தமிழ்...!!!
இது வெறும் மொழி மட்டும் அல்ல... எங்கள் இனத்தின் தொன்மையையும் பெருமையையும் இளமையையும் இனிமையாக உலகிற்கு அறிவித்துக் கொண்டு இருக்கும் ஒருக் கலைக்களஞ்சியம்....!

எங்கள் இனத்தின் அடையாளம்!!!!

'தமிழ் எங்கள் உயிருக்கு நேர்' என்று பாவேந்தர் பாரதிதாசன் கூறியது வெறும் வார்த்தைகள் மட்டும் அல்ல.

தமிழ், தமிழ்ச்செல்வன், தமிழ்ச்செல்வி, தமிழரசி என்றெல்லாம் தங்களின் உயிருக்கும் மேலான குழந்தைகளுக்கு தங்களின் மொழியின் பெயரையே வைத்து தமிழர்கள் அழகுப் பார்த்தது போல் உலகில் வேறு எந்த இனம் அழகுப் பார்த்து இருக்கின்றது?.
உலகில் வேறு எந்த மொழி இந்தப் பெருமையை அடைந்து இருக்கின்றது?. நான் அறிந்த வரையில் தமிழுக்கு மட்டுமே இந்தப் பெருமை உள்ளது.

ஆனால், தங்களது குழந்தைகளுக்கு தமிழையே பெயராக வைத்து மகிழ்ந்த தமிழினம் இன்று தங்களுக்கு தமிழ் தெரியாது என்று பெருமையாகக் கூறிக் கொள்ளும் நிலை தமிழகத்திலேயே இருக்கின்றது.

வந்தோரை வாழ வைத்த தமிழகம் இன்று வந்தோரை நம்பி வாழ்ந்துக் கொண்டு இருக்கும் ஒரு அவநிலையில் இருக்கின்றது.

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்றும் 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்றும் உலக மக்கள் அனைவரையும் சரி...உலக சமயங்கள் அனைத்தையும் சரி இரு கை விரித்து அரவணைத்துக் கொண்ட மொழி இன்று மழுங்கடிக்கப்பட்டுக் கிடக்கின்றது. அதன் செல்வங்கள் மறைக்கப்பட்டுக் கிடக்கின்றன.

ஆனால் எவ்வாறு 'ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லையோ' அதே போல் தமிழின் செல்வங்கள் அவற்றின் தனித்துவத்தோடே இன்றும் நிலையாய், நம்மால் மீட்கப்படுவதற்காக காத்துக் கொண்டு இருக்கின்றன.

இந்த நிலையில் தான் தமிழை நேசிக்கும் தமிழர்களுக்கு சில கடமைகள் கூடுதலாக வந்து சேருகின்றன.

ஒன்று... தமிழை அறிவது... தமிழின் மூலம் தமிழினத்தை அறிவது!!!

இரண்டு... அறிந்ததை அறியாதவர்களிடத்து சேர்ப்பது... சேர்த்து, தமிழினத்தின் அறியாமையை நீக்குவது!!!

இந்தக் கடமை ஒவ்வொரு தமிழருக்கும் உள்ளது. இந்தப் பதிவினை என்னுடையக் கடமையாய் நான் தமிழினைப் பற்றி மேலும் அறிந்துக் கொள்ளவும், நான் அறிந்துக் கொண்டதை மற்ற நண்பர்களிடம் பகிர்ந்துக் கொள்ளவுமே ஆரம்பிக்கின்றேன்.

என்னுடைய அலுவலகத்தில் நடந்த ஒரு சிறு நிகழ்ச்சி.

ஆந்திராவினில் நான் வேலைப் பார்த்துக் கொண்டு இருக்கும் அலுவலுகத்தில் ஒரு நாள் திடீரென்று யானையைப் பற்றியத் தலைப்பில் ஒரு விவாதம் ஆரம்பம் ஆனது.

அப்போது குசராத்தினைச் சேர்ந்த எனது தோழி ஒருவர், குசராத்தி மொழியினில் ஆண் யானைக்கு 'காத்தி' (haathi) என்றும் பெண் யானைக்கு 'காத்தன்' (haathan) என்றும் தனித்தனி பெயர்கள் இருக்கின்றன என்றும் வேறு எந்த மொழியிலாவது அவ்வாறு தனிப் பெயர்கள் இருக்கின்றனவா என்று வினவினார்.

அணியில் உள்ள வேறு மொழியினர் எவரும் பதிலினைக் கூறவில்லை... நானும் தான்!!!

எவ்வளவு சிந்தித்தும் என்னுடைய சிந்தனைக்கு ஆண் யானை, பெண் யானை என்ற பெயர்களைத் தவிர வேறப் பெயர்கள் நினைவிற்கு வரவில்லை.

ஆனால் ஒரு நம்பிக்கை இருந்தது...!!!

மற்ற இந்திய மொழிகளில் இருக்கும் ஒரு விசயம் எங்கள் தமிழில் இல்லாது இருக்காது...நிச்சயம் எங்களுடைய தமிழ் மொழியில் யானைகளுக்கு வேறுப் பெயர்கள் இருக்கும்...!!!

அந்த நம்பிக்கையுடன் இணையத்தளங்களில் தேடும் பொழுது சற்று மலைத்து தான் போனேன். யானையைக் குறிக்க தமிழில் நாம் இதுவரை அறிந்த பெயர்களே மொத்தம் 170க்கும் மேல்.

களிறு, வேழம்,பிடி(பெண் யானை), வாரணம், அதவை என்று அந்தப் பெயர் பட்டியல் நீண்டுக் கொண்டே போகின்றது. யானைகளை ஆண், பெண், குட்டி, அறுபது வயதிற்கு மேலான யானை, போர் யானைகள் என்ற அடிப்படையில் மட்டும் அல்லாது இன்னும் பல்வேறுப் பிரிவுகளாக அவற்றைப் பிரித்து ஒவ்வொன்றுக்கும் தனித்துவமான பெயரிட்டு அழைத்து வந்து இருக்கின்றோம் தமிழர்களாகிய நாம்!!!

"என்னயா... ஒரு யானைக்கு இத்தனை பேரு... இத போயி பெருசா சொல்ல வந்திட்டியே..." என்று சிலர் எண்ணலாம்.

பெயர்கள் சாதாரணமானவை அல்ல... பெயர்கள்-அடையாளங்கள்!!!

பயனும் தேவையும் இருக்கும் பொருட்களுக்குத் தான் தேவையைப் பொறுத்து மக்கள் பெயர் இட்டு வழங்குவர். பயனில்லாப் பொருட்களுக்கு மக்கள் பலப் பெயர்கள் இட வேண்டிய தேவை இருக்காது. நாம் நமக்கு அறியாத ஒரு நபரைப் பற்றிக் கண்டுகொள்ள மாட்டோம் ஆனால் நெருங்கிய நண்பர்களுக்கு அவர்களின் குணத்திற்கும் நடவடிக்கைகளுக்கும் ஏற்றார்ப் போல் பலப் பெயர்களை உரிமையுடன் இட்டு வழங்குவோம்... அதே போல் தான் இதுவும்.

தமிழர்களின் வாழ்வினில் யானைகள் எவ்வளவு பயன் ஆற்றின என்பதையும், தமிழர்கள் அந்த யானைகளை எவ்வளவு ஆழமாக உணர்ந்து அவற்றின் பிரிவுகளை வரையறுத்து வைத்து இருந்தார்கள் என்பதையும் இந்தப் பெயர்களை பார்த்தாலே நாம் அறிந்துக் கொள்ள முடிகின்றது.

உலகின் மற்ற உயிரினங்களையும் மதித்து அதன் குணங்களை அறிந்து அவற்றினோடும் இயற்கையுடனும் ஒரு சேர வாழ்ந்த நாம், உலகம் தழைக்க பல்வேறு கருத்துக்களை காலத்தை வென்ற செம்மொழியாம் தமிழ் மொழியில் பதித்து வைத்து இருக்கின்றோம்.

இன்று நம் மொழியும் இனமும் தழைக்க அந்தக் கருத்துக்களை நாம் பரப்ப வேண்டி இருக்கின்றது. அதற்கு முதலில் நாம் அந்தக் கருத்துக்களை அறிய வேண்டியிருக்கின்றது.

வாருங்கள்... தமிழ் படைத்த அந்த மாபெரும் உலகினுள் பயணிப்போம்...


5 கருத்துகள்:

நல்ல கட்டுரை .. சிறு வயதில் ஐந்தாம் வகுப்பில் யானையை பற்றி படித்த போது இந்த பெயர்களை படித்ததாக ஞாபகம்....

தங்கள் பதிவிற்கு நன்றி பாலா... நாம் இன்னும் அறிந்துக் கொள்ள வேண்டிய கருத்துகள் அநேகம் உள்ளன... அறிவோம்!!!

அருமையான பதிவு. அடுத்த பதிவை ஆர்வமுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன்.

நன்றி நரேன்!!!

தோழா அந்த பெண்ணிடம் 170 பெயர்களையும் சொன்னீர்களா.

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு