இந்துவிற்கு ஒரு கடிதம்- லியோ டால்சுடாய்:

'சுதந்திர இந்தியா'வின் ஆசிரியருக்கு டால்சுடாய் எழுதிய பதில் கடிதம் தொடங்குகின்றது.

                                 1 
"உலகில் நிறைந்து இருப்பவை எல்லாம் ஒன்றே. அந்த ஒன்றைத் தான் மக்கள் பலப் பெயரிட்டு வழங்கி வருகின்றனர்." - வேதங்கள்

"அன்பே கடவுள், அந்த அன்பின் வழி எவன் நிற்கின்றானோ அவன் கடவுளின் வழி நிற்கின்றான், கடவுளும் அவன் வழி நிற்கின்றார்" - 1 யோவான் 4:16 

"கடவுள் முழுமையானவர். நாம் அவரது பகுதிகள்" - விவேகானந்தர் 

"உங்களின் அமைதியையும் நிம்மதியையும், ஆசைகளையும் மாயைகளையும் தோற்றுவிக்கும் இந்த உலகப் பொருட்களில் தேடாதீர். அவை உங்களை என்னை விட்டு விலக்கி வாழ்கையின் கரடுமுரடான பாதைகளுக்கு இழுத்து சென்று விடும். எப்பொழுது எல்லாம் நீங்கள் வாழ்க்கையின் வேர்களோடு சிக்கிக் கொண்டு விலக முடியாதவாறு உணருகின்றீர்களோ அப்பொழுது எல்லாம் நான் உங்களுக்காக அமைத்து வைத்து இருக்கும் வழியில் இருந்து நீங்கள் விலகி சென்று விட்டதாக அறிந்துக் கொள்ளுங்கள். ஏனெனில் நான் உங்களுக்காக பூக்களால் ஆன பரந்த மிருதுவான சாலைகளையே உருவாக்கி வைத்து இருக்கின்றேன். அந்தப் பாதையில் நீங்கள் தடுமாறாது பின்பற்ற, உங்களுக்கு வழிகாட்டியாய் ஒரு விளக்கையும் உங்கள் முன்னே நான் வைத்து இருக்கின்றேன்." - கிருசுனர் 


உங்களது கடிதத்தையும் அதனுடனே வந்த உங்களது பத்திரிக்கையின் இரண்டு வெளியீடுகளையும் நான் பெற்றுக் கொண்டேன். அவை இரண்டுமே என்னுள் மிகுந்த ஆர்வத்தை உருவாக்கி உள்ளன. பெருன்பான்மையினராக இருக்கும் மக்களை சிறுபான்மையினராக இருப்போர் அடக்கி ஆள்வதும் அதன் மூலம் தோன்றும் மனத்தளர்ச்சியும் எனது சிந்தனையை எப்பொழுதும் ஆக்கிரமித்துக் கொண்டு இருக்கும் ஒரு விசயம் ஆகும். அதுவும் குறிப்பாக இந்தக் காலத்தில் அவற்றைப் பற்றி நான் அதிகம் சிந்திக்க வேண்டி வருகின்றது. நீங்கள் உங்கள் கடிதங்களிலும் செய்திப் பிரசுரங்களிலும் எழுதி உள்ள கொடுமையான தீமைகள் எவ்வாறு தோன்றின, அவை தோன்றி எவ்வாறு வளருகின்றன என்று அந்த தீமைகளின் காரணியைப் பற்றியும், பொதுவாக நான் இந்த தலைப்பைப் பற்றி என்ன எண்ணுகின்றேன் என்பதனைப் பற்றியும் உங்களுக்கு விரிவாக விளக்க முயற்சி செய்கின்றேன்.

பெருவாரியான உழைக்கும் மக்கள் எவ்வாறு தங்கள் உழைப்பையும் வாழ்க்கையையும் சில முதலாளிகளின் கைகளின் கட்டுப்பாட்டிற்குள் விட்டு வைத்து இருக்கின்றனர் என்பதின் காரணம் எல்லா இடங்களிலேயும் ஒன்று தான். அது ஒடுக்கப்பட்டோரும் ஓடுக்குவோரும் ஒரே இனமாக இருந்தாலும் சரி அல்லது இந்தியாவினைப் போல அவர்கள் வெவ்வேறு நாட்டினைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி. அதன் அடிப்படை காரணம் ஒன்று தான். 

அதுவும் இந்தியாவினைப் பொறுத்தவரை இந்த விசயம் சற்று விசித்திரமாக தான் தெரிகின்றது. ஏனெனில் உடலாலும் சரி அறிவாலும் சரி நன்றாக வாழ்த்தப்பட்டு சிறந்து விளங்கும் இருபது கோடி மககள், தங்கள் சிந்தனைக்கு சற்றும் தொடர்பில்லாத சிந்தனையை உடையவர்களும் தங்களை விட ஆன்மீகச் சிந்தனையிலும் நடத்தையிலும் மிகவும் பின் தங்கியுள்ள,  சிறு குழுவினரிடம் தங்களையே அடிமையாகக் கண்டுக் கொண்டு இருக்கின்றனர்.

நான் உங்களுடைய கடிதத்தையும், 'சுதந்திர இந்தியா' பத்திரிக்கையின் சில கட்டுரைகளையும், சுவாமி விவேகானந்தரின் சில ஆர்வமூட்டும் கட்டுரைகளையும் மற்றும் சில புத்தகங்களையும் படித்து இருக்கின்றேன். எல்லாவற்றையும் வைத்துப் பார்க்கும் பொழுது, இந்தக் காலத்தில் எல்லா நாட்டினையும் பிடித்து உள்ள இந்தப் பிணிக்கு காரணம் சரியான ஆன்மீக கருத்துகளைப் போதிக்காததே என்றுத் தெரிகின்றது. மக்களிடம் வாழ்க்கையின் உண்மையான அர்த்தத்தை விவரிப்பதன் மூலம் அவர்களுக்கு வாழ்க்கையில் சரியான நடத்தைக்கு வழிகாட்ட ஒரு மாபெரும் விதி கிடைத்து இருக்கும். அந்த விதி எல்லாப் போலி மதங்களையும் போலி அறிவியலையும் தூக்கி எறிந்து மாற்றுவதோடு நில்லாமல் அந்த போலி மதங்களும் அறிவியலும் சொன்ன கருத்துகளின் மூலம் உருவாகி இருக்கும் 'நாகரீகம்' எனப்படும் தவறான நடத்தை முறைகளுக்கும் ஒரு முடிவினைக் கொண்டு வந்து இருக்கும்.

உங்களது கடிதமும், 'சுதந்திர இந்தியா' பத்திரிக்கையின் சில கட்டுரைகளும் இந்தியாவின் மற்ற அரசியல் சார்ந்த நூல்களும் பொதுவாக இப்பொழுது உங்கள் மக்களின் மத்தியில் உள்ளத் தலைவர்கள் எவரும் ஆன்மீகப் போதனைகளுக்கும் சிந்தனைகளுக்கும் முக்கியத்துவம் அளிப்பதாகக் காட்டவில்லை. உங்கள் மக்களால் தோற்றுவிக்கப்பட்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டும் உள்ள அந்த சிந்தனைகளை உங்கள் தலைவர்கள் மக்களின் உண்மைச் சுதந்திரத்திற்கு வழி வகுக்கும் வழியாகப் பார்க்க வில்லை. அந்தத் தலைவர்கள், மக்களை அவர்கள் கட்டுண்டு கிடக்கும் இந்த அடக்குமுறையில் இருந்து விடுவிக்க, ஆங்கிலேயர்களும் மற்ற போலி கிருத்துவ நாடுகளும் எப்படி எந்த ஆன்மீக நெறியும் இல்லாத தவறான சமுக நடைமுறைகளின் வழியாக இக்காலம் இயங்குகின்றனவோ, அதே வழிகளைத் தவிர வேறு வழிகளை அறியாத நிலையில் உள்ளனர்.

இருந்தும், இந்திய மக்கள் ஆங்கிலேயர்களால் அடிமைப்படுத்தப் பட்டதற்கு ஒரு முக்கிய காரணம், ஏன் ஒரே காரணம் என்னவெனில் அது அவர்களிடம் சரியான ஆன்மீக விழிப்புணர்ச்சியும், அந்த விழிப்புணர்ச்சியின் மூலம் எழுந்து இருக்கக் கூடிய வாழ்வின் நடத்தை விதியும் இல்லாததே ஆகும். இந்தக் குறைபாடு சப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் பல கிழக்கு மற்றும் மேற்கத்திய நாடுகளில் இன்று இருப்பது போன்றே இந்தியாவிலும் உருவாகி இருக்கின்றது.

கடிதம் தொடரும்...   

2 கருத்துகள்:

தமிழ் வெளி, தமிழ் மணத்தில் இணைக்கவும்.

நன்றி ஆட்காட்டி! ஏற்கனவே தமிழ்மணத்தில் பதிவுகளை இணைத்து இருக்கின்றேன். தமிழ் வெளியில் இணைக்கவும் செய்கின்றேன். தங்கள் பகிர்விற்கு நன்றி!

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு