வானத்தை வெறித்துப் பார்த்தவாறு தனது வீட்டு வாசலில் அமர்ந்து இருந்தான் செல்வன். இரவினை அலங்கரிக்கும் நட்சத்திரங்கள், ஒற்றை நிலா, அந்த நிலவொளியில் மேலும் அழகுக் கூடி மிளிரும் அவன் வளர்த்த ரோசாக்கள் என்று அவன் வாழ்வில் ஒரு காலத்தில் மிகவும் முக்கியமானதாய் கருதிய பலவும் இன்றும் மாறாது இருந்தன.
அவனும் மாறாது தான் இருந்தான்.
ஆனால் அவனை அறியாது கடந்த சில தினங்களில் பல மாற்றங்கள் அவன் ஊரினில் நடந்து இருந்தன. அந்த மாற்றங்கள் தான் அவனுக்கு புரியவில்லை.
ஏன் இந்த மாற்றங்கள்?.
எப்பொழுதும் பள்ளி முடிந்து வரும் அவனை பாசத்துடன் விளையாட வரவேற்கும் அவன் வீட்டிற்க்கு எதிரே இருந்த மைதானத்தை அவனிடம் இருந்து பிரிக்கும் வண்ணம் புதிதாய் அந்த வேலி எதற்கு?.
எப்பொழுதும் அமைதியாக இருக்கும் அவனுடைய ஊரில் திடீர் என்று தோட்டாக்கள் முழக்கம் இடுவது ஏன்?
எப்பொழுதும் அவனுடன் விளையாடும் அவனுடைய நண்பர்கள் சிலரை கடந்த சில நாட்களாக காணவில்லையே. எப்பொழுதும் புன்னகையோடு பாசத்தோடு வரவேற்கும் அவனின் நண்பர்களின் தாய்மார்கள் இப்பொழுது ஏன் கண்ணீர் சிந்திக் கொண்டே இருக்கின்றனர்... ஏன்?
எல்லாவற்றுக்கும் மேலாக இப்பொழுது புதிதாய் ஊரடங்கு உத்தரவு என்று சொல்கின்றனர். இருட்டிய பின்பு யாரும் வீட்டின் வெளியே செல்லக் கூடாதாம். இரவில் மைதானத்திலுள்ள ஏரியில் நிலவின் பிரதிபலிப்பை அவன் பார்த்து ரசிப்பதில் அந்த வேற்று மொழி பேசும் மனிதர்களுக்கு என்ன தீங்கு வந்து விடும் என்றும் அவனுக்கு புரியவில்லை.
எட்டே வயதான அவனுக்கு அந்த கேள்விகளுக்கு எல்லாம் விடைத் தெரியவில்லை. அவனுக்குத் தெரிந்தவரை அந்த வேற்று மொழி பேசுபவர்கள் அவர்களுக்கு எதிரிகள். அவனது ஊரினை பிடிப்பதற்கு வந்து இருப்பவர்கள். அவ்வளவே!!!
இதிலும் ஒரு குழப்பம் அவனுக்கு.
ஏன் அவன் ஊரினை பிடிக்க வந்து இருக்கின்றார்கள்?.
அவனுடைய ஊரில் அப்படி என்ன இருக்கின்றது?. பொதுவாக பொன்னும் பொருளும் அதிகம் உள்ள ஊரைத் தானே பிறர் பிடிக்க வருவர்... அவனது ஊரில் மகிழ்ச்சியைத் தவிர அவனுக்கு தெரிந்து வேறு பொருட்கள் இல்லையே... பின் ஏன் இந்த துப்பாக்கி தூக்கிய நபர்கள் அவனது ஊரினை பிடிக்க வந்து இருக்கின்றனர்.
அவர்களது புன்னகை, பொன்னையும் பொருளையும் விட அவ்வளவு விலை மதிப்பு உயர்ந்ததா?.
அதற்காகவா அவனது ஊரினில் உள்ள அனைத்துப் புன்னகையையும் அவர்கள் கொள்ளை அடித்துக் கொண்டு இருக்கின்றனர்.
செல்வனுக்கு புரியவில்லை. அந்தக் கேள்விகளுக்கு விடையினை யோசித்தவாறே அவன் அவன் வீட்டு வாசலில் அமர்ந்து இருந்தான்.
"அண்ணா...."
வீட்டினுள் இருந்து அவன் தம்பி இளங்கோவின் குரல் கேட்டது.
செல்வன் திரும்பி வீட்டினுள் பார்த்தான். அவனுடைய மூன்று வயதுத் தம்பி அவர்களின் அன்னை படுத்து இருந்த படுக்கையின் அருகே அமர்ந்து இருந்தான்.
செல்வன் எழுந்து பக்கவாதம் வந்து படுத்த படுக்கையாய் இருந்த அவனின் அன்னையின் அருகிலே சென்றான். அவனுடைய அன்னை தாகத்தால் விக்கிக் கொண்டு இருந்தார்கள்.
"அண்ணா... அம்மாவுக்கு தண்ணி..." என்றான் இளங்கோ.

செல்வன் வீட்டினுள் சுற்றியும் பார்த்தான். தண்ணீர் வைத்து இருந்த பானைகள் எல்லாம் காலியாக இருந்தன.
செல்வன் மணியைப் பார்த்தான்.
இரவு 11:30 என்று கடிகாரம் காட்டிக் கொண்டு இருந்தது.
மீண்டும் திரும்பி அவனது அன்னையைப் பார்த்தான்.
அவனின் அம்மா தண்ணீர் வேண்டாம் என்பதுப் போல் தலையை அசைத்துக் கொண்டு இருந்தார்.
செல்வன் திரும்பி வாசலை நோக்கினான். ஏரி அவனது வீட்டினில் இருந்து மிகத் தொலைவினில் இல்லை. அருகில் தான் இருந்தது. என்ன, நடுவிலே ஒரு வேலி ஏரியை மறைத்துக் கொண்டு இருந்தது. போதாகுறைக்கு இந்த ஊரடங்கு உத்தரவு வேறு. இந்த நேரம் வெளியிலே தென்பட்டால் சுடுவார்கள். அவ்வளவு தானே!!!
அவன் முடிவு செய்து இருந்தான்.
மாட்டினால் தோட்டாக்கள் கிடைக்கும். சரி பிரச்சனை இல்லை.
ஆனால் அவன் போகவில்லை என்றால் நிச்சயம் அவன் அன்னை உயிர் வாழ்வதற்கு வாய்ப்புகள் கடினம் தான்.
தோட்டாக்களா அல்லது அன்னையா?. நிச்சயம் அன்னைதான்.
செல்வன் கிளம்பத் தயார் ஆனான்.
"இளங்கோ... அந்தக் கோப்பையை எடுத்துக் கொண்டு வா... நாம் சென்று தண்ணீர் கொண்டு வருவோம்" என்று அவனது தம்பியை அழைத்துக் கொண்டு கவனமாக வீட்டை விட்டு வெளியேறினான் செல்வன். அவனது தம்பி இளங்கோவும் அண்ணனின் சொல்லைக் கேட்டு அண்ணனைத் தொடர்ந்து செல்ல ஆரம்பித்தான்.
செல்வனுக்குத் தெரிந்து வேலியைக் கடப்பதற்கு ஒரு இடம் இருந்தது. ஒரு புதர் மறைவில் வேலியின் அடியே ஊர்ந்து மைதானத்தின் பக்கம் போகும் வழி இருந்தது.
செல்வன் இளங்கோவை அழைத்துக் கொண்டு அந்த புதரின் அருகிலே சென்றான்.
"இளங்கோ... இந்த புதரின் பின்னாடியே பத்திரமாக பதுங்கி இரு. நான் போய் தண்ணி பிடித்து வந்து விடுகின்றேன்" என்று இளங்கோவை பத்திரமாக புதரின் மறைவில் இருத்தி விட்டு வேலியின் அடியில் நுழைந்து மைதானத்திற்குள் நுழைந்தான் செல்வன்.
மெதுவாய் ஏரியை நோக்கிச் சென்றான்.
நிலவொளியில் ஏரி மின்னிக் கொண்டு இருந்தது. ஆனால் அவன் மிகவும் நேசித்த இயற்கையை நின்று ரசிக்க நேரம் இல்லாமல் செல்வன் தான் கொண்டு வந்து இருந்த கோப்பையினில் நீரினைப் பிடித்து விட்டு தான் வந்த வழியிலேயே திரும்பி வேலியை நோக்கிச் செல்லலானான்.
வேலியை நெருங்கியப் பின் செல்வன் அவன் தண்ணீர் பிடித்து வந்து இருந்த கோப்பையை இளங்கோவிடம் கொடுத்து விட்டு மீண்டும் வேலியின் அடிப் பகுதி வழியாக அவன் வீடு இருக்கும் பகுதிக்கு செல்ல முயன்ற பொழுது தான் அவன் பயந்து கொண்டு இருந்த விசயம் நடந்தது.
எங்கிருந்தோ இருந்து இருளைக் கிழித்துக் கொண்டு வந்த தோட்டா ஒன்று அவனின் காலைப் பதம் பார்த்தது.
எப்பொழுதும் இதை எதிர்ப் பார்த்து இருந்த செல்வன் அவன் வலியால் கத்தினான் என்றால் அவன் தம்பியும் மாட்டிக் கொள்வான் என்பதால் செய்கையால் இளங்கோவை வீட்டிற்க்கு போகும் படி சொல்லிவிட்டு "இறைவா! அவர்கள் எங்களைப் பார்த்து இருக்க கூடாது. ஏதோ சத்தம கேட்டே சந்தேகத்தின் பெயரில் இங்கு சுட்டு இருக்க வேண்டும். என்னுடைய தம்பி பத்திரமாக வீடு போய்ச் சேர உதவி செய்" என்று வேண்டிக் கொண்டே பல்லைக் கடித்துக் கொண்டு அசையாது வலியைத் தாங்கிக் கொண்டான்.
இளங்கோவும், அண்ணன் சொன்னால் சரி என்றே அந்த கோப்பையை எடுத்துக் கொண்டு வீட்டினை நோக்கி செல்ல ஆரம்பித்தான். செல்வனின் எண்ணப்படி அவனைச் சுட்டவர்கள் சந்தேகத்தின் பெயரிலையே சுட்டதினால் இளங்கோ இருந்த பக்கம் அவர்களின் கவனத்தைச் செலுத்தாது அவர்களின் பார்வையைச் செல்வன் இருந்த வேலியின் பக்கமே செலுத்தியிருந்தார்கள். இதனால் இளங்கோ பத்திரமாக வீடு போய் சேர்ந்தான்.
"அம்மா ... தண்ணீ.." என்றவாறே அவன் கொண்டு வந்து இருந்த தண்ணீர்க் கோப்பையை விக்கிக் கொண்டு இருந்த அவனின் அன்னையின் அருகிலே வைத்தான்.
இரண்டு பேராகச் சென்றவர்கள் ஒரு குண்டுச் சதத்திற்கு பின்னால் ஒருவராக வந்து இருக்கின்றார்கள் என்பதைப் பார்த்ததுமே அவர்களின் அன்னைக்குப் புரிந்து விட்டது.
"ஐயோ... நானே என்னுடைய பையனின் மரணத்திற்கு காரணம் ஆகி விட்டேனே... இந்த பாழாப் போன விக்கல் என்னுடைய உயிரை எடுக்காது என்னுடைய பையனின் உயிரை எடுத்து விட்டதே" என்று எண்ணியவாறே அவள் கண் கலங்கியது. தொண்டைக்குழி வரை வந்து நின்ற சோகம் அவளின் வாய் வழியாக சத்தமாக வெளியேறாது , கண்களின் வழியாக கண்ணீராக வெளியேறிக் கொண்டு இருந்தது.
"அம்மா .. அழாதே...!!! அண்ணா ... அம்மா அழுதுப் பாரு..." என்று இளங்கோக் கூறி விட்டு வழக்கம் போல அவனது அண்ணனைத் தேடித் திரும்பிப் பார்த்தான். அப்பொழுது தான் அவன் அண்ணன் இன்னும் வீட்டிற்க்கு வரவில்லை என்பதை உணர்ந்தான்.
"அம்மா ... அண்ணா வரல" என்றுக் கூறிவிட்டு அவன் திரும்பி வீட்டு வாசலை நோக்கி நகர ஆரம்பித்தான்.

"இளங்கோ போகாதே.." என்று சொல்ல முயன்றும் சொல்ல இயலாத அவளின் முடியாமையை எண்ணி அவளின் கண்ணீர் இன்னும் கொஞ்சம் அதிகமானது.
இளங்கோ அவன் அண்ணன் முன்பு அமர்ந்து இருந்த அதே வாசலில் அமர்ந்து அவனின் அண்ணனை காண காத்து கொண்டு இருக்க ஆரம்பித்தான்.
சிறிது நேரத்தில் சற்றுத் தொலைவில் தோட்டாக்கள் மீண்டும் வெடிக்கும் சத்தம கேட்டது. பின் ஒரே அமைதி.
அண்ணனை எதிர்ப்பார்த்து இளங்கோ அண்ணனின் ரோசக்களைப் பார்த்தவாறே காத்துக் கிடந்தான்.
அவனின் அன்னையின் கண்ணீரால் அவன் கொண்டு வந்து இருந்த தண்ணீர்க் கோப்பை நிரம்பி வழிந்துக் கொண்டு இருந்தது.
விடியலை எதிர்பார்த்து அந்த ஊர் காத்துக் கொண்டு இருந்தது. ஒரே கேள்வி தான் அந்த மக்களுக்கு,
விடியல் எப்பொழுது?....

அன்பையும் உறவையும் புதைத்து விட்டு இவர்கள் வேறு எதை அறுவடைச் செய்யப் போகிறார்கள்.
ரோசாக்களைப் சிதைத்துவிட்டு முட் தோட்டங்களால் மட்டும் என்ன பயன்...
விடியல் எப்பொழுது?....

3 கருத்துகள்:

கனத்துப்போனது இதயம் உணர்வுகளையும் , வலிகளையும் வார்த்தைகளில் கசிய செய்திருக்கும் ஒரு பதிவு அருமை . பகிர்வுக்கு நன்றி நண்பரே

சகோதரா கடந்த வருடத்தின் சில நினைவுகளை மனக்கண் முன் கொண்டு வந்து விட்டீர்கள் நன்றி...

தங்கள் வருகைக்கும் ஊக்குவிக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றி தோழர்களே!!!

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு