ஆரம்ப காலத்தில் கிரிக்கெட் விளையாட்டிற்கு இன்று இருக்கும் இதே அளவு செல்வாக்கு இருந்ததா என்றுத் தெரியவில்லை. நான் அறிந்த வரையில் பள்ளியில் உள்ள விளையாட்டு ஆசிரியர்கள் எவரும் கிரிக்கெட்டுக்கு அதிக முக்கியத்துவம் தந்தது கிடையாது. அவர்களைப் பொறுத்த வரை அது சோம்பேறிகளின் விளையாட்டு. மேலும் அக்காலத்தில் இந்தியாவில் ஹாக்கி விளையாட்டு தான் மிகவும் சிறப்பான ஒன்றாக விளங்கிக் கொண்டு இருந்தது.

1928 ஆம் ஆண்டில் தொடங்கி 1956 ஆம் ஆண்டு வரை தான் கலந்துக் கொண்ட அனைத்து ஒலிம்பிக் போட்டிகளிலும் தங்கத்தினை வாங்கிக் குவித்தது இந்திய ஹாக்கி அணி. உலகைப் பொறுத்தவரை ஹாக்கி என்றால் இந்தியா... இந்தியா என்றால் ஹாக்கி. தொடர்ச்சியாக மொத்தம் 6 ஒலிம்பிக் தங்கங்கள். ஹாக்கி இந்தியாவின் தேச விளையாட்டானது. இன்றுவரை ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு அதிகமான பதக்கங்களை வாங்கித் தந்துள்ள விளையாட்டும் அது தான். ஹாக்கி மூலமாக நமக்கு கிட்டிய கடைசி தங்கப் பதக்கம் 1980 ஆம் ஆண்டில் மாஸ்கோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் கிட்டியது. அதற்கு பின்னர் ஹாக்கி விளையாட்டிற்கு இந்தியாவில் இறங்கு முகம் தான். காரணம் எது வேண்டும் என்றாலும் இருக்கலாம்... அரசாங்கத்தின் கவனக்குறைவு, அரசியல் காரணங்கள்... எதுவேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் என்னுடைய கவனம் ஏனோ 1983 ஆம் ஆண்டில் கிரிக்கெட் அணி பெற்ற உலகக் கோப்பை வெற்றியின் மீதே செல்கின்றது. அது சரியானதாகவும் இருக்கலாம் அல்லது தவறான ஒன்றாகவும் இருக்கலாம்.... இருந்தாலும் என்னுடைய எண்ணங்களை இங்கே உங்களுடன் பகிர்ந்துக் கொள்ளவே எண்ணுகின்றேன்.

பிசிசிஐ இன் சார்பாக விளையாடி வந்த கிரிக்கெட் அணிக்கு 1983 ஆம் ஆண்டிற்கு முன்னர் வரை எந்த ஒரு மாபெரும் வெற்றியும் கிட்டியதில்லை என்பதே வரலாறு. ஆனால் 1983 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஒரு மாபெரும் மாற்றம் கிரிக்கெட் விளையாட்டிற்கு நேர்ந்து தான் இருக்கின்றது. காரணம் உலக கோப்பையை அந்த அணி வென்று விட்டது. போதாதா? பார்ப்பன‌ர்களின் ஆதிக்கத்தில் உள்ள நாட்டில் பார்ப்பன‌ர்களின் ஆதிக்கம் இல்லாத விளையாட்டான ஹாக்கியே அனைத்து வெற்றிகளையும் பெற்றுக் கொண்டு இருந்த பொழுது முதல் முறையாக பார்ப்பன‌ர்களின் ஆதிக்கத்தில் உள்ள ஒரு விளையாட்டு மாபெரும் வெற்றியினைப் பெற்று இருக்கின்றது. இது ஒன்று போதாதா கொண்டாடுவதற்கு. பார்ப்பன‌ர்கள் அதிகம் உள்ள அணியான பிசிசிஐ-யின் கிரிக்கெட் அணியை தலையில் தூக்கிக் கொண்டு ஆட ஆரம்பித்தன பார்ப்பன‌ர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்கள்... அவை பத்திரிக்கை ஊடகங்களாக இருக்கட்டும் அல்லது காட்சி ஊடகங்களாக இருக்கட்டும்... பிரச்சனை இல்லை... "இந்திய அணி வென்று விட்டது... உலகை இந்தியா வென்று விட்டது... நாம் உலகில் சிறந்தவர்கள்... கொண்டாடுங்கள்" என்றே அவை கிரிக்கெட்டின் வெற்றியை கொண்டாட ஆரம்பித்தன.

அதாவது பார்ப்பன‌ர்களின் ஆதிக்கத்தில் உள்ள ஒரு விளையாட்டு பெற்ற வெற்றியினை பார்ப்பன‌ர்களின் ஆதிக்கத்தில் உள்ள ஊடகங்கள் பெரிதுபடுத்த ஆரம்பிக்கின்றன... இன்றும் பெரிதுப்படுத்திக் கொண்டே இருக்கின்றன. காலங்களில் நாம் தெளிவாகக் கண்டோம் என்றால் இந்தியாவில் உள்ள ஊடகங்கள் அனைத்தும் பார்ப்பன‌ர்களாலோ அல்லது பார்ப்பன‌ர்களைச் சார்ந்தவர்களாலோ கைப்பற்றப்பட்டே இருக்கின்றன என்பது நமக்குப் புலனாகும். அந்த ஊடகங்களின் வலிமையை வைத்தே இன்றும் அவர்கள் பல காரியங்களைச் செய்துக் கொண்டே இருக்கின்றனர். சரி இருக்கட்டும்.

1983 ஆம் ஆண்டு பிசிசிஐ-யின் கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வெல்கின்றது. பார்ப்பன‌ர்களின் ஆதிக்கத்தில் உள்ள ஒரு அணி வென்றதால் பார்ப்பன‌ர்களின் ஆதிக்கத்தில் உள்ள ஊடகங்கள் அதனைப் பெரிதுபடுத்தி மக்களின் மத்தியில் கொண்டு செல்கின்றனர். அங்கே ஆரம்பிக்கின்றது வேலை. கிரிக்கெட் அனைத்து ஊடகங்களிலும் முன்னிலைப்படுத்தப்படுகின்றது. மற்ற விளையாட்டுக்கள் பின்னால் தள்ளப்படுகின்றன. விளையாட்டு என்றால் கிரிக்கெட் தான் என்ற அளவுக்கு கிரிக்கெட்டும் சரி கிரிக்கெட் வீரர்களும் சரி மக்களுக்கு ஊடகங்களால் அறிமுகப்படுத்தப்படுகின்றனர்.

உதாரணமாக, பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 1983 ஆம் ஆண்டு கிரிக்கெட் அணி உலகக் கோப்பையில் பெற்ற வெற்றியை பாடமாகவே வைத்து இருக்கின்றனர் (Matriculation Syllabus English Subject - The Cup Of joy) என்பதனை நாம் அறிவோம். அதாவது தொடர்ந்து ஆறு முறை ஒலிம்பிக் போட்டிகளில் தங்கத்தினை வென்ற ஹாக்கி அணியைப் பற்றியோ அல்லது அந்த வரலாற்றினைப் பற்றியோ ஒருவன் அறிந்து கொள்ளவில்லை என்றால் யாதொரும் பிழையும் இல்லை. ஆனால் தனியார் நிறுவனமான பிசிசிஐ வென்ற கிரிக்கெட் போட்டியினைப் பற்றி அவன் நிச்சயம் அறிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் கிரிக்கெட் ஒன்று தான் விளையாட்டு என்று அவன் அறிந்து கொள்ள வேண்டும். அவ்வளவே...!!!

இது தான் அரசியல். இக்காலத்தில் தான் கிரிக்கெட் என்பது ஒரு விளையாட்டு என்பதைத் தாண்டி ஒரு தேச அடையாளமாக மக்களின் மத்தியில் புகுத்தப்பட்டது. எந்த ஊடகத்தினை எடுத்தாலும் கிரிக்கெட்... கிரிக்கெட் ...மேலும் கிரிக்கெட்...!!! ஊடகங்கள் என்பன ஒரு மாபெரும் சக்தியினை உடையவை... மக்களின் மத்தியில் ஒரு கருத்தினை பரப்பவும் அவர்களால் முடியும்; ஒரு கருத்தினை அழிக்கவும் அவர்களால் முடியும். அவற்றின் வலு அப்பேர்ப்பட்டது. அத்தகைய ஊடகங்களின் துணை இன்றி மற்ற விளையாட்டுகள் மக்களின் மத்தியில் இருந்து சிறிது சிறிதாக விடைபெற கிரிக்கெட் தனது இருப்பை வலு பெற செய்து கொண்டது. வேறு விளையாட்டுக்கள் இந்தியாவில் இருக்கலாம்... பிழையில்லை... ஆனால் அவை கிரிக்கெட் அளவிற்கு வளரக் கூடாது. அவ்வளவே. இதில் ஊடகங்கள் தெளிவாக இருந்தன... இருக்கின்றன. நிற்க.

இவ்வாறே மற்ற விளையாட்டுகளைப் பின் தள்ளி ஊடகங்களின் துணையோடு பார்ப்பன‌ர்களின் கையில் உள்ள விளையாட்டான கிரிக்கெட் தனியாரின் வசம் இருந்தும் தேச விளையாட்டாக கருதப் பெறும் அளவிற்கு புகழ் பெறுகின்றது. பார்ப்பன‌ர்களைத் தாங்கிப் பிடிக்கும் அரசும் மற்ற விளையாட்டினை வளர்க்காமல் கிரிக்கெட்டுக்கே பல்லவி பாடிக் கொண்டு இருக்கின்றது.

இந்நிலையில் இன்றைக்கு இந்தியாவின் விளையாட்டு என்றால் கிரிக்கெட் என்றே வழங்கப்பெறும் காலக்கட்டத்தில், இந்தியாவில் உள்ள மக்கள் அனைவரையும் குறிக்கும் ஒரு அணியாக இந்த கிரிக்கெட் அணி திகழ வேண்டுமானால் அதில் இன்று இருக்கும் இட ஒதுக்கீட்டு நிலை (70% இடங்களை பார்ப்பன‌ர்களே பிடித்து இருக்கும்) மாறி மக்கள் அனைவரையும் சமமாக திறமையின் அடிப்படையில் தேர்ந்து எடுக்கும் இட ஒதுக்கீட்டு முறை கொண்டு வரப்பட வேண்டும் தானே. அவ்வாறு கொண்டு வரப்படாவிடில் பிசிசிஐ என்பதன் அர்த்தத்தை பார்ப்பன‌ர்களின் கட்டுப்பாட்டில் இந்திய கிரிக்கெட் (Brahmins Control Cricket in India) என்றே நாம் வைத்துக் கொள்ளலாம் தானே.

சில கேள்விகளும் பதில்களும்:

1) பார்ப்பன‌ர்களின் ஆதிக்கத்தில் இருக்கின்றது என்ற ஒரே காரணத்தினாலேயே இந்திய அரசு கிரிக்கெட் விளையாட்டினை இந்தளவு ஆதரிக்கின்றது என்று நீங்கள் கூறுகின்றீர்கள்? ஏன் அதனை வீரர்களின் திறமையை அரசாங்கம் ஆதரிக்கின்றது என்று நாம் கருதக் கூடாது. ஏன் வீணாக சாதியினை இங்கே கொண்டு வர வேண்டும்?

திறமையினை அரசாங்கம் ஆதரிக்கின்றது என்றால் அனைத்து வகையான விளையாட்டுகளிலும் உள்ள வீரர்களின் திறமைகளையும் அது ஆதரித்து இருக்க வேண்டும். அவ்வாறு இருந்து இருந்தால்

1.       தடகளப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தினை வென்ற சாந்தி இன்று செங்கல் சூளையில் பணி செய்து கொண்டு இருக்க மாட்டார்

2.       தனக்கு பதக்கத்தினைப் பெற்றுத் தந்த வில்லினை தேசிய வில் வித்தை வீராங்கனையான நிஷா ராணி தத்தா விற்று இருக்க மாட்டார்

3.       கபடி உலகக் கோப்பையை வென்ற இந்தியக் கபடி வீரர்கள் வரவேற்க ஆட்கள் யாரும் இன்றி தானியங்கியில் தமது சொந்த செலவினில் சென்று இருக்க மாட்டார்கள்.

இன்னும் பல உதாரணங்களைக் கூறிக் கொண்டே போகலாம். சற்று கவனித்துப் பார்த்தோம் என்றால் மேலே நாம் கண்டவர்கள் யாரும் பார்ப்பன‌ர்கள் அல்லர். இந்நிலையில் பார்ப்பன‌ர்கள் கையில் உள்ள விளையாட்டும் சரி விளையாட்டு வீரர்களும் சரி செல்வ செழிப்போடு இருக்கும் பொழுது பார்ப்பன‌ர்கள் அல்லாதோர் விளையாடும் விளையாட்டுக்களும் சரி, அந்த வீரர்களும் சரி கவனிப்பாரின்றி இருக்கின்றனர். இதற்கு என்ன காரணம் என்று நீங்கள் கூறுவீர்.

2) என்ன காரணமா...அரசாங்கம் தான் காரணம்? அரசாங்கம் கவனிக்காததற்கு பார்ப்பன‌ர்களைக் குறை கூறுவது எங்கனம் நியாயம்?

அரசாங்கம் காரணம் என்றால் அரசாங்கத்தினை நடத்துபவர்கள் தான் காரணம். இன்று வரைக்கும் மத்தியில் ஆட்சியில் இருந்து இருக்கும் ஆட்சிகள் அனைத்தும் பார்ப்பன‌ர்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்து இருக்கின்றன. அது காங்கிரஸ் ஆக இருக்கட்டும் அல்லது பாஜக-வாக இருக்கட்டும்... அனைத்தும் பார்ப்பன‌ர்களின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றன. சமீபத்தில் ராகுல் காந்தியும் 'நான் ஒரு பார்ப்பன‌ன்' என்று கூறிய செய்தியும் இங்கே கவனிக்கத்தக்கது. மேலும் இடதுசாரிக் கட்சியான பொதுவுடமைக் கட்சியாகட்டும் அதன் தலைமையிலும் பார்ப்பன‌ர்களே வீற்று இருக்கின்றனர். இந்நிலையில் அரசாங்கம் தான் மற்ற விளையாட்டுக்கள் வளராது இருக்க காரணம் என்று நாம் கூறினோம் என்றால் அக்குற்றச்சாட்டுகளும் பார்ப்பன‌ர்களையே சென்று அடையும்.

3) அப்படி என்றால் அரசாங்கம் பார்ப்பன‌ர்களை மட்டுமே கவனிக்கின்றது என்று கூறுகின்றீர்களா?

குறிப்பாக அவர்களையும் மற்ற உயர் சாதியினரையுமே கவனிக்கின்றது என்றுக் கூறுகின்றோம். சான்றாக சதுரங்க விளையாட்டு வீரர் ஆனந்த ஒரு பார்ப்பன‌ர் என்று நாம் அறிவோம். சமீபத்தில் அவர் வென்ற பட்டத்திற்காக தமிழக அரசு அவருக்கு இரண்டு கோடி உருபாய் பரிசுத் தொகையை அளித்துள்ளது. இரண்டு கோடி என்பது சாதாரணத் தொகை அன்று. இத்தகைய ஒரு தொகையினை வேறு சாதியினைச் சார்ந்த வீரருக்கு செயலலிதா வழங்கி இருப்பாரா என்பதும் கேள்விக்குறியே.

4) விசுவநாதன் ஆனந்த அவர்களால் தமிழகம் உலகப் புகழ் அடைந்து உள்ளது. அவரை பரிசுத் தொகை வழங்கி பெருமைப் படுத்துவதனை தவறு என்று கூறுகின்றீர்களா?

பரிசுத் தொகை வழங்குவது என்பது தவறான ஒன்று அல்ல. ஆனால் எவ்வளவு தொகை வழங்குகின்றோம், எப்பொழுது வழங்குகின்றோம், எவருக்கு வழங்குகின்றோம் என்பது கவனிக்கத்தக்க ஒன்றாக இருக்கின்றது அல்லவா. ஏற்கனவே அந்த உலகப் போட்டியில் வென்றதற்காக ஆனந்துக்கு கிடைத்த பரிசுத் தொகை கிட்டத்தட்ட ஆறரைக் கோடி. அந்நிலையில் அவருக்கு மேலும் இரு கோடியினை (மின்சாரம் வாங்குவதற்காக காசில்லாது தவித்துக் கொண்டு இருக்கும் வேளையிலும்) வழங்குவது சரியான ஒன்றா? மேலும் அது தமிழக அரசின் தனிப்பட்ட செல்வமும் அன்று. அது மக்களின் வரிப்பணம்.

உண்மையிலேயே விசுவநாதன் ஆனந்தை சிறப்பிக்க தமிழக அரசினை எண்ணி இருந்தால் அந்த இரண்டு கோடியினைக் கொண்டு ஆனந்தின் பெயரில் ஒரு அறக்கட்டளையை நிறுவி தமிழகத்தில் உள்ள சிறார்களுக்கு சதுரங்க விளையாட்டினை செம்மையாக பயிற்றிவிக்கும் பணியினைச் செய்து இருக்கலாம். அவ்வாறு மேலும் பல திறமையான வீரர்களை உருவாக்கி இருக்கலாம் தானே. அதனை விடுத்து ஏற்கனவே செல்வம் கொழிக்கும் ஒருவருக்கு கூடுதலாக ஒரு மிகப் பெரியத் தொகையினைத் தருவது என்பது சரியான செயலாக அமையாது.

ஆனந்த் மட்டும்தான் தமிழகத்திற்குப் பெருமை சேர்க்கிறாரா? கேரம் விளையாட்டில் தொடர்ந்து உலகப் பட்டங்களைப் பெற்று வரும் இளவழகிக்குக் கிடைத்த பரிசுப் பணம் எவ்வளவு தெரியுமா? பத்து லட்சம் மட்டுமே. அதுவும், தமிழக அரசு தொடர்ந்து தன்னை புறக்கணித்து வருவதாக அவர் பல பேட்டிகள் கொடுத்தபின்பே, வேறு வழியின்றி அந்தப் பரிசுத் தொகையும் அவருக்குக் கிடைத்தது. காரணம், வியாசர்பாடியைச் சேர்ந்த தலித் ஒருவருக்கு மகளாகப் பிறந்ததுதான் அவர் செய்த குற்றம். (http://www.tehelka.com/story_main39.asp?filename=cr030508late_breakfast.asp)

5) பார்ப்பனர்களின் ஆதிக்கத்தில் கிரிக்கெட் விளையாட்டு இருக்கின்றது என்றுக் கூறுகின்றீர்களே ஆனால் இசுலாமிய வீரர்களும் அந்த அணியில் விளையாடி வருகின்றனரே?

சிலருக்கு சில முகமூடிகள் தேவைப் படுகின்றது. இந்தியாவுக்கு தான் ஒரு மத சார்பற்ற நாடு என்ற முகமூடி தேவைப்படுகின்றது. அதே முகமூடி பிசிசிஐக்கும் தேவைப்படுகின்றது. எனவே தான் இசுலாமிய வீரர்களையும் பிசிசிஐ தேர்ந்து எடுக்கின்றது. என்று இந்தியா தனது முகமூடியினைக் களைகின்றதோ அன்று பிசிசிஐயும் தனது முகமூடியினைக் கலைத்து விடும்.

6) எதற்கெடுத்தாலும் பார்ப்பானையே குறைக் கூறாதீர்...கிரிக்கெட் விளையாட்டு இவ்வளவு தூரம் இந்தியாவில் புகழ் பெற்று இருப்பதற்கு காரணம் அந்த விளையாட்டின் எளிமையே அன்றி வேறு எவரும் அல்லர். ஒரு மட்டை ஒரு பந்து இவை மட்டுமே இருந்தால் போதும், கிரிக்கெட் விளையாட்டினை விளையாடி விடலாம். அதனால் தான் மக்களின் மத்தியில் இது புகழ் பெற்று இருக்கின்றது என்றுக் கூறுகின்றீர்களா?

சரி...கிரிக்கெட் எளிதான விளையாட்டென்றே வைத்துக் கொள்ளலாம். அதனால் தான் அது இந்தியா முழுவதும் புகழ் பெற்று இருக்கின்றது என்றும் வைத்துக் கொள்ளலாம்...அப்படி நிலை இருக்கையில் இந்தியாவில் இருக்கும் மக்கள் தொகையில் 90 சதவீதம் இருக்கும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் ஆகியோர் தானே அந்த எளிதான விளையாட்டினில் அதிக இடங்களைப் பிடித்து இருக்க வேண்டும்...மாறாக 3 சதவீதமே இருக்கும் பார்ப்பனர்கள் அதிக இடங்களைப் பிடித்து இருப்பது எவ்வாறு? அந்த எளிய விளையாட்டினில் பார்ப்பனர்களுக்கு மட்டும் தனித் திறமை பிறப்பிலேயே வந்து விடுகின்றதா?

தொடர்புடைய சுட்டிகள்:

பி.கு:

மேலே கூறிய விடயங்கள் அனைத்தும் சில இணையங்களின் மூலமும் சில நண்பர்களின் தொடர்புகள் மூலமும் பெறப்பட்ட தகவல்களை மையமாக வைத்தே எழுதப்பட்டவை. இதனில் மாற்றுக் கருத்துக்களை எவரேனும் கூற விரும்பினால் தாராளமாகக் கூறலாம்.

1 கருத்துகள்:

அருமை. இதுவரையில் இதன் பின்னிருக்கும் பார்ப்ப்னர் அரசியல் குறித்து என்னால் தெளிவாக புரிந்து கொள்ள முடியவில்லை. உங்களது கட்டுரை அதைத் தருகிறது.

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு