சூலியன் அசாஞ்சே (Julian Assange) தெரியுமா…!!!

உலகத்தையே அடக்கி ஆள நினைக்கும் ’பெரிய அண்ணன்’ அமெரிக்காவின்
கண்களிலேயே தனது விரலை விட்டு ஆட்டுபவர்!!!

‘விக்கிலீக்சு’  என்ற தனது இணையத்தளத்தின் மூலம் அமெரிக்கா மற்றும் இதரப் பல நாடுகளின் அதிர வைக்கும் ரகசியங்களை, கொடூரச் செயல்களை மக்களின் பார்வைக்கு கொண்டு வந்த ஒருவர்!!!

எவரையும் கண்டு அஞ்சாத அமெரிக்கா இவரைக் கண்டு சற்று அஞ்சத் தான் செய்தது!!!

இன்னும் அஞ்சத் தான் செய்கின்றது!!!

“உண்மை வெளிப்பட வேண்டும்… அதற்கு என்ன விலை கொடுக்க வேண்டி இருந்தாலும் சரி… மக்கள் உண்மையினை அறிய வேண்டும்” என்ற எண்ணத்தில் உலகளாவிய அரசியல் செய்திகளை (அதாவது வெளிவரக்கூடாது என்று அரசியல்வாதிகள் நினைக்கும் செய்திகளை) மக்களுக்கு அசாஞ்சே கொண்டு வந்துச் சேர்ப்பதுப் போல் நம் ஊரிலும் யாராவது செய்யமாட்டார்களா?…

தினமும் ஒவ்வொரு அமைச்சர் மற்றும் ஒவ்வொரு அதிகாரிகளைப் பற்றியும் பலத் தகவல்களைப் படிக்கின்றோம்… ஒருத் தொலைக்காட்சி சொல்லும் செய்தியினை மற்றொரு தொலைக்காட்சி மறுத்துக் கூறுகின்றது… இந்த நிலையில் உண்மையினை வெளிக்கொணர இம்மண்ணில் எவரும் இல்லையா? என்றக் கேள்விகள் உங்கள் மனதினில் எழுகின்றதா…!!!

அக்கேள்விகளுக்கு பதிலாய் உண்மையினை எழுத சிலர் இருக்கின்றனர்…

பயத்தினையும் அச்சுறுத்தலையும் பொருட்படுத்தாது அவர்கள் எழுதிக் கொண்டே இருக்கின்றனர்!!!

அவர்களுள் இப்பொழுது முக்கியமான ஒருவரைப் பற்றியே இந்தப் பதிவு!!!

அவர் சவுக்கு சங்கர்!!!

இவர் யார்:

2008 ஆம் ஆண்டு வரை சங்கர் என்ற இந்தப் பெயர் தமிழகத்தில் பிரபலமாகி இருக்க வில்லை!!!

தமிழக உளவுத் துறையில் பத்தோடு பதினொன்றாவது ஆளாய் இருந்த அவரை,
ஒரு நிகழ்ச்சி வெளிக் கொண்டு வருகின்றது!!!

அப்போதைய திமுக அமைச்சர் பூங்கோதை தனக்கு வேண்டப்பட்டவர்களை விடுவிக்கக் கோரி
லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனரிடம் பேசிய தொலைபேசி பேச்சுக்கள்
 ஊடகங்களில் வெளி வந்த நிகழ்ச்சி தான் அது.

சற்று அரண்டு தான் போகின்றது திமுக.

எப்பொழுதும் தங்களுக்கு எதிராய் இருப்பவர்களைப் பற்றியச் செய்திகள்
மட்டும் பத்திரிக்கைகளுக்கு ’கசியும்’ காலத்தில்,
அவர்களுடைய அமைச்சர் ஒருவரின் பேச்சு பத்திரிக்கைகளுக்கு சென்றது
எவ்வாறு???

ஆவேசப்படுகிறார் கருணாநிதி…!!!

மாட்டுகிறார் சங்கர்…!!!

ஏன் இந்தச் செய்தியை வெளியிட்டாய்? என்று அதிகாரம் மிரட்ட “என்னுடைய மனசாட்சிக்கு எதிராய் வேலை செய்ய இயலாது…
 தவறு செய்தார்கள்… அதை வெளிக் கொண்டு வந்தேன்” என்றது சங்கரின் நேர்மை.

பதில்…கடமைத் தவறியதாக தற்காலிக பணிநீக்கம் செய்யப்படுகிறார் சங்கர்!!!

“சரி தான் போங்கடா…!!!”  என்றுக் கூறிக் கிளம்பும் சங்கர் தன்னிடம் இருக்கும் ஆதாரங்களை ஒவ்வொரு பத்திரிக்கையிலும் கொடுக்க முயல்கிறார்.

ஆனால் ஆளும் கட்சியின் மேல் இருக்கும் பயத்தினால் எந்தப் பத்திரிக்கையும் அந்தச் செய்திகளை பிரசுரிக்க மறுத்து விடுகின்றன.

இந்த நிலையில் தான் நண்பர்கள் சிலரின் உதவியுடன் இணையத்தளம் ஒன்றைத் தொடங்குகிறார் சங்கர்!!!

அந்த இணையம் தான் ‘சவுக்கு’…!!!

‘சவுக்கு’ சங்கர்:

இணையம் ஆரம்பித்து ஆளும்கட்சியின் வண்டவாளங்களை அவர் தண்டவாளம் ஏற்ற ஆரம்பிக்க வேர்க்க ஆரம்பிக்கின்றது திமுகவிற்கு.

அனைத்து பத்திரிக்கைகளும் நம் துதிப் பாடிக் கொண்டு இருக்கும் பொழுது நேர்மையாய் அதுவும் நம்முடைய அழிச்சாட்டியங்களை வெளிப்படுத்துகிற மாதிரி ஒருவன் எழுதுகின்றானா… பிடி அவனை!!!

என்று சங்கரின் மேல் ஒருப் போலி வழக்கினைப் போட்டு அவரை சிறையில் அடைத்து சித்தரவதை செய்கின்றனர்.

ஆனால் நண்பர்களின் முயற்சியால் நீதி வெல்ல, சங்கர் விடுதலையாகிறார்.
தொடர்ந்து எழுதவும் செய்கின்றார்..!!!

அவருடைய செய்திகளின் உண்மையும், ஆதாரங்கள் கொண்டே அனைத்து குற்றத்தையும் அவர் எழுதும் தன்மையும் அவருடைய இணையத்தினை பிரபலமாக்கிக் கொண்டே வர…. ‘சவுக்கு - இந்தியாவின் விகிலீக்சு’ என்றுக் கூறும் வண்ணம் வளர்ந்து நிற்கின்றது!!!

சவுக்கின் பலம்:

ஆதாரங்கள் - தான் முன் வைக்கும் ஒவ்வொருக் குற்றச்சாட்டுக்கும் பலமான ஆதாரங்களை முன் வைக்கின்றது சவுக்கு.

நடை - மிகவும் அழகான எழுத்து நடை, சவுக்கின் பதிவுகளுக்கு ஒரு மிகப் பெரிய பலம்.

சவுக்கின் மேல் வைக்கப் படும் குற்றச்சாட்டு:

சவுக்கு திமுகவினைப் பற்றி மட்டுமே செய்திகளை அதிக அளவு வெளி இடுகின்றது. அதிமுகவினைப் பற்றியச் செய்திகள் அதிக அளவு வெளியிடப்படுவது இல்லை. எனவே சவுக்கு அதிமுக சார்ந்ததா? என்றக் கேள்வி எழுந்தது. ஆனால் இதை சவுக்கு மறுத்து உள்ளது.


முடிவாக, அரசியல்..நாட்டு நடப்பு, ஊழல், சமுகம் ஆகியவற்றில் ஆர்வம் உடையவர்கள் சவுக்கினை நிச்சயம் படிக்கலாம்… படித்தால் நல்லது… நாட்டுக்கு!!!

சவுக்கு - ஒரு தைரியமான போராட்டம்!!!

0 கருத்துகள்:

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு