அமைதி...!!!

இது வரை அந்த அரங்கம் காணாத அமைதி!!!

பொதுவாக 100 பேர் ஒன்று கூடி இருந்தாலே அதிரும் அந்த அரங்கம் அன்று 50,000 பேர் நிறைந்து இருந்தும் வழக்கத்துக்கு மாறாக அமைதியாக காத்துக் கொண்டு இருக்கின்றது.... ஒருவனுக்காக!!!

அவனுக்காக...!

அமைதி நல்லது தான்.

அவனைக் கண்ட உடன் அந்த அமைதியைக் கிழித்துக் கொண்டு எழும் சத்தத்தின் மதிப்பை உணர்த்த அந்த அமைதி நிச்சயம் வேண்டும்! 

அவன் புன்னகைக்கின்றான். அந்த நாள் நிச்சயம் வரலாற்றின் பக்கங்களில் எழுதப்படும். அதில் துளியும் அவனுக்கு சந்தேகம் இருக்கவில்லை.

அவர்கள் முன் அவன் தோன்றும் நேரம் நெருங்குகின்றது. மக்கள் அனைவரும் மேடையையே பார்த்துக் கொண்டு இருக்கும் போது யாரும் எதிர்பாரா வண்ணம் மேடையின் அடியில் இருந்து மேடையை பிளந்துக் கொண்டு வந்து மேடையின் மேல் நிற்கின்றான்.

என்ன நடந்தது என்பதை ஒரு கணம் உணர முடியாது அந்த கூட்டம் அதிர்ந்து நிற்கின்றது. மறு கணம், அவர்களின் சத்தத்தால் அந்த அரங்கம் அதிர்கின்றது.

இது வரை அந்த அரங்கம் கண்டிராத உற்சாகம், கேட்டிராத சத்தம் ... இப்பொழுது அங்கே கரை புரண்டோடிக் கொண்டு இருக்கின்றது... அவனுக்காக... அவன் குரலுக்காக.
அவன் பேசவில்லை.

ஏன், அவன் தலை முடி கூட இன்னும் அசையவில்லை.

இருந்தும் அவனைக் காணக் காண கூட்டத்தின் சத்தம் கூடுகின்றது.

புன்னகைக்கின்றான். இந்த கூட்டம் அவனுக்காகவே வந்த கூட்டம். அவன் குரலுக்காக வந்த கூட்டம்.

அவர்களின் ஆர்ப்பரிப்பு விண்ணைப் பிளக்கின்றது.

அவன் பாட ஆரம்பிக்கின்றான்.

இப்படி ஒரு கனவு அமெரிக்காவில் உள்ள சிகாகோ மாகாணத்தில் ஒரு சிறிய வீட்டில் தனது தந்தையிடம் தினம் திட்டும் அடியும் வாங்கிக் கொண்டு இருந்த அந்த சிறுவனின் மனதில் இருந்தது என்று சொன்னால் எவரும் எளிதில் நம்பி இருக்க மாட்டார்கள்.
அனால் மைக்கேல் அந்த கனவினைத் தான் கண்டுக் கொண்டு இருந்தான். அவன் வயதிற்கு மீறிய கனவு தான். இருந்தும் அவன் அந்தக் கனவை அலட்சியப்படுத்தவில்லை.

"இசை!!!... ஆகா எவ்வளவு அருமையாக இருக்கின்றது நிச்சயம் இதை நாம் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அது போதும். மற்றதை அதுப் பார்த்துக் கொள்ளும்" என்று எண்ணியவாறே அவன் காலத்தை நகர்த்திக் கொண்டு இருந்தான்.

அவன் தந்தை ஒரு சிறிய இசை கலைஞர் ஆக இருந்ததோ இல்லை அவனின் சகோதரர்கள் அனைவரும் இசைப் பிரியர்களாக இருந்ததோ என்னவோ இசை மைக்கேலின் வாழ்வோடு எப்பொழுதும் கலந்திருந்தது.

அவன் இசையை அவனது உணர்ச்சிகளின் வடிகாலாகப் பார்த்தான். இசை அவனது மகிழ்ச்சியையும் துக்கத்தையும் அவனது மனதிற்கேற்ப வெளிப்படுத்துவதை உணர்ந்தான். செம்புலம் சேர்ந்த நீர்ப் போல விரைவில் அவனும் இசையோடு கலக்க ஆரம்பித்தான்.

அவனது அந்த இசை ஆர்வமும் திறமையும் தான் அந்த சிறு வயதிலையே அவன் அவனது சகோதரர்களுடன் மேடையேறி பாடப் போவதை அவனது வீட்டில் யாரும் தடுக்க விடாது செய்தது. அவனது சகோதரர்களும் அவனை ஆவலுடன் அவர்களுடன் சேர்த்துக் கொண்டனர்.

அந்த காலத்தில், அமெரிக்காவில் உள்ள சிறு நகரங்களில் உள்ள உணவு விடுதிகளில் உணவு உண்ண வருவோரைக் கவரச் சிறு சிறு இசைக் குழுவினரை அழைத்துப் பாட வைப்பது என்பது வழக்கத்தில் இருந்தது. இசை ஆர்வம் உள்ளோர் அந்த மேடைகளை பயன்படுத்திக் கொண்டு தங்கள் திறமைகளை வெளிக் காட்டிக் கொண்டு இருந்தனர்.

அப்படிப்பட்ட ஒரு விடுதியில், 1965 ஆம் ஆண்டு தனது சகோதரர்களின் குழுவின் சார்பாக மைக்கேல் பாடுவதற்கு தயார் ஆனான்.

இசை உலகம் அது வரை தான் கண்டிராத புரட்சிக்கு தயார் ஆனது...!!!

தொடரும்....



2 கருத்துகள்:

சுவாரசியமாக நகர்த்தகிறீர்கள் நன்றி..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
வைரமுத்துவின் மறுபக்கமும் என் சந்தேகங்களும் தீர்த்து விடுங்களேன்.

தங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி சகோதரர் சுதா அவர்களே...!!!

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு