சமயங்களைப் பற்றிய நமது ஆராய்ச்சிப் பயணத்தில் பல பதிவுகளைக் கடந்தாயிற்று...இந்த பயணத்தில் நாம் இன்னும் பயணிக்க சில தகவல்களை அறிந்துக் கொண்டால் நல்லது என்று எண்ணியே இந்தப் பதிவு.

முதலில் சைவ சமயத்தினையும் வைணவ சமயத்தினையும் பற்றி சைவரான திரு. கா.சு.பிள்ளை அவர்கள் என்ன சொல்கின்றார் என்றுக் கண்டு விடுவோம்.

1) "நம்மாழ்வார் காலத்தில் திருநீறே இருசமயத்திற்கும் (சைவம் வைணவம்) பொது அடையாளமாக இருந்தது. 'கரிய மேனி மிசை வெளிய நீறு', 'நீறு செவ்வே யிடக்காணில் நெடுமாலடி யார் என்றுத் துள்ளும்" முதலிய நம்மாழ்வார் வாக்கியங்களுள் நீறு என்பது திருநீற்றினைக் குறிப்பது போலும்." - (இதன் மூலம் திருநீறே முதலில் சைவத்திற்கும் வைணவத்திற்கும் பொதுவான அடையாளமாக இருந்தது என்றக் கருத்து இருக்கின்றது என்று நாம் அறிந்துக் கொள்ள முடிகின்றது.)

2) ஒரு காலத்தில் ஆறு சமயங்களுக்கும் பொதுவாகக் கடவுளின் அருவுருவாகிய சிவலிங்க வழிபாடு விளங்கிற்று. தமிழர் கருத்தே தந்திரங்களில் உள்ளது. வடநாட்டுத் தந்திரங்களிளுள் ஒன்றாகிய லிங்கார்ச்சன தந்திரத்துள், ஒருவன் கணபதி மதத்தையாவது, கௌமார மதத்தையாவது சைவ சமயத்தையாவது வைணவ சமயத்தையாவது சாத்தேய மற்றும் செளர மதத்தையாவது தழுவி ஒழுகினாலும் முதலில் சிவலிங்க பூசை செய்து விட்டு தன் இட்ட தேவதையை வழிபட வேண்டும் என்று விதிக்கப்பட்டு இருக்கின்றது. ஆதலில் ஒரு பெரும் சமயத்துள் ஆறு பகுதிகளாகவே ஆறு சமயங்களும் விளங்கின என்பது ஊகித்தற்பாலது.

3) "இப்பொழுதும் சிவன் கோவில்களில் திருமால், சக்தி, முருகன், பிள்ளையார், கதிரவன் முதலியோருக்கு உருவங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. திருவனந்தபுரத்தில் பத்மநாபசுவாமி கோவிலில் திருமால் சயனித்து இருக்கும் இடத்தில் சிவலிங்கம் காணப்படுகின்றது. பிற்காலத்தில் வைணவம் தனி மதம் ஆகி விடவே பெருமாள் கோவில்களில் சிவ வடிவங்களைக் காண்பது அரிதாயிற்று."

4) வங்காள நாட்டில் காளி கோவில்களில் எல்லாம் சிவலிங்கம் காணப்படுகின்றது.

(மேலே உள்ள வரிகள் மூலம் அனைத்து சமயங்களும் ஒரு சமயத்தில் இருந்து பிரிந்தனவையே என்றும் அவை அனைத்துக்கும் பொதுவாய் சிவலிங்க வழிபாடு இருக்கின்றது என்றக் கருத்தினை நாம் அறிந்துக் கொள்ள முடிகின்றது. கூடுதலாக வைணவம் சைவத்தில் இருந்து பிரிந்து சென்று இருக்கும் ஒரு சமயம் என்ற கருத்தும் நிலவுகின்றது என்பதனை நாம் அறிந்துக் கொள்ள முடிகின்றது)

சரி..இப்பொழுது சிவனைப் பற்றி அவர் என்ன கூறுகின்றார் என்றுக் காண்போம்...!!!

1) சிவலிங்க வழிபாடு தந்திரங்களில் முதல் இடம் பெற்று உள்ளது.

2) "கதிரவனை இடமாகக் கொண்ட சிவபிரான் வெம்மையினால் அச்சம் விளைக்கும் தந்தைத் தெய்வமாகக் கருதப்பட்ட போது தண்ணளியுடைய தாய்த் தெய்வத்தின் வடிவம் தண்ணீராகக் கருதப்பட்டது. ஆழமுள்ள தண்ணீரின் நிறம் நீலமாதலின் தாய் தெய்வத்தின் நிறமும் நீலமாயிற்று." "பாதி ஆணும் பாதி பெண்ணும் ஆகிய சிவ வடிவத்தில் ஆண்பகுதி செந்நிறமாகவும் பெண்பகுதி நீல நிறமாகவும் கொள்ளப்பட்டது." (அதாவது சிவன் நெருப்பின் தன்மையினால் சிகப்பாகவும்...சக்தி நீரின் தன்மையினால் நீலமாகவும் வழங்கப்பட்டு இருக்கின்றனர்)

3) "சிவம் என்ற சொல் முழுமுதற் கடவுளைக் குறிக்கப் பயன் பட்ட போது எங்கும் நிறைத்து விளங்கும் கடவுளின் ஆற்றல் சக்தி எனப்பட்டது. கடவுள் தன் ஆற்றலினால் எல்லாம் செய்வது உயிர்கள் மேல் வைத்த அருள் காரணமாம் என்றக் கொள்கை எழுந்தப் போது சிவசக்தி அருள் எனவும் தாய் எனவும் வழங்கப்பட்டது." (இதில் இருந்து சக்தி என்பது இறைவனின் ஆற்றலே என்றும் அவ்வாற்றலைத் தான் பெண்ணாக உருவகப்படுத்தி இருக்கின்றனர் என்ற கருத்தும் இருக்கின்றது என்று நாம் அறிய முடிகின்றது.)

4) "கதிரவனைச் சிவத்திற்கு உவமையாகவும் அவன் ஒளியைச் சக்திக்கு உவமையாகவும் வழங்கிய போது அவ்வொளி பரவிய இடமாகிய விண்ணும் சக்திக்கு பெயராயிற்று. விண்ணு என்ற பெயரே விண்டு எனவும் விஷ்ணு எனவும் மாறிற்று."

5) வியாபக ஆற்றல் ஆண் தன்மையாகக் கருதப்பட்ட பொழுது விண்டு அல்லது விஷ்ணு என்ற சொல் சக்தியின் ஆண்வடிவத்தைக் குறிப்பதாகக் கருதப்பட்டது. அக்கருத்தை உடைய ஆகம சுலோகமும் உண்டு. விஷ்ணுவுக்கும் சிவசக்திக்கும் நீல நிறமே பேசப்படுதல் காண்க."

6) "கடவுளுடைய ஆற்றலே விஷ்ணு எனக் கொள்ளப்பட்டமையால் பெருமான் என்றச் சொல் சக்தியைக் குறிக்கும் ளகர முடிபோடமைந்து திருமாலைக் குறித்தல் காண்க." (அதாவது 'பெருமாள்' என்றப் பெயர் இறைவனின் சக்தியைக் ஆண் வடிவமாகக் குறிக்கும் பெயர் என்றே அவர் கூறுகின்றார்)

7) அம்மையின் ஆண்வடிவமே திருமால் என்று சிவ ஆகமங்கள் கூறும்.

(இதில் இருந்து பெருமாள்/விஷ்ணு/அம்மன் என்றப் பெயர்கள் இறைவனின் ஆற்றலையும் அருளையும் குறிக்கும் பெயர்களே அன்றி அவை தனிக் கடவுளர் அல்லர் என்றக் கருத்தும் இங்கே இருக்கின்றது என்று நாம் அறிகின்றோம். எனவே அம்மன் என்பது ஒரு உருவகமே என்றால் சிவனுக்கும் அம்மனுக்கும் பிறந்த குழந்தைகளாக அறியப்படும் முருகனும் பிள்ளையாரும் யார்? மேலும் விஷ்ணுவும் இறைவனின் ஆற்றலைக் ஆண்வடிவமாகக் குறிக்கும் உருவகம் தான் என்றால் விஷ்ணுவின் பிள்ளையான பிரமனும் ஐயப்பனும் யார்? ஏன் அந்தக் கதைகள்...உருவகங்கள் வந்தன என்றும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டி இருக்கின்றது தானே.)

சரி...திருமால்/விஷ்ணு என்பது இறைவனின் ஆற்றலின் உருவகமே என்றால் விஷ்ணுவின் அவதாரங்களாக அறியப்படும் கடவுளரைப் பற்றி திரு.கா.சு.பிள்ளை என்னும் சைவர் என்ன கூறுகின்றார் என்று நாம் பார்க்க வேண்டி இருக்கின்றது.

1) "கடவுளின் சக்தி உலகத்தைப் பரிபாலிப்பது போல அரசர்களும் தம்முடைய ஆற்றலால் உலகைப் பரிபாலித்தலின் கடவுட் சக்தியின் ஆண்வடிவமாகிய திருமாலின் இனம் என்று அரசர்களைச் சொல்லுதல் வழக்கமாயிற்று."

2) இராமன் வழிபாடு வீர வணக்கத்தைச் சார்ந்ததே ஆகும். இராமன் சிறந்த அரசனாய் விளங்கினமையால் அவன் திருமாலின் அவதாரமாகக் கருதப்பட்டான்.

3) இராமன் அரச குடும்பத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்த திருவாளர் ம.ச.இராமசாமி ஐயர் முதலியோர் அக்குடும்பம் தமிழ் அரசர் குடும்பம் என்றே துணிந்தனர். இராமனுக்கு கரு நிறம் கூறப்படுதல் அதற்கு ஒரு சான்றாம் என்ப.

(இதன் மூலம் அவதாரங்கள் என்பனவும் உருவகங்களே என்றக் கருத்து இருக்கின்றது என்றும் நாம் அறிந்துக் கொள்ள முடிகின்றது.)

சரி இப்பொழுது அவர் இந்து மதத்தினைப் பற்றி என்ன கூறுகின்றார் என்றும் கண்டு விடலாம்..

௧) இந்துக்களுக்குள் பல மதங்கள் இருப்பதை அறியாத மேலை நாட்டினர் இந்துக்கள் எல்லாருக்கும் ஒரு மதம் இருப்பதாக எண்ணி இந்து மதம் என்ற பெயரைத் தோற்றுவித்தனர். தற்காலத்தில் வடமொழி வேதத்தை பிரமாணமாகக் கொண்ட வைதீகர்கள் தங்கள் மதமே இந்து மதம் என்று பேசுபவராய் அம்மதமே இந்திய நாட்டில் உள்ள எல்லா மதங்களுக்கும் உரிய மதம் என்று நிலைநாட்ட முன் வந்து உள்ளார்கள். ஆங்கில மதம், சப்பானிய மதம், அமெரிக்க மதம் என்று மதங்கள் இருக்குமாயின் இந்து மதம் என்று ஒன்று உண்டு எனலாம். ஆனால் அவ்வாறு மதங்கள் இல்லாதது போல இந்து மதம் என்ற ஒரு மதமும் கிடையாது.

௨) வேதத்தையும் சிமிருதியையும் பிரமாணமாகக் கொண்ட மதம் இந்து மதம் என்றால் அது இந்தியாவில் உள்ள பல மதங்களில் ஒரு மதமாகுமே அன்றி இந்தியர் அனைவருக்கும் பொதுவான ஒரு மதமாகாது.

௩) ஆதலால் வடமொழி வேதத்தின் வேறான சிறந்த பிரமாணங்களுடைய தமிழ் சைவ வைணவர்கள் தங்கள் சமயங்களை இந்து மதம் என்று கூறுதல் அறிவுக்குப் பொருந்துவதில்லை.

(இதன் மூலம் இந்து மதம் என்பது வேறு சைவ வைணவ சமயங்கள் என்பது வேறு என்றும் வேதங்களுக்கும் சைவ வைணவ சமயங்களுக்கும் தொடர்பில்லை என்றும் கருத்துக்கள் இருக்கின்றன என்றும் நாம் அறிந்துக் கொள்ள முடிகின்றது)

மேலும் இப்பொழுது கோவில்களில் உள்ள நடைமுறைகள் மாற்றப்பட்டு இருக்கின்றன என்றும் அவர் கூறுகின்றார். அவற்றைப் பற்றியும் நாம் காண வேண்டி இருக்கின்றது.

௧) இக்கோவில்களில் உள்ள (சைவ வைணவ கோவில்கள்) ஆரியச் சார்புகள் யாவை எனில் தமிழ் குருக்கள் தம்மை ஆரியராய் எண்ணிக் கொள்வதும் வருணவரம்புகள் பற்றி இன்னின்னார் இன்ன இடத்தில நிற்க வேண்டும் என்பதும் தாழ்த்தப்பட்டவருக்கு இடம் இல்லாமையும் பரிசாரகம் முதலிய தொண்டுகள் சுமார்தராற் செய்யப்படுவதும் வடமொழி வேதபாராயணம் முதலியவைகளும் வேதச் சார்பான ஓமச் சடங்கும் ஆம் என அறிக.

௨) 'பிற்போக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற நாயனார் கொள்கைப்படி வருணவரம்புகள் ஒழிய வேண்டும்.

௩) தொண்டுகள் யாவற்றிக்கும் பூசனை செய்வதற்கும் பிறப்புத் தடை இருத்தல் கூடாது.

(இதன் மூலம் இன்று கோவில்களுள் பிறப்பின் காரணமாக பிரிவினைகள் இருப்பது வேதக் கொள்கைகளால் என்றும் அவை சைவ வைணவ கொள்கைகளுக்கு மாறான கொள்கைகள் என்றும்...வருணங்கள் எனப்படுபவை தமிழர்களுக்கு உரியன அல்ல என்றும் அவை சைவ வைணவத்திற்கு உரியன அல்ல என்றும் அவை ஒழிக்கப் பட வேண்டும் என்ற கருத்தும் இருக்கின்றது என்று நாம் அறிந்துக் கொள்ள முடிகின்றது)

இக்கருத்துக்கள் திரு.கா.சு.பிள்ளை அவர்களின் கருத்துக்கள் மட்டுமே ஆகாது...இன்னும் பல அறிஞர்கள் இதே கருத்தினைக் கூறி இருக்கின்றனர். ஏற்றும் இருக்கின்றனர். மேலும் அனைத்திந்திய தமிழர் சமய மாநாட்டிலும் இக்கருத்துக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்ளன.

இப்பொழுது நாம் எவ்வாறு சைவ வைணவ சமயங்கள் வேத சமயத்தினால் (வைதீக சமம்) ஆட்கொள்ளப்பட்டன என்று மயிலை.சீனி.வேங்கடசாமி அவர்கள் கூறுவதனைக் காண வேண்டி இருக்கின்றது.

1) குறுகிய நோக்கும் குறுகிய கொள்கையும் உடைய வடநாட்டு வைதீக சமயம் தென்னாட்டில் ஒதுக்கப்பட்டுக் கிடந்தது. ஒதுக்கப்பட்ட இந்த மதம் புத்த சமண சமயங்களைப் போன்று செல்வாக்குப் பெற முயன்றது. செல்வாக்குப் பெற வேண்டு என்றால் இவ்விரண்டு மதங்களையும் அடக்கி ஒடுக்க வேண்டும். இம்மதங்களை அடக்கி ஒடுக்க வைதீக மதத்திற்கு ஆற்றலும் ஆண்மையும் இல்லை. ஆற்றலும் ஆண்மையும் பெற வழி யாது? ஒரே வழி தான் உண்டு. அவ்வழி யாது எனின் தமிழர் வழிபட்டு வரும் திராவிட சமயத்துடன் வைதீக சமயத்தையும் சேர்த்துக் கொண்டு பொது மக்களின் ஆதரவைப் பெறுவது தான். இதைச் செய்ய வைதீக மதம் முற்பட்டது. அதாவது வைதீக மதம் திராவிட மதத்தின் தெய்வங்கள் ஆகிய சிவன்,திருமால்,முருகன்,கொற்றவை ஆகியவற்றை ஏற்றுக் கொண்டது.

2) ஏற்றுக் கொண்டதோடு நில்லாது திராவிடத் தெய்வங்களுக்கும் வைதீகத் தெய்வங்களுக்கும் புதிய தொடர்புகளையும் உறவுகளையும் கற்பித்துக் கொண்டது.

(இதன் மூலம் சைவ வைணவத்தில் தொடர்பு இல்லாத வைதீக சமயம் அது பிழைக்க வேண்டும் என்ற காரணத்திற்காக சைவ வைணவத்தோடு இணைந்துக் கொண்டு பின்னர் அச் சமயங்களையே மாற்றியது என்றும் கருத்துக்கள் இருக்கின்றன என்றும் நாம் அறிய முடிகின்றது)

எனவே சுருக்கமாகக் காண வேண்டும் என்றால்,

௧) சைவ வைணவ சமயங்களுக்கும், வேதங்களுக்கும் சரி வருணவரம்புகளுக்கும் சரி யாதொரு தொடர்பும் இல்லை.

௨) இன்று கோவில்களில் சைவ வைணவ சமயங்களுக்கு மாறான வேதக் கொள்கைகள் பெருமளவுக் காணப்படுகின்றன. அதற்கு காரணம் வைதீக சமயம் சைவ வைணவ சமயங்களை தன் கட்டுக்குள் வைத்து இருப்பது தான்.

௩) அம்மன்/விஷ்ணு என்பது கடவுளின் ஆற்றலின் உருவகமே. அதேப் போல அவதாரங்களும் உருவகங்களே.

௪) சைவ சமயமே பின்னர் பல்வேறு சமயமாக பிரிந்துச் சென்று இருக்கின்றது. வைணவமும் சைவமும் ஒன்றே. வைணவர்களின் சின்னம் முதலில் திருநீராகத்தான் இருந்து இருக்கின்றது.

௫) சைவ வைணவ சமயங்களுள் சாதி ஏற்றத் தாழ்வுக்கும் தீண்டாமைக்கும் எந்த ஒரு இடமோ அல்லது தொடர்போ கிடையாது.

தொடரும்...!!!

1 கருத்துகள்:

அருமையோ அருமை....

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு