ஆரியர்கள் என்பவர்கள் யார் என்றக் கேள்வியினை இன்று நம்மிடையே வைத்தோம் என்றால்... அவர்கள் நாடோடிகள், இயற்கை வழிப்பாட்டினைக் கொண்டு இருந்தவர்கள்...குதிரைகளை வைத்து இருந்தவர்கள்...வெளியே இருந்து இந்தியாவின் மீது போர் எடுத்து வந்து இந்திய மக்களை அடிமைப்படுத்தியவர்கள் என்றே விடைகள் வரும்.

சரியான விடைகள் தாம்...ஆனால் இங்கே நாம் கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால், ஆரியர்கள் என்று வழங்கப்பெருவோர் இந்தியாவின் மீது எக்காலத்தில் படை எடுத்து வந்தனர் என்பதனையே நாம் இங்கே காண வேண்டி இருக்கின்றது.

இன்றைக்கு இருக்கும் நம்பிக்கை ஆரியர்கள் என்பவர்கள் சிந்து சமவெளிக் காலத்திலேயே வந்து விட்டார்கள் என்பதே...ஆனால் அது தவறான கருத்து என்றும் ஆரியர்கள் என்பவர்கள் கி.மு ஐந்தாம் நூற்றாண்டில் இருந்து கி.பி ஏழாம் நூற்றாண்டு வரைக்கும் இந்தியாவின் மேல் படையெடுத்த பல்வேறு வேற்று இனத்தவர்களே என்று புதிய ஆராய்ச்சிகள் கூறிக் கொண்டு இருக்கின்றன. அதனைப் பற்றி நாம் விரிவாகப் முன்னரே கண்டு இருக்கின்றோம் என்பதனால் அதனைப் பற்றிச் நாம் இங்கே மீண்டும் காண வேண்டியதில்லை என்றே எண்ணுகின்றேன். இருந்தும் நண்பர்கள் அப்பதிவுகளையும் படித்து விடுவது நலமாக இருக்கும். (அப்பதிவுகள் : ஆரியர்கள் யார் -1 , ஆரியர்கள் யார் -2 )

சரி இப்பொழுது நாம் மீண்டும் மனு தர்மத்திற்கு வர வேண்டி இருக்கின்றது.

"கிழக்கு சமுத்திரம் தொடங்கி மேற்கு சமுத்திரம் வரையில் முன் சொன்ன மலைகளின் நடுப்பிரதேசமானது சாதுக்கள் வசிக்கின்ற ஆரியா வர்த்ததேசமென்று சொல்லப்படுகின்றது." - மனு அத்தியாயம் 2 - 22

"இப்படிப்பட்ட புண்ணிய தேசங்களை துவிஜர்கள் வேறு தேசத்திற் பிறந்தவராயினும் வந்தடைய வேண்டியது அல்லது சூத்திரன் ஊழியத் தொழிலை விட வேறு விர்த்தியை எந்த இடத்தில் அடைய மாட்டானோ அந்த இடத்தில் வசிக்கத்தக்கது" - மனு அத்தியாயம் 2 - 24

மேலே உள்ள மனு தர்ம வாக்கியத்தின் படி ஆர்ய வர்த்தம் எனப்படுவது இந்தியாவின் வட மேற்குப் பகுதியாகும்.



 

சரி இருக்கட்டும்...இப்பொழுது இன்னொரு வாக்கியத்தினையும் நாம் காண வேண்டி இருக்கின்றது.

"பிராமணனிடத்தில் வணங்காமையாலும் உபநய முதலிய கர்ம லோபத்தினாலும் மேற்ச் சொல்லும் சத்திரிய சாதிகள் இவ்வுலகத்தில் வர வர சூத்திரத் தன்மையை அடைந்தார்கள்." - மனு அத்தியாயம் 10 -43

"பௌண்டரம், ஒவண்டரம், திராவிடம், காம்போசம், யவனம், சகம், பாரதம், பால்கீகம், சீனம், கிராதம், தரதம், கசம் இந்தத் தேசங்களை ஆண்டவர்கள் அனைவரும் மேற்ச் சொன்னபடி சூத்திரளாகி விட்டனர்." - மனு அத்தியாயம் 10 -44

அதாவது பிராமணர்களை வணங்காமையினால் பல தேசங்கள் சூத்திரத் தன்மையை அடைந்து விட்டன என்றே மேலே உள்ள வாக்கியங்கள் கூறுகின்றன. அவ்வாறு அவர்கள் குறிப்பிட்டு உள்ள தேசங்களில் சில பெயர்கள் நமக்கு நன்கு பழக்கப்பட்ட பெயர்கள்

திராவிடம்
யவனம் - தமிழகத்தில் வந்திருந்த ரோமர்கள்/கிரேக்கர்கள் ஆகியோருக்கு தமிழில் வழங்கப்பட்ட ஒருச் சொல்.

இங்கே இன்னொரு இனத்தினையும் நாம் காண வேண்டி இருக்கின்றது. அவர்கள் சகர்கள்.

பொதுவாக இன்றைக்கு மனுதர்மம் எப்பொழுது இயற்றப்பட்டது என்றால், அது மனு என்ற மகானால் ஆதிக் காலத்தில் இயற்றப்பட்டது என்றே விடையினை சிலர் கூறுவர். ஆனால் நாம் இங்கே காண வேண்டியது என்ன வென்றால் சகர்கள் என்ற இனத்தினர் கி.மு முதலாம் நூற்றாண்டிலேயே தான் இந்தியாவினுள் நுழைகின்றனர்.

பல்வேறு காலங்களில் இந்தியாவின் வட மேற்குப் பகுதியில் நுழைந்த பல்வேறு நாடோடிக் கூட்டங்களில் சகர்களும் ஒருவர். மேலும் அவ்வாறு நுழைந்த பல்வேறு அன்னியர்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய ஆர்ய வர்த்தத்தில் சகர்களும் இருந்தனர் என்பதே ஆய்வாளர்களின் கணிப்பு. அப்படி இருக்கையில் ஆதி காலத்தில் வாழ்ந்த மனுவிற்கு கி.பி காலத்தில் இருந்த சகர்களைப் பற்றித் தெரிந்து இருப்பது ஆச்சர்யம் தான் அல்லவா? மேலும் திராவிடர்கள் வேறு தேசத்தினைச் சார்ந்தவர்கள் என்பதையும் நாம் இங்கே கவனிக்கத் தான் வேண்டி இருக்கின்றது. நிற்க.

இப்பொழுது நாம் மேலே உள்ள வாக்கியங்களை வரலாற்றின் அடிப்படையில் காண முயல்வோம். அதற்கு நாம் சில விடயங்களை அறிந்துக் கொள்வது பயனுள்ளதாக இருக்கும்.

1) நாடோடி இனத்தவர்கள் என்பவர்கள் பெரும்பாலும் இருவகைப்படுபவர்கள். ஒன்று உணவினைத் தேடி பயணம் மேற்கொள்பவர்கள். இரண்டாமவர்கள் இடத்தினைப் பிடிக்க ஊர் ஊராய் அலைபவர்கள். இவ்விரண்டு வகையினைச் சார்ந்தவர்களும் இந்தியாவினுள் கி.மு ஐந்தாம் நூற்றாண்டு முதல் கி.பி ஏழாம் நூற்றாண்டின் வரை வந்த வண்ணமே தான் இருந்து இருக்கின்றனர்.

2) இந்தியாவின் தெற்குப் பகுதியைப் போல் அல்லாது இந்தியாவின் வட மேற்குப் பகுதி பெரும்பாலும் அந்நியர்களின் ஆதிக்கத்திலேயே தான் இருந்து இருக்கின்றது. பெர்சியர்கள், கிரேக்கர்கள், குசானர்கள், ஹுன்னேர்கள் போன்றவர்கள் அங்கே ஆட்சியினைப் பிடித்து இருக்கின்றனர்.

3) அவ்வாறு அங்கே ஆண்ட வேற்று இனத்து மக்கள் காலத்தில் அங்கே ஏற்கனவே இருந்த இந்திய/ திராவிட மக்களுடன் சேர்ந்து தனி இனமாகவே உருவாகி விட்டனர். அதாவது மௌரியப் பேரரசன் பிரகரதத்தனைக் கொன்று ஆட்சியைப் பிடித்த பெர்சிய வம்சாவழியினைச் சார்ந்த புஷ்ய மித்திரனின் காலத்தில் பெர்சிய இனவழி மக்கள் இந்தியாவில் இருந்து தான் இருக்கின்றனர். அவனின் ஆட்சி தோற்கடிக்கப்பட்டப் பின்னும் அவர்கள் அங்கேயே இருந்து தான் வந்து இருக்கின்றனர். இதே கதை தான் மற்ற இன மக்களுக்கும். அவர்களுக்குள் ஒரு ஒற்றுமை என்னவென்றால் அவர்கள் அனைவரும் வெளியில் இருந்து வந்தவர்கள்.

4) அவ்வாறு இந்தியாவில் வந்து வாழ்ந்து இருக்கும் அம்மக்கள் இந்தியாவில் நிகழும் மாற்றங்களைக் கண்டுக் கொண்டே தான் இருந்து இருக்கின்றனர். அதுதானே வழக்கம்...நாம் வேறொரு நாட்டில் சென்றுத் தங்கும் பொழுது அந்நாட்டின் பழக்க வழக்கங்களை நாம் அறிந்துக் கொள்வது இயல்பு தானே. அவ்வாறு அந்த பல்வேறு இனக்குழுக்களுள் சில இந்திய மக்களைப் பற்றியும், அவர்களின் பழக்க வழக்கங்கள் பற்றியும், அவர்களுள் நிகழ்கின்ற மாற்றங்கள் பற்றியும் நன்றாக அறிந்துக் கொண்டு தான் இருக்கின்றன.

இந்நிலையில் வெளியில் இருந்து வந்து இந்தியாவில் தங்கி இருக்கும் அவர்களுக்கு இந்தியாவினை ஆளும் வாய்ப்பு கிடைத்தால் ஆள்வார்களா மாட்டார்களா? ஆள்வதற்கு முயல்வார்களா மாட்டார்களா? முயல்வார்கள் தானே. முன்னர் அதற்காக வந்த இனம் தானே அவர்கள்...முன்னர் தோற்றனர்...இப்பொழுது இங்கே இருக்கும் மக்களைப் பற்றி நன்றாக அறிந்து இருக்கின்றனர்...கூடுதலாக வேறு இன மக்களின் உதவி வேறு கிட்டும் என்றால் ஆள்வதற்கு முயல்வார்கள் தானே.

இப்பொழுது இந்தியாவில் இந்தியாவினைச் சார்ந்த மக்கள் (திராவிடர்கள்) இருக்கின்றனர். வேறு இடங்களில் இருந்து வந்த பல்வேறு இனக்குழுவினைச் சார்ந்த மக்கள் இருக்கின்றனர். இந்நிலையில் சண்டை என்று வந்தால் கூட்டணிகள் எவ்வாறு உருவாகும்?

அன்னியர்கள் எல்லாம் ஒன்றாக முயல்வர். அவற்றில் சில இனக்குழுக்கள் போரினை விரும்பாது நடுநிலையில் நிற்கும். சில குழுக்கள் இந்திய மக்களுக்கு ஆதரவுத் தெரிவிக்கும். இதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன தானே. இதன் அடிப்படையில் தான் நாம் மனு தர்மத்தின் வாக்கியத்தினைக் காண வேண்டி இருக்கின்றது.

இந்தியாவினுள் நுழைந்த பல்வேறு இனக் குழுக்களும் சில ஒன்றிணைந்து வடக்கில் இந்திய அரசனான ஹர்ஷவர்தனை சூழ்ச்சியால் கொன்று விட்டு வடக்கே ஆட்சியினைப் பிடிக்கின்றனர். அவர்கள் அவ்வாறு பிடித்த இடம் தான் ஆர்ய வர்த்தம். அக்காலம் கி.பி ஏழாம் நூற்றாண்டு. அவ்வாறு அவர்கள் பிடித்த இடத்தில் இருந்த மக்களுக்காக அவர்கள் தொகுத்தது தான் மனு நூல் என்ற சட்ட நூல். அது ஆர்யவர்தத்திற்கு வெளியே செல்லாது. அவ்வாறு ஆர்ய வர்தத்தினைப் பிடித்த ஆரியர்கள் தங்களுக்குள் வகுத்துக் கொண்டப் பிரிவுகள் தான் ஆர்யப் பிரோகிதர், சத்திரியர், வைசியர் ஆகியப் பிரிவுகள். அவர்கள் இந்தியாவில் பிடித்தப் பகுதிகளில் இருந்த இந்தியர்கள் அனைவரும் அடிமைகளாகிப் போனார்கள் என்றதன் படி அவர்கள் அனைவரும் சூத்திரர் என்று வழங்கப்பெற்றனர்.

மேலும் அந்த அந்நியக் குழுக்களுக்கு உதவாத வேறு இனக்குழுக்கள் எல்லாம் எதிரிகள் என்று முத்திரைக் குத்தப்பட்டன. அதனால் தான் தமிழகத்தில் இருந்த யவனர்கள் சூத்திரர்களாகி விட்டனர் என்று இருக்கின்றது.

அவ்வாறு வடக்கே ஆட்சியினைப் பிடித்த ஆரியர்களுக்கு இந்தியர்களை நன்றாகத் தெரியும்...வரலாறும் புரியும். எனவே வரலாற்றினை மாற்ற ஆரம்பிக்கின்றனர். இன்று நம்மிடையே இருக்கும் பல நூல்கள் பல இடைச் செருகல்களைக் கொண்டு விளங்குபவையே. மனு தர்ம நூல் கூட காலங்களில் பல்வேறு மாற்றங்களைப் பெற்றுத் தான் வந்துக் கொண்டே இருந்து இருக்கின்றது.

ஒரு இனத்தினைத் தோற்கடிக்க வேண்டுமானால் அவ்வினத்தின் வரலாற்றினை முதலில் மறைக்கவோ அல்லது அழிக்கவோ வேண்டும்...அது நமது மண்ணில் இன்று வரை வெற்றிகரமாக செய்யப்பட்டுக் கொண்டு வந்து இருக்கின்றது. சரி அது இருக்கட்டும்.

நம்முடையக் கூற்றின் படி கி.பி ஏழாம் நூற்றாண்டிற்குப் பின்னர் தான் மனு தர்மமும் சரி நான்கு வர்ணப் பிரிவுகளும் சரி நம் மண்ணில் அதுவும் குறிப்பாக ஆரிய வர்த்தத்தில் உருவாக்கம் பெறுகின்றன.

அக்காலத்தில் தான் அவை தோற்றமே பெறுகின்றன என்றால் அதற்கு முன்னர் இந்திய மண்ணில் சாதி ஏற்றத்தாழ்வுகளோ வர்ணப் பிரிவுகளோ இல்லை என்பது உறுதி தானே. அதுவும் குறிப்பாக தமிழகத்திற்கு சாதி ஏற்றத் தாழ்வு என்ற வியாதி அக்காலத்தில் வந்து இருக்கவே இல்லை என்பதும் உறுதி தானே.

இந்நிலையில் தமிழகத்திற்கு அவ்வியாதி எப்பொழுது வந்து இருக்கலாம் என்றே நாம் காண வேண்டி இருக்கின்றது.

காண்போம்...!!!

பி.கு:

1) இது ஒரு தேடல் முயற்சியே...விவாதங்களும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

2) மேலும் பொதுவாக இன்றைக்கு சாதிய தலைப்புகள் எல்லாமே உணர்ச்சிகரமான தலைப்புகள்...எனவே இங்கே யார் மனதினையும் புண் படுத்த வேண்டும் என்ற நோக்குடன் எதுவும் எழுதப்படவில்லை என்பதை தாழ்மையுடன் தோழர்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

3)  தொடர்புடைய பதிவுகள்:
ஆரியர்கள் யார் -1 
ஆரியர்கள் யார் -2
சமசுகிருதத்தின் காலம்
ஒரு கிரேக்கப் பயணியின் பயணக் குறிப்புகள்!!!
வேதங்கள் எனப்படுபவை யாதெனின் -1
வேதத்தில் பலியான கடவுள்
சமசுகிருதம் என்று ஒரு மொழி

1 கருத்துகள்:

இங்கு கிமு கிபி குழப்பஙகள் உளதே.....
///சகர்கள் என்ற இனத்தினர் கி.மு முதலாம் நூற்றாண்டிலேயே தான் இந்தியாவினுள் நுழைகின்றனர்./// கிபி 1ம் நூற்றாண்டிலேயே தான் இந்தியாவினுள் நுழைகின்றனர்?????

//நாடோடி இனத்தவர்கள் இந்தியாவினுள் கி.மு ஐந்தாம் நூற்றாண்டு முதல் கி.பி ஏழாம் நூற்றாண்டின் வரை வந்த வண்ணமே தான் இருந்து இருக்கின்றனர்.// கிபி ஐந்தாம் நூற்றாண்டு முதல் கி.பி ஏழாம் நூற்றாண்டின்.... என்று இருக்க வேண்டுமா????

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு