சூன் 25 2009
என்றும் போல் தான் அன்றும் விடிந்து இருந்தது. வழக்கம் போல் எழுந்து அலுவலகத்திற்கு செல்லத் தயாராகிக் கொண்டு இருந்தேன்.
"யோவ்.. மைக்கேல் ஜாக்சன் இறந்துட்டாராமே"
வேறொரு அறையில் இருந்து வந்த நண்பரின் குரல் என்னை திடுக்கிட வைத்தது.
"சும்மா விளையாடாதடா... உனக்கு இதே வேலையா போச்சி" என்றவாறே அவர் இருந்த அறையினுள் நுழைந்தேன்.
"நான் ஒண்ணும் விளையாடலையப்பா.. இந்தா செய்தியில காட்டிக்கிட்டு இருக்கானுங்க பாரு" என்றவாறே தொலைக்காட்சியை காட்டினார்.
ஒரு கணம் என் உலகம் நின்று போனது.
தொலைக்காட்சியில் மைக்கேல் மரணம் என்ற செய்தி தலைப்புச் செய்திகளாக ஓடிக் கொண்டு இருந்தது.
இல்லை... எங்கோ தவறு நடந்து இருக்க வேண்டும்.. மைக்கேலாவது இறப்பதாவது... வாய்ப்பே இல்லை.
ஆனால் நான் பயந்தது தான் நடந்து இருந்தது.
இறந்து தான் போயிருந்தார் மைக்கேல்.
அந்த நாள், உலக இணையமே செயல் புரிய முடியாமல் சில நிமிடங்கள் திணறி நின்றது என்றார்கள். உலகமே அதிர்ச்சியுடன் நின்றது என்றார்கள்.
ஏன்?.
ஏன் என்னுடைய உலகமும் ஒரு கணம் நின்று போனது?.
அவர் என்னுடைய ஊர் கிடையாது.
என் மொழி அவருக்கு தெரியாது. ஏன்.. என்னையும் தான்!!!
இருந்தும் ஏன் எனக்குள் ஒரு வருத்தம். உலகத்தில் ஏன் பலருக்கும் அதே வருத்தம்.
ஒரு மனிதனுக்கு இது சாத்தியப்படுமா? அதுவும் குழந்தைகளைக் கொடுமைப்படுத்தியவன், மனித முகத் தோற்றத்தையே அறுவைச் சிகிச்சைகளின் மூலம் இழந்தவன் என்று உலகத்தால் இகழப்பட்டு தனது சொத்துகளைக் கிட்டத்தட்ட முழுவதுமாய் இழந்து நின்ற ஒருவனால் இது சாத்தியப்படுமா?
சாத்தியப்பட்டு இருக்கின்றதே!!!
அப்படி எங்களை இணைத்தது எது?
இசையா...!!!
இசை மட்டுமா.........???
இல்லை....!!! நிச்சயம் இல்லை.
இசையை தாண்டியும் ஏதோ ஒன்று எங்களை இணைத்துக் கொண்டு இருந்தது... இருக்கின்றது.
அந்த ஏதோ ஒன்றை அறிந்துக் கொள்ள வேண்டும் என்றால் மைக்கேலைப் புரிந்துக் கொள்ள வேண்டும்.
யார் அந்த ஜாக்சன்?....
அறிவோம்... உலகம் இது வரை கண்டிராத, மொழிகளைக் கடந்து நின்ற ஒரு கலைஞனைப் பற்றி!!!!

பி.கு:
இந்த பதிவு மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கையைப் பற்றிய சரிதையோ அல்லது, அவர் நல்லவரா அல்லது கெட்டவரா என்ற விவாதமோ கிடையாது. மைக்கேல் என்ற ஒரு கலைஞன் .. ஒரு மனிதன்... என்னுள் ஏற்படுத்திய தாக்கத்தை ...அவரைப் பற்றி நான் உணர்ந்தவைகளைப் பற்றியப் பதிவே ஆகும்.

************************************************************************************
"இசை... எனது உணர்ச்சிகளின் வடிகால். உலகம் முழுவதும் உள்ள இசைக் காதலர்களுக்கு எனது பரிசு. அதன் வழியே... எனது இசையின் வழியே... எனக்குத் தெரியும்... நான் என்றென்றும் வாழ்ந்திருப்பேன் " - மைக்கேல்

1 கருத்துகள்:

தோழரே,
அன்று எனது உலகமும் ஒரு கனம் நின்று தான் போனது, பின்நோக்கி நினைத்து பார்த்தால் ஒரு பைத்தியம் போல் MJ வை ரசித்திருக்கிறேன் பல காலமாய், அவரது Moon Walk யை ஒரு ஆயிரம் முறையாவது முயற்சி செய்து பார்த்திருப்பேன்..எத்தனையோ முறை Dangerous பாட்டை கேட்டு இருப்பேன், இன்னும் நிறைய இருக்கிறது சொல்ல.. உங்களிடமும் நிறைய எதிர்பார்க்கிறேன் இந்த தொடர் பதிவில்...வாழ்த்துக்கள்
MJ மீதான எனது பார்வையை இன்னும் விசாலாமாக்கியது வினவில் வந்த இந்த கட்டுரை, படித்து பாருங்கள்...
http://www.vinavu.com/2009/07/20/mj/

உங்கள் எழுத்து முதிர்ச்சி அடைந்திருக்கிறது, அருமையாக எழுதுகிறீர்கள்... தொடர்ந்து எழுதுங்கள்....

என்றும் தோழமையுடன்,
மோகன்

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு