சைவ வைணவ சமயங்களைப் பற்றி சில கேள்விகளை சென்றப் பதிவினில் கண்டாயிற்று. இப்பொழுது கிருத்துவ சமயத்தினைப் பற்றியே நாம் காண வேண்டி இருக்கின்றது. (இதற்கு முந்தைய பகுதிகளைக் காண இச் சுட்டியினை சொடுக்கவும் - சமயங்கள்-முகப்பு)

இன்றைக்கு இறை நம்பிக்கை உள்ளவர்கள் அனைவரும் அவர்களின் சமயங்களில் வழங்கப்பெறும் நூல்களையே இறைவன் அளித்த நூல்கள் என்றும் அந்நூல்கள் இறவாத்தன்மை உடையன என்றுமே பெரும்பாலும் எண்ணிக் கொண்டு இருக்கின்றனர். இந்நிலையே இன்றைய கிருத்துவ சமயத்திலும் காணப்படுகின்றது. முரண்பாடுகள் எத்தனை இருந்தாலும் சரி அது இறை வாக்கு அதனை நாம் கேள்விக் கேட்க கூடாது என்ற எண்ணத்துடனே விவிலியத்தினை அவர்கள் காணுகின்றனர். ஆனால் நாம் அவ்வாறுக் கண்ணை மூடிக் கொண்டு செல்ல முடியாது…முரண்பாடுகள் இருக்கின்றன என்றால் அவை ஏன் இருக்கின்றன எதனால் இருக்கின்றன என்றே நாம் காண வேண்டி இருக்கின்றது…காண்போம்.

உலகத் தொடக்கம்:

1) பழைய ஏற்பாட்டின்படி முதல் மனிதன் ஆதாம் என்றும் முதல் பெண் ஏவாள் என்றும் அழைக்கப் படுகின்றனர்…மேலும் வெள்ளத்தில் பிழைத்த மனிதன் நோவா என பெயர் கொண்டவனாக இருக்கின்றான். ஆனால் இதே படைப்புக் கதை விவிலியம் தொகுக்கப் படுவதற்கு வெகு காலங்கள் முன்னரே சுமேரிய/பாபிலோனிய இலக்கியங்களில் காணப்படுகின்றதே… அதனில் முதல் மனிதனின் பெயர் ஆதப்பா என்றும் வெள்ளத்தில் இருந்து பிழைத்த மனிதனின் பெயர் ஊத் நா பிச்டிம் என்றும் இருக்கின்றதே அது ஏன்? விவிலியத்தில் இருப்பது அனைத்தும் உண்மை என்றால் ஏன் இந்தப் பெயர் வித்தியாசங்கள்?

2) ஆதியாகமத்தில் இறைவன் கிழக்கே ஏதேன் என்ற தோட்டத்தினை உருவாக்கி அங்கே முதல் மனிதனை வைத்தார் என்ற செய்தி வருகின்றது. நமது உலகமோ உருண்டை…மேலும் இறைவனுக்கு ஏது கிழக்கு மேற்கு? அவ்வாறு இருக்க அங்கே கிழக்கு என்று குறிப்பாக குறிக்கப்பட்டு இருப்பதற்கு காரணம் என்ன?

விவிலியம் தொகுக்கப்பட்டது மத்திய ஆசிய நிலப்பரப்பில்…எனவே அந்த இடத்திற்கு கிழக்கே இருந்த பகுதியில் இறைவன் மனிதனைப் படைத்தார் என்ற பொருள்பட ‘கிழக்கு’ என்றச் சொல் பயன் படுத்தப்பட்டு இருக்கின்றது என்று நாம் கருத முடியும் தானே?

பார்க்க: (உலகின் தோற்றம் , ஆதாம் என்ற தமிழன், நோவாவின் கதை)

3) //இரண்டாம் ஆற்றுக்குக் கீகோன் என்று பேர், அது எத்தியோப்பியா தேசம் முழுவதையும் சுற்றி ஓடும்.// – ஆதியாகமம் 2-13

எத்தியோப்பியா என்ற தேசம் உலகத் தொடக்கம் முதலேவா இருந்து வந்தது? அப்படி இருந்தால் அப்பிரதேசமோ சரி சுமேரிய/பாபிலோனிய இடப் பிரதேசங்களோ வெள்ளத்தால் அழிந்தமைக்கு சான்றுகள் இல்லையே…அவ்வாறு இருக்க அந்த இடம் தான் இறைவன் மனிதனைப் படைத்த இடம் என்றுக் கூறுவது எவ்வாறு?

மேலும் மத்திய ஆசிய நிலப்பரப்பில் காணப்படும் நாகரீகங்களின் காலங்களை விட மிகப் பழைய நாகரீகங்கள் தமிழகத்தில் காணப்படுவதன் காரணம் என்ன?

4) //பின்பு அவனுடைய சகோதரனாகிய ஆபேலைப் பெற்றாள்; ஆபேல் ஆடுகளை மேய்க்கிறவனானான், காயீன் நிலத்தைப் பயிரிடுகிறவனானான்//

//இன்று என்னை இந்தத் தேசத்திலிருந்து துரத்திவிடுகிறீர்; நான் உமது சமுகத்துக்கு விலகி மறைந்து, பூமியில் நிலையற்று அலைகிறவனாயிருப்பேன்; என்னைக் கண்டுபிடிக்கிறவன் எவனும் என்னைக் கொன்றுபோடுவானே என்றான்.//

உலகத் தொடக்கத்திலேயே மனிதன் ஆடுகளை மேய்க்கவும் விவசாயம் பண்ணவும் அறிந்துக் கொண்டானா? விவிலியத்தின் படி ஆதாமுக்கு இரு மகன்கள் பிறக்கின்றனர்…அதில் ஒருவன் மற்றொருவனைக் கொன்று விடுகின்றான். அவ்வாறு இருக்க காயின் உலகின் மற்ற மக்கள் என்னைக் கொன்றுப் போடுவார்கள் என்றுக் கூறுவது போல் வருகின்றதே அது ஏன்? மற்ற மக்கள் எங்கே இருந்து வந்தனர்? எப்பொழுது வந்தனர்?

5) //அந்நாட்களில் இராட்சதர் பூமியிலே இருந்தார்கள்; பின்பு தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளோடே கூடுகிறதினால், இவர்கள் அவர்களுக்குப் பிள்ளைகளைப் பெற்றபோது, இவர்களும் பூர்வத்தில் பேர்பெற்ற மனுஷராகிய பலவான்களானார்கள்.//

இராட்சசர்கள் பூமியில் இருந்தனர் என்றால் அவர்களைப் படைத்தது யார்? அவர்கள் என்னவானார்கள்?

ஆபிரகாமும் ஊரும்:


1) ஆபிரகாம் ஊர் என்ற இடத்தில் இருந்து கிளம்பினான் என்றச் செய்தி விவிலியத்தில் வருகின்றது…(ஆதியாகமம் – 11: 28:31).

நாம் முன்னரே கண்டு இருக்கின்றோம் ஊர் என்பது சுமேரியாவில் இருந்த ஒரு ஊரின் பெயர் என்று. மேலும் ‘ஊர்’ என்றச் சொல் எந்த மொழிச் சொல் என்றும் நமக்கு வேறு யாரும் சொல்ல வேண்டியதில்லை. மேலும் சுமேரியர்கள் தமிழர்களே என்றே இன்றைக்கு ஆராய்ச்சிகள் பலவும் கூறுகின்றன? இந்நிலையில் ஆபிரகாம் யார்? தமிழனா?


பார்க்க: (யாகோவா, எல் என்றொரு கடவுள், மேசொபோடமியர்கள் தமிழர்களா)

2) ஒருவனுக்கு ஒருத்தி என்பதே புதிய ஏற்பாட்டின் கருத்து…அதையே தான் இயேசுவும் கூறுகின்றார்… ஆனால் ஆபிரகாமிற்கு மூன்று மனைவிகள் கூறப்பட்டு உள்ளனரே… ஒருவர் சுமேரியாவைச் சார்ந்தவர், மற்றொருவர் எகிப்தினைச் சார்ந்தவர்…மற்றொருவர் கிழக்கில் இருந்து வந்தவர் என்று இருக்கின்றதே… மீண்டும் கிழக்கு வருகின்றது… கிழக்கு என்றால் என்ன? சிந்து சமவெளியா? மேலும் ஆபிரகாம் செய்ததற்கு மாறாக கிருத்து கூறுகின்றாரே… அது ஏன்?

மோசே:

1) இன்றைக்கு இராசபக்சே ஒரு இனவெறி பிடித்த கொலைகாரன் அவ்வளவே…அதில் மாற்றுக் கருத்துக்கள் மனசாட்சியுடன் இருப்பவர்களுக்கு நிச்சயம் இருக்காது. ஆனால் அவனையும் மிஞ்சிய செயலை செய்தவனாக அல்லவா மோசே இருக்கின்றான்…

//எண் 31:17,18- ஆகையால் குழந்தைகளில் எல்லா ஆண் பிள்ளைகளையும், திருமணமான எல்லா ஸ்திரீகளையும் கொன்று போடுங்கள். கல்யாணமாகாத கன்னிப்பெண்களை உங்களுக்காக உயிரோடு வையுங்கள்//

இதற்கு என்ன விளக்கம் கூற முடியும்? இறைவன் கூறினார் என்றா? இவ்வாறு மனசாட்சி இல்லாத இறைவனா அவரது மகனையே மக்களுக்காக பலியாக்க அனுப்புவார்?

2) “எனக்கு முன்னே வந்தவர்களெல்லாரும் கள்ளரும் கொள்ளைக்காரருமாயிருக்கிறார்கள்; ஆடுகள் அவர்களுக்குச் செவிகொடுக்கவில்லை” (யோவான் 10:8) என்று இயேசு கூறியது யாரை?

//அதற்கு அவர்: உங்கள் மனைவிகளைத் தள்ளிவிடலாமென்று உங்கள் இருதயக்கடினத்தினிமித்தம் மோசே உங்களுக்கு இடம் கொடுத்தார்; ஆதிமுதலாய் அப்படி இருக்கவில்லை// மத்தேயு 19:8

இதன்படி இறைக் கருத்துக்கு மாறாக மோசே செயல் பட்டு இருக்கின்றார் என்று நாம் அறிகின்றோம்? ஏன் அவ்வாறு அவர் செயல்பட்டார்? இப்படி இருக்க அவர் செய்ததை எல்லாம் எப்படி நாம் இறைவன் கூறியதாக ஏற்றுக் கொள்ள முடியும்?

புதிய ஏற்பாடு:

1) பழைய ஏற்பாடு யூதர்களின் நூல் என்றும் அது யூத இனத்தினைச் சார்ந்தவர்களின் கண்ணோட்டத்தில் அவர்களின் வரலாற்றையும் கருத்துக்களையும் கொண்டு உள்ளது என்றே நாம் கூறுகின்றோம். சிலர் மறுக்கின்றனர்…அதற்கு அவர்கள் காட்டும் வசனம்,

//நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன்.// மத்தேயு 5: 17

புதிய ஏற்பாட்டினில் இயேசு இவ்வாறு கூறுகின்றது போல் வருகின்றது, இதனை அடிப்படையாகக் கொண்டு பழைய ஏற்பாட்டிற்கு ஆதரவாக பேசும் மக்கள் ‘இதோ இயேசுவே பழைய ஏற்பாட்டுக் கருத்துக்களை அழிப்பதற்கு அல்ல நிறைவேற்றவே வந்தேன் என்றுக் கூறி இருக்கின்றாரே….பின்னர் எவ்வாறு பழைய ஏற்பாடு கிருத்துவர்களுக்கு தொடர்பில்லாத ஒன்றாகும்” என்றுக் கேட்கின்றனர். சரியான கேள்வி தான், ஆனால் இயேசுவின் பின் வரும் கருத்துக்களோ முற்றிலும் பழைய ஏற்பாட்டிற்கு மாறாக அல்லவா உள்ளன…

//தன் மனைவியைத் தள்ளிவிடுகிற எவனும் தள்ளுதற்சீட்டை அவளுக்கு கொடுக்கக்கடவன் என்று உரைக்கப்பட்டது.// (பழைய ஏற்பாட்டுக் கருத்து)

//32. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; வேசித்தன முகாந்தரத்தினாலொழிய தன் மனைவியைத் தள்ளிவிடுகிறவன், அவளை விபசாரஞ்செய்யப்பண்ணுகிறவனாயிருப்பான்; அப்படித் தள்ளிவிடப்பட்டவளை விவாகம் பண்ணுகிறவனும் விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான்.// (இயேசுவின் கருத்து)

//கண்ணுக்குக் கண், பல்லுக்கு பல் என்று உரைக்கப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.// (பழைய ஏற்பாட்டுக் கருத்து)

//39. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்; ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு.// (இயேசுவின் கருத்து)

//உனக்கடுத்தவனைச் சிநேகித்து, உன் சத்துருவைப் பகைப்பாயாக என்று சொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.// (பழைய ஏற்பாட்டுக் கருத்து)

//44. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்.//(இயேசுவின் கருத்து)

இந்த வசனங்களின் மூலம் பழைய ஏற்பாட்டுக் கருத்துக்கள் தவறென்றும் அதற்கு பதிலாக வேறு கருத்துக்களை இயேசு கருதி கூறி இருப்பது தெளிவாகின்றது. அது ஏன்? இறைவனின் கருத்துக்கள் மாறிக் கொண்டே இருக்குமா? இல்லை தானே… அப்படி இருக்க இயேசு பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டுள்ள கருத்துக்களை மறுத்ததன் காரணம் என்ன?

(மேலும் படிக்க - பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும்)

மரியாள் வணக்கம்:


விவிலியத்தின் படி இறைவன் மூன்று நிலைகளில் விளங்குகின்றான். அவனைத் தவிர வேறு இறைவன் கிடையாது. இந்நிலையில் எவ்வாறு மரியாள் வணக்கம் கிருத்துவத்தின் ஒரு பகுதியாயிற்று? எப்பொழுது அது ஒரு பகுதியாயிற்று?

கான்சுடன்டைன் காலத்திற்கு முன்னர் மரியாள் வணக்கம் கிருத்துவர்களின் மத்தியில் இருந்தமைக்கு சான்றுகள் ஏதேனும் இருக்கின்றனவா?

இயேசுவின் சீடர்கள் மரியாளை இறைவனாக குறிக்கும் வண்ணம் குறிப்புக்கள் ஏதேனும் எழுதிச் சென்று இருக்கின்றனரா? அவ்வாறு ஏதும் இல்லாத நிலையில் எவ்வாறு மரியாள் இறைவனாக்கப்பட்டார்? பெண் தெய்வங்களைக் கொண்ட நாகரீகங்களைக் கவர கான்சுடன்டைனால் பயன்படுத்தப்பட்ட ஒரு யுக்தியா இது?

தொடரும்...!!!

பின்குறிப்பு:

1) இத் தொடர் ஒரு தேடல் முயற்சியே...மாற்றுக் கருத்துகளும் விவாதங்களும் வரவேற்கப்படுகின்றன.

0 கருத்துகள்:

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு