தமக்கு சமமாக வந்து விடுவர் என்று எண்ணியதினாலேயே 1991 இல் தனியார்மயக் கொள்கைக்கு குடைப்பிடித்து அமெரிக்காகாரனை இந்தியாவினுள் வர வைத்தனர் பிராமணர்கள் என்று நாம் கூறினால் அவர்களால் மறுக்க முடியுமா? இட ஒதுக்கீட்டுக் கொள்கை அமலுக்கு வந்ததற்கு பின்னர் பெருமளவு வேலைகள் தனியாருக்கு சென்றதற்கும், அரசாக செயல்பாடுகள் முடங்கியதற்கும் பிராமணர்களே காரணம் என்று நாம் கூறினால் அதனை மறுக்க முடியுமா? நாட்டினை விற்றாலும் விப்பேன் ஆனால் மற்ற மக்களோடு ஒருத்தனாய் இருக்க மாட்டேன் என்ற மனு தர்ம வெறி தானே இங்கே தெரிகின்றது?

இதோ 2010 இல் எடுத்த ஒரு ஆய்வு...தலைசிறந்த தனியார் நிறுவனங்களில் மேலான பதவிகளை வகிப்பவர்களில் 93% சதவீதம் பேர் உயர் சாதியினரே என்பதனை அந்த ஆய்வு சுட்டிக் காட்டுகின்றது (இவர்கள் இந்திய சனத்தொகையில் வெறும் 10% அவ்வளவே).

இதில் நாம் கவனிக்க வேண்டிய இன்னொமொரு விடயம் என்னவென்றால் சிரியன் கிருத்துவர்களும் உயர் சாதியாய் அறியப்பட்டு இருக்கின்றார்கள். இவர்கள் சிரியாவில் இருந்து இந்தியாவிற்கு வந்து தங்கியவர்களே அன்றி மதம் மாறியவர்கள் அல்ல. அவ்வாறு இருக்க எவ்வாறு அவர்கள் உயர் சாதியாய் இருக்கின்றனர் என்பதும் ஆய்வுக்கு உரியது.

பிராமணர்கள் எவ்வாறு தங்களின் செல்வாக்கு நீடித்துக் கொண்டே இருப்பதற்கு முயன்றுக் கொண்டே இருக்கின்றனர் என்பதற்கு இன்னும் பல விடயங்களையும் காரணங்களையும் நாம் கூறிக் கொண்டே போகலாம். அவ்வளவு இருக்கின்றன.

இத்தனைக் காரியங்களையும் அவர்கள் தைரியமாகச் செய்வதற்கு சமயங்கள் உதவி புரிகின்றன. அதனால் தான் சமயங்களின் மீது உள்ள பிடியினை அவர்கள் விட மறுக்கின்றனர். அவர்களுக்குத் தெரியும் சமயங்களின் மேல் உள்ள அவர்களது பிடி தமிழினாலும் தமிழர்களினாலும் மட்டுமே பறிபோகக் கூடும் என்று.

ஏன் என்றால் பிராமணர்களுக்கும் சைவ வைணவ சமயங்களுக்கும் யாதொரு தொடர்பும் இல்லை என்பதை தமிழ் உணர்த்திக் கொண்டு இருக்கின்றது. சமசுகிருதம் என்பது தேவ மொழி இல்லை என்பதை தமிழ் தான் தைரியமாக பறை சாற்றிக் கொண்டு இருக்கின்றது. அக்கருத்துக்கள் வெளியே வந்தால் நிச்சயமாக பிராமணர்களின் செல்வாக்கு சரியும்...அதனால் தான் அவர்களால் இயன்ற அளவு தமிழர்களையும் தமிழையும் ஒடுக்க முயன்றுக் கொண்டே இருக்கின்றனர்.

"விடுதலைப் புலிகள் தான் இராசீவ் காந்தியை கொன்றவர்கள்" என்று புலிகளின் மீது முதன் முதலில் பழியினைப் போட்டவர் சுப்பிரமணிய சுவாமி என்ற பிராமணர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. அதே சமயம் இராசீவ் காந்தியின் கொலையில் சுப்பிரமணிய சாமிக்கும் தொடர்பு இருக்கின்றது என்ற கூற்றும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இன்று தமிழ் இனம் படும் இன்னல்களுக்கு இதுவே தான் அடிப்படைக் காரணம். சண்டையிட்டுக் கொள்வது தமிழ் மக்கள் தான்...ஆனால் அவர்கள் சண்டையிட்டுக் கொள்வதற்கு காரணி அவர்கள் அல்ல. அவர்கள் அறியாமையில் வைக்கப்பட்டு இருக்கின்றனர். அடிமையாய் இருப்பதில் சுகம் கண்டு இருக்கின்றனர்.

இந்நிலை தொடரும் வரை தமிழ் இனம் எழப் போவது கிடையாது....பழம் பெருமை பேசிக் கொண்டே காலத்தினைக் கடத்த வேண்டியது தான். தமிழ் மக்கள் ஒன்றிணைந்தால் தான் தமிழ் இனம் விடுதலைப் பெரும். தமிழ் இனம் விடுதலைப் பெற்றால் தான் தமிழ் விடுதலைப் பெரும்...தமிழ் விடுதலைப் பெற்றால் தான் தமிழில் உள்ள அறிவியலும் ஆன்மீகமும் விடுதலைப் பெரும். அப்பொழுது தான் இந்திய தேசம் முழுவதும் இந்த சாதி ஏற்றத் தாழ்வு என்ற நோய் குணமாகும்.

அதற்கு தமிழ் இளைஞர்கள் முன் வர வேண்டும். தமிழ் வரலாறு, அறிவியல், ஆன்மிகம் போன்றவற்றினை மீட்டு மீண்டும் ஒரு நல்ல சமூகத்தினை கட்டமைக்க இன்றைய இளைஞர்கள் வர வேண்டும். 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற நமது கோட்பாட்டின் அடிப்படையில் வேற்றுமைகள் இல்லாது அன்பின் அடிப்படையிலும் சகோதரத்துவத்தின் அடிப்படையிலும் நமது வாழ்வினையும் சரி சமூகத்தினையும் அமைக்க வேண்டும். அக்கடமை தமிழ் இளைஞர்களின் கைகளிலேயே இன்று இருக்கின்றது.

நமது சமூகம் அன்பின் சமூகம்....இங்கே நமக்கு யாருக்கும் எதிரிகள் அல்ல...பிராமணர்களும் நமது எதிரிகள் அல்ல...அவர்களும் மனிதர்கள் தான். அனைத்து மனிதர்களும் சமம் என்று அவர்கள் கருதினால் பிரச்சனைகளே இல்லையே...அவர்கள் கருதாது இருப்பதினால் தான் பிரச்சனை. அப்பிரச்சனைகள் அனைத்திற்கும் முடிவினைக் கொண்டு வர தமிழால் இயலும். தமிழால் மட்டுமே இயலும்.

தமிழ் நமக்காக காத்து இருக்கின்றது. என்ன செய்ய போகின்றோம்... வெறும் தமிழ் பெருமையினைப் பேசிக் கொண்டு இருக்கப் போகின்றோமா இல்லை தமிழை வைத்து மாபெரும் சமூகத்தினைக் கட்டமைக்கப் போகின்றோமா?

என்ன செய்யப் போகின்றோம் நாம் என்பதில் அடங்கி இருக்கின்றது எதிர்காலம்.

இத்துடன் தமிழர்களின் சாதி ஏற்றத்தாழ்வினைக் குறித்த இந்தத் தொடர் ஒரு முடிவிற்கு வருகின்றது. தொடர்ந்து படித்தமைக்கு நன்றி.

தென்னாடுடைய சிவனே போற்றி....எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!!

பி.கு:

1) இது ஒரு தேடல் முயற்சியே...விவாதங்களும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

2) மேலும் பொதுவாக இன்றைக்கு சாதிய தலைப்புகள் எல்லாமே உணர்ச்சிகரமான தலைப்புகள்...எனவே இங்கே யார் மனதினையும் புண் படுத்த வேண்டும் என்ற நோக்குடன் எதுவும் எழுதப்படவில்லை என்பதை தாழ்மையுடன் தோழர்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

3) முந்தையப் பதிவுகள்: 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11

3 கருத்துகள்:

Pls continue... Don't stop... I don't have a tamil font... Sorry...

@ ஏழாம் அறிவு

We Still have many things to see my friend and we shall be seeing that in other series.

Thanks for ur comments!!!

தென்னாடுடைய சிவனே போற்றி....எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!!

ஈழத்தமிழர்கள் சிவனுக்குப்பதிலாக புத்தனயோ அல்லது அல்லாவையோ வணங்குவதற்கு முயற்சித செய்திருந்தால் நல்லா இருந்திக்கும்.

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு