இயற்கை நெறிக் காலமும் அற நெறிக் காலமும்...!!!

என்னடா இது முருகனைப் பற்றி பார்ப்போம்னு நெனச்சா ஏதோ இயற்கை நெறிக் காலம், அற நெறிக் காலம் அப்படின்னு ஆரம்பமே திசை மாறுகின்றதே என்று எண்ணுவீர்கள் என்றே எண்ணுகின்றேன். ஆனால் இந்த திசை மாற்றத்திற்கு ஒரு காரணம் இருக்கின்றது. காரணம் என்னவென்றால் மேலே கூறியுள்ள அந்த கால மாற்றங்களில் தான் நம்முடைய வழிபாட்டு முறைகள் ஒரு மாபெரும் திசை மாற்றத்தினைக் கண்டு இருக்கின்றன. இப்பொழுது அந்த காலங்களைப் பற்றி சற்று கண்டு விடுவது தான் அனைவருக்கும் நலன் பயக்கும் என்றே எண்ணுகின்றேன்.

இயற்கை நெறிக் காலம் - பெயரில் இருந்தே இது எத்தகையக் காலம் என்று கணித்து விடலாம். மனிதர்கள் இயற்கையினை வழிப்பட்ட காலம் தான் இயற்கை நெறிக் காலம். கடவுளர் அனைவரும் இயற்கையினைச் சார்ந்தவர்களாகவே இருந்தனர். அனைத்துக் காலங்களைப் போலவே இக்காலத்தினையும் நூல்கள் வாயிலாகவே நாம் அறிந்துக் கொள்கின்றோம். இயற்கை நெறிக் கால நூல்கள் என்றால் நமது சங்க காலத்து நூல்களான பத்துப்பாட்டையும், எட்டுத்தொகையையும் எடுத்துக்காட்டாக எடுத்துக் கொள்ளலாம். இக்காலத்தில் மக்கள் வழிப்பட்ட கடவுளருக்கு பலி இருந்தது.

அறநெறிக் காலம் - இயற்கை நெறிக் காலத்தினைத் தொடர்ந்து தோன்றியக் காலத்தினைத் தான் அறநெறிக் காலம் என்பர். இயற்கை வழிப்பாட்டு முறை போய் மனிதனுக்கும் இறைவனுக்கும் உள்ள உறவுகள் மற்றும் மற்ற அற நெறிக் கருத்துக்களும் சரி நூல்களும் சரி நம் மண்ணில் எழுந்தக் காலத்தினைத் தான் அறநெறிக் காலம் என்பர். அற நெறிக்காலத்தில் இறைவனுக்கு பலி இடும் பழக்கம் முற்றுப் பெற்றது மாறாக பல புதியக் கருத்துக்கள் தோன்றப்பெற்றன. முழு முதற் கடவுள் என்ற கொள்கை மேல் எழும்ப ஆரம்பித்தக் காலம். இக்காலத்தின் சிறப்புமிக்க ஒரு நூல் தான் நமது திருக்குறள். நிற்க

தமிழ் இலக்கியங்களை ஆராயும் அறிஞர்களாகட்டும் அல்லது சமயங்களை ஆராயும் அறிஞர்களாகட்டும் அனைவரும் மேலே கூறியுள்ள கால மாற்றத்தினை அறிந்து தான் உள்ளனர். நூல்களையும் சரி பழக்க வழக்கங்களையும் சரி காணும் பொழுது சமுகத்தில் திடீர் என்று எழுந்துள்ள இந்த மாற்றம் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கத் தான் செய்கின்றது. கவனத்தை ஈர்ப்பதுடன் பல கேள்விகளையும் இந்த மாற்றம் எழுப்புகின்றது... ஏன் இந்த மாற்றம்? எதனால் இந்த மாற்றம்? என்றவாறு பல கேள்விகள் எழும்பினாலும் ஒரு விடயத்தில் மற்றும் ஆய்வாளர்கள் பலர் ஒன்றுப்படுகின்றனர். கிருத்துவுக்கு பிற்பட்ட காலம் என்றக் காலத்தில் தான் இந்த மாற்றங்கள் நிகழ்ந்து இருக்கின்றன. அக்காலத்தில் அதுவரை பலியிடப்பட்டு வந்த கடவுளருக்கு பலி தேவை இல்லாத ஒன்றாக மாறி இருக்கின்றது.

"தத்துவ உணர்ச்சி ஏற்பட்ட பிற்காலத்தில் முருகன் முதலிய கடவுளர்க்கு உயிர்பலி செய்தல் நின்று விட்டது" என்றே தமிழறிஞர் திரு கா.சு.பிள்ளை அவர்கள் அவர்களது 'தமிழர் சமயம்' என்ற நூலில் குறிப்பிடுகின்றார்.

இங்கே நாம் விரிவாகக் காணவேண்டியது 'தத்துவ உணர்ச்சி ஏற்பட்ட பிற்காலத்தில்' என்று கூறப்படும் காலத்தினைப் பற்றி தான். ஆனால் எவ்வளவு முக்கியமானதொன்றாக அக்காலம் இருந்தாலும் அதனைப் பற்றி நாம் பின்னரே காண போகின்றோம். காரணம் முருகனை நாம் ஏற்கனவே நீண்ட காலம் காக்க வைத்தாயிற்று எனவே இனியும் அவரைக் காக்க வைப்பது சரியாக இருக்காது. எனவே இப்பொழுது மீண்டும் முருகரைக் காணச் செல்லலாம்...

முருகன் - சிவ மைந்தன். தீய வடிவே உருவான சூரபதுமனை அழிக்க சிவனின் ஆற்றலால் உருவாக்கப்பட்டவன். சூரனுடன் நடந்தப் போரில் சூரனை வென்று நன்மையை நிலை நிறுத்துகின்றான். இதுவே முருகனின் படைப்பினைப் பற்றியக் கதை. அதாவது முருகனின் படைப்பு சூரனை அழித்து மக்களைக் காக்கவே அமைந்து உள்ளது. நிற்க.

இப்பொழுது இந்தக் கதையினைப் பற்றி நாம் விரிவாகக் காணும் முன் நாம் அறிந்துக் கொள்ள வேண்டியது என்னவென்றால் மேலே உள்ள கதைக்கு சான்றுகள் நமக்கு கிருத்துவுக்கு பிற்பட்ட காலத்திலேயே தான் கிடைக்கின்றன. அதாவது அறநெறிக் காலத்திலேயே கிடைக்கப் பெறுகின்றன. இயற்கை நெறி காலத்தில் காணப்படும் முருகன் பலி உடையவனாகவும் குறிஞ்சி நிலத் தலைவனாகவுமே அறியப்படுகின்றான்...மாறாக சிவ மைந்தனாக அவன் அக்காலத்தே அறியப்பட்டமைக்கு சான்றுகள் இல்லை. சரி இப்பொழுது மீண்டும் முருகனின் கதைக்கு வருவோம்.

முருகன் படைக்கப்பட்டமைக்கு முழு முதற் காரணம் தீமையின் வடிவே ஆன சூரபதுமனை வெல்லவே. அந்த காரணத்திற்காக அவனை சிவன் அவரது ஆற்றலின் வாயிலாக படைக்கின்றார். இங்கே நாம் கவனிக்க வேண்டியது எவ்வாறு பிள்ளையாரை சக்தியே உருவாக்குகின்றாரோ அதேப் போல் முருகனை சிவனே உருவாக்குகின்றார். பின்னர் முருகன் வளர்ந்தவுடன் சக்தியிடம் இருந்து வேலினைப் பெற்றுக் கொண்டு சூரனுடன் போராடுகின்றார். இறுதியில் சூரனை வெல்கின்றார். நன்மை வெல்கின்றது. தீமை தோற்கின்றது. இதுவே கதை. ஆனால் இங்கே கவனிக்க வேண்டிய மற்றொரு விடயம் என்னவென்றால் முருகன் சூரனை வெல்கின்றார் ஆனால் அழிக்கவில்லை. இதனைப் பற்றி நாம் மேலும் பார்ப்பதற்கு திரு. கா.சு. பிள்ளை அவர்களின் கூற்றையும் கண்டு விடுவது நல்லது என்றே நினைக்கின்றேன்.


'மேலும் சூரபதுமனை முருகன் ஆட்கொண்டு அவனின் ஒரு பகுதியாகிய மயிலை வாகனமாகமும் மற்றொரு பகுதியாகிய கோழியைக் கொடியாகவும் கொண்டனர் என்பதே புராண வரலாறுமாகும். அவனால் வந்த தீமையை ஒழித்தார் என்பதைப் பற்றியே முருகனுக்கு அத்திருவிழா கொண்டாடப்படுகின்றது. அத்திருவிழாவில் தெய்வத் தியானமும் பட்டினி நோன்பும் பொறியடக்கமும் நிகழ்வனவே அன்றி வயிறு நிரம்ப உண்டலும் கூத்தாடளும் இல்லை என்றறிக' என்று அவரது 'தமிழர் சமயம்' என்னும் நூலில் குறிப்பிடுகின்றார்.

மேலே உள்ள கூற்றுகள் மூலம் முருகன் சூரனின் மூலமாக வந்தத் தீமையை அளித்து அவனை அடக்கி அருளினார் என்றே நமக்கு புலனாகின்றது. இப்பொழுது இயேசுவின் உருவகமே முருகன் என்றுக் கூறுபவர்கள் என்ன கூறுகின்றார்கள் என்றுப் பார்ப்போம்.

அவர்களின் கூற்றுப் படி இயேசு மக்களுக்காக தீமையே வடிவான சாத்தானை வென்ற நிகழ்வையே சூரபதுமனை முருகன் வெல்லும் கதையின் மூலமாக அக்காலத்தில் அறிஞர்கள் வெளிப்படுத்தி உள்ளனர் என்றுக் கூறுகின்றனர்.

விவிலியக் கதையின் படி இயேசு பரிசுத்த ஆவியின் அருளினைப் பெற்றுக் கொண்டு தீமையே வடிவான சாத்தானை உயிர்தெழுவதன் மூலம் வென்று அடக்கி ஆள்கின்றார். சாத்தானும் தோற்கின்றான்...ஆனால் மடிய வில்லை.

சூர் - தீமை. சூரபதுமன் - தீமையே வடிவானவன். தீமையே வடிவான சாத்தானை சூரப்பதுமனாகவும் அவனை இயேசு மக்களுக்காக வென்றதை முருகன் சூரபதுமனை வென்ற நிகழ்ச்சியாகவும் அன்றைய தமிழர்கள் மக்கள் நடந்ததை எளிதாக அறிந்துக் கொள்ள பயன்படுமாறு உருவகப்படுத்தி உள்ளனர் என்றே அவர்கள் கூறுகின்றனர். அதாவது,

சாத்தான் - சூரபதுமன்
முருகன் - இயேசு
சாத்தானை தோற்கடிக்கும் ஆற்றலை இயேசு தூய ஆவியிடம் இருந்தே பெறுகின்றார்.
முருகன் சூரனை வெல்ல வேலினை சக்தியிடம் இருந்து பெறுகின்றார்.
இறுதியில் சாத்தான் தோற்கின்றான் ஆனால் மடியவில்லை.
சூரனும் தோற்கின்றான் ஆனால் மடியவில்லை.

மேலும் சூரனும் முருகனும் மோதிக் கொள்ளும் பகுதியில் சூரன் பல்வேறு வடிவங்கள் எடுத்து முருகனுடன் போரிடுவது போன்று வருகின்றது. அச் சண்டையின் இறுதியில் ஒரு மாமரமாக சூரன் மாறுகின்றான். அப்பொழுது முருகன் தனது வேலினைக் கொண்டு அம்மரத்தினைப் பிளக்க சூரன் தோற்பது போன்று கதை வருகின்றது. அதாவது தீமை இறுதியில் ஒரு மர வடிவில் வருகின்றது அதனை வென்று இறைவனின் மகன் தீமையினை வெல்லுகின்றார், இது இயேசு சிலுவையினை (மர கட்டையினை) இறுதியாக சுமந்து சென்று மரணமுற்று பின்னர் மீண்டும் உயிர்த்து எழுந்து சாத்தானை வென்றதை குறிப்பதாகவே இருக்கின்றது என்றும் அந்த ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நிற்க.

இரண்டு கதைகளிலும் ஒற்றுமைகள் சில இருந்தாலும் இவற்றை வைத்து மட்டுமே இயேசு தான் முருகன் என்றால் நம்மால் நம்பிவிட முடியாது.

ஆனால் ஏன் இந்த ஒற்றுமைகள் இருக்கின்றன என்றும் கி.முவில் காணப்படாத இந்தக் கதை பிற்காலத்தில் காணப்படுவதன் அர்த்தம் என்னவென்றும் நாம் சிந்திக்கத் தான் வேண்டி இருக்கின்றது. மேலும் நாம் முன்னர் கண்டவாறு முருகன் - சிவ மைந்தன் என்ற தகப்பன்-மைந்தன் உறவு முறை ஏன் கி.மு வில் காணப்படாது கி.பி யில் காணப்படுகின்றது என்றும், இயற்கை நெறி காலம் எதனால் அறநெறிக் காலமாக மாறிற்று என்றும் நாம் சிந்தித்துப் பார்க்கத் தான் வேண்டி இருக்கின்றது.

மேலும் முருகனுக்கு இரு மனைவியர் இருப்பது போன்று புராணக்கதைகளும் நம்மிடையே இருக்கின்றன. எனவே முருகனை இயேசு என்றுக் கூறினால் முருகனுக்கு ஏன் மனைவிகள் இருப்பது போன்று கதைகள் அமைய வேண்டும் என்றும் நாம் காண வேண்டி இருக்கின்றது. ஆனால் இவற்றைப் பற்றி நாம் காண்பதற்கு முன்னர் வேறு சில பதிவுகளை கண்டு விடுதல் ஏற்றதாக இருக்கும் என்று தோன்றுவதனால் மற்றச் சில பதிவுகளைக் கண்ட பின் அவற்றைப் பற்றி நாம் காணலாம். இப்பொழுது ஏன் முருகனை தமிழ் கடவுள் என்று அழைக்கின்றனர் என்று நான் அறிந்தவனவற்றைக் காணலாம்.

தொடரும்...

பி.கு:

நண்பர்களே இவை அனைத்தும் சில ஆராய்ச்சியாளர்களின் கூற்றுகளில் இருந்து நான் இது வரை அறிந்துக் கொண்டவையே. இன்னும் பல விடயங்களை அறியத் தேடிக் கொண்டும் அறிந்துக் கொண்டும் இருக்கின்றேன். இவற்றுக்கு தங்களின் கேள்விகளும் மிகுந்த உறுதுணையாக இருக்கின்றன. அதற்கு நன்றி. அதைப் போன்றே நான் ஏதாவது கூற்றினை தவறாக அறிந்தும் இருக்கலாம், அதனை தாங்கள் சுட்டிக் காட்டினீர்கள் என்றால் மிகவும் நன்றாக இருக்கும். ஏன் என்றால் உண்மைகள் வெளி வர வேண்டும் என்பதே எனது எண்ணம். நம்முடைய சமய உண்மைகள் தான் இன்று நம்முடைய உலகம் சந்தித்துக் கொண்டு இருக்கும் மாபெரும் பிரச்சனைகளுக்கு எல்லாம் ஒரே தீர்வு. அப்பேற்பட்ட ஒரு செல்வம் இன்று மறைந்துக் கிடக்கின்றது. அதுவும் நம்முடைய மண்ணில். அவ்வாறு இருக்க மண்ணின் மைந்தர்களான நாம் நம் மண்ணில் விளைந்த செல்வத்தை மீட்டு எடுத்து உலக நலனுக்காக பயன்படுத்த முயற்சி செய்வது நம்முடைய கடமை அல்லவா.

2 கருத்துகள்:

உலகின் தமிழர்கள் தான் முதாலனவர்கள் , அவர்களின் கடவுள் முருகன் ... இதை பின் பற்றியே இயேசு என்கிற கற்பனை கதா பாத்திரம் பின்ன பட்டு இருக்க வேண்டும் ... முருகன் அசுரனை எதிர்த்த பொது அவன் வயதில் மிகவும் எளியவன் ... பால முருகனின் திருவிளையாடல்களும் பல வழக்கத்தில் உள்ளன .. ஆனால் இயேசு பாலகனாக ஒரு வரலாறும் கிடையாது .. நம் கடவுளின் மறு பதிப்பே இயேசு என்னும் கற்பனை

நதி என்றுமே மேட்டில் இருந்து பள்ளதிருக்கு பாயும் ... அது போல் அன்று கலாச்சாரத்திலும் பண்பாட்டிலும் உயர்ந்து இருத்த நமிடம் இருந்தே முருகன் கதை அங்கே அந்த நாட்டின் மக்களின் வாழ்க்கை முறை படி மாறி இருக்கும் ...

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு