மூஒருமைக் கோட்பாடு:

1) ஒரே கடவுள் மூன்று நிலைகளில் விளங்குகின்றார் என்பது கிருத்துவக் கொள்கை...அப்படி இருக்க அதனைப் போன்றே சைவ வைணவ சமயத்திலும், மகாயான பௌத்ததிலும் கொள்கை காணப்படுவதன் அர்த்தம் யாது? சைவ இலக்கியங்கள் முழுவதிலுமே 'ஆதியான மூவரை' 'மூவராகிய ஒருவனை' என்றே குறிக்கப்பட்டு உள்ளன...கிமு காலத்தில் காணப்படாத இக்கொள்கை கி.பி காலத்தில் காணப்படும் காரணம் யாது?

2) விவேகானந்தர் நிலைகளிலே தாழ்ந்த நிலை துவைதம் என்றும் மிகவும் உயர்ந்தது திரியேக நிலை என்றும் கூறுகின்றார் (திரியேக நிலை - ஒன்று தான் ஆனால் மூன்றாக இருக்கின்றது). அதாவது கடவுள், ஆன்மா, உலகம் ஆகிய மூன்றும் ஒன்றுதான் ஆனால் வேறுவேறு நிலையில் உள்ளது என்கின்றார்...மேலும் இந்த திரியேக நிலை கிருத்துவ மூஒருமைக் கோட்பாட்டினை ஒத்து இருக்கின்றது என்றும் கூறுகின்றார்.

3) இன்று திரியேக நிலை என்றால் அது கடவுள் ஆன்மா உலகம் இவை மூன்றுமே ஒன்று தான் என்ற விளக்கம் கொடுக்கப்படுகின்றது…மேலும் அவை மூன்றும் ஒன்று தான் என்பதை அறிந்துக் கொள்ளாத வண்ணம் மாயைத் தடுக்கின்றது என்றும் கூறுகின்றனர். அதாவது இறைவனை மாயை மறைக்கின்றதாம்…அப்படி என்றால் இறைவனை மறைக்கும் வல்லமைப் பெற்ற மாயையை யார் தோற்றுவித்தது என்றக் கேள்விக்கு அங்கே விடை இல்லை…மேலும் இந்தக் கூற்றினை சைவ சித்தாந்தமும் மறுக்கின்றது. அவ்வாறு இருக்க திரியேக நிலை என்றால் என்ன என்றே நாம் காண வேண்டி இருக்கின்றது.

சைவ சித்தாந்தக் கருத்துக்கள்:

1) மேலும் கிருத்துவக் கருத்துக்களும் சைவ சித்தாந்தக் கருத்துக்களும் கிட்டத்தட்ட ஒன்றைப் போலவே இருக்கின்றன…

//உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா? – I கொரிந்தியர் 6 - இது பவுலின் கூற்று.

இந்தக் கூற்றினை ஒத்த கருத்தையே திருமூலரும் கூறி இருக்கின்றார்.

உடம்பினை முன்னம் இழுக்கு என்று இருந்தேன்
உடம்பினுக்கு உள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில்கொண்டான் என்று
உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே. – திருமந்திரம்

இதுவும் வெறும் ஒற்றுமையா?

//இறவா இன்பத்து எமை இருத்த வேண்டிப்
பிறவா முதல்வன் பிறந்தான். – போற்றிப்பற்றொடை -69

அருளுரு என்ற பொருளினை ஆயின்
மாயா உருவினன் மாயா உருவினை
ஏயான் எய்ந்தவர் எம்ம னோரே – சங்கற்ப நிராகரணம் – 25 – 27

அகலமாய் யாரும் அறிவரி தப்பொருள்
சகலமாய் வந்ததென் றுந்தீபற
தானாகத் தந்ததென் றுந்தீபற – திருஉந்தியார் 1

போன்ற வரிகள் இறைவன் உலகில் வந்து மனித உருவில் பிறந்தான் என்றுக் கூறுகின்றன…அதனைப் போலவே அவ்வாறு வந்த இறைவன் அவனாகவே அவனைத் தந்தான் என்று கூறுகின்றன.

முத்தி முதற்கொடிக்கே மோகக் கொடிபடர்ந்
அத்தி பழுத்தது என்று உந்தீ பற
அப்பழம் உண்ணாதே உந்தீ பற – திருஉந்தியார் – 41

முத்தி முதற்கொடிக்கே மோகக் கொடிபடர்ந்
அத்தி பழுத்த தருளென்னுங் – கத்தியினால்
மோகக் கொடியறுக்க முத்திப் பழம் பழுக்கும்
ஏகக் கொடி எழுங்காண் இன்று’ – திருக்களிற்றுப்படியார் – 93

உலகின் முதல் மனிதனுக்கே பாவம் படர்ந்து அவன் துன்பப்பட ஆரம்பித்தான் என்றும் அவ்வாறுப் படர்ந்த பாவத்தை அறுக்கும் ஒருவன் இன்று எழுந்து இருக்கான் என்றும் மேலே உள்ள வரிகள் கூறுகின்றனவே…!!! இதனையே சிவஞானபோதமும் விளக்குகின்றது.

“குருவடி வாகிக் குவலயந் தன்னில்
  திருவடி வைத்துத் திறமிது பொருளென
  வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
  கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே”


இந்தப் பாடல் மூலம் அவ்வையார் விநாயகரை ‘குருவாக இந்த உலகில் பிறந்து மக்கள் மகிழ்ச்சியாக இருக்க அவர்களின் பாவத்தினை கோடு ஆயுதத்தால் நீக்கினார்’ என்று கூறுகின்றார். ஆச்சர்யமாக இதுவும் இயேசு கிருத்துவின் கதையோடு பொருந்துகின்றது.

இப்பாடல்களுக்கு சைவம் கூறும் பொருள் யாது? இத்தகையக் கருத்துடைய பாடல்கள் கி.மு வில் காணப்படவில்லையே…

தமிழர்கள் தாழ்த்தப்பட்டமை:

மேலும் இந்த நூல்களை இயற்றியவர்களும் சரி வேறு சித்தர்களும் சரி பஞ்சமர்கள் என்றுக் கூறப்பட்டு உள்ளனரே? அது ஏன்?

உலகப் பொதுமுறையை தொகுத்த வள்ளுவன் எவ்வாறு பஞ்சமனானான்? என்ன தான் நடந்தது தமிழகத்தில்? இந்தியாவில்?

நந்தனாரும், திருப்பாணாழ்வாரும் தமிழில் பூசை செய்த கருவரைகளுள் என்றில் இருந்து தமிழுக்கும் தமிழர்களுக்கும் இடம் இல்லாது போயிற்று? அவர்களின் குடிகளான பறையர்களும் பாணர்களும் இன்று எவ்வாறு தாழ்த்தப்பட்டு இருக்கின்றனர்?

கிபி பதினைந்தாம் நூற்றாண்டு வரை, அதாவது கிருசுன தேவராயரின் படையெடுப்பின் வரை பழனிக் கோவிலில் தமிழர்களே பூசை செய்து வந்தனர் என்றும் அவர்களின் படையெடுப்புக்கு பின்னரே தமிழர்கள் வெளியேற்றப் பட்டனர் என்றும் வரலாறுகள் கூறுகின்றனவே...அது ஏன்?

தமிழ்:

மேலும் நாம் உலகின் வரலாற்றினை தெளிவாக அறிந்துக் கொள்ள வேண்டும் என்றால் தமிழையும் தமிழின் வரலாற்றையும் அறிந்து இருக்க வேண்டியத் தேவை இருக்கின்றது. உதாரணமாக ஒரு வார்த்தையைக் காணலாம்…

கோவேறு கழுதை = கோ + ஏறிய + கழுதை… அதாவது அரசன் ஏறிய கழுதை என்றே பொருள் தரும் ஒரு தமிழ் சொல்.

இதனை ஒன்று ஒரு காலத்தில் அரசர்கள் கழுதையில் வலம் வரும் பழக்கத்தினை உடையவர்களாக இருந்தனர் என்று பொருள் கொள்ளலாம்… அல்லது ஒரு காலத்தில் வாழ்ந்த மாபெரும் அரசர் அல்லது தலைவர் கழுதையில் ஏறி உலா வந்தார் … அதனைக் குறிக்கவே அக்கழுதை கோவேறுக் கழுதை என்று பெயர் கொண்டது என்றும் பொருள் கொள்ளலாம்…!!!

விவிலியத்தில் இயேசு கழுதை மீது ஏறிச் சென்றார் என்றும் அவரை அரசர் என்றே மக்கள் அழைத்தனர் என்றும் குறிப்புகள் வருகின்றன…இந்நிலையில் கோவேறுக் கழுதை என்றச் சொல்லுக்கு காரணம் என்ன? அப்பெயர் எக்காலத்தில் இருந்து பயனில் இருக்கின்றது என்றும் நாம் காண வேண்டி இருக்கின்றது.

இதனைப் போன்றே பல விடயங்கள் இருக்கின்றன…சங்க காலப் புலவர்களில் ஒருவருக்கு மட்டுமே ‘திரு’ என்னும் சிறப்பு பட்டம் வழங்கப்பட்டு இருக்கின்றது… அவரது பெயர் ‘திருத்தாமனார்’…இது தோமாவைக் குறிக்குமா என்பது ஆராய்ச்சிகளுக்கு உட்பட்டது.

மேலும் இன்றைக்கு இந்தியாவில் அதிக அளவில் கிடைக்கப்பட்டு இருக்கும் கல்வெட்டுகளும், சுவடிகளும் தமிழிலேயே கிட்டப்பட்டு இருக்கின்றன…ஆயினும் அவைகள் படிக்கப்படாமலும் பராமரிக்கப் படாமலும் அழிந்துக் கொண்டு இருக்கின்றன இல்லையேல் திட்டமிட்டு அழிக்கப் பட்டுக் கொண்டு இருக்கின்றன. அவைகள் அனைத்தும் படிக்கப்படாமல் நாம் வரலாற்றினை முழுமையாக அறிந்துக் கொள்ள முடியாது.

தொடரும்...

0 கருத்துகள்:

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு