நம்ப முடியவில்லை!!!

பேரிஜம் ஏரியைப் பார்த்தவாறு யோசித்துக் கொண்டு நின்றேன். அதற்குள் இந்த பயணம் முடிவிற்கு வந்து விட்டதா?. ஏதோ நேற்றுக் காலை தான் இந்த ஏரியின் கரையில் வந்து இறங்கியது போல் இருந்தது. ஆனால் என்னை அறியாமலே மூன்று நாட்கள் கடந்து சென்று இருந்தன. சோலைகள்,ஏரிகள்,நீர் நிலை ஆதாரங்கள், அருவிகள், செந்நாய்கள் ... மிக முக்கியமாய் அட்டைகள் என அந்த மூன்று தினங்களில் நாங்கள் கற்றுக் கொண்டது ஏராளம். நிச்சயம் எங்களில் யாரும் இந்த பயணத்தை தங்கள் வாழ்நாளில் மறக்கப் போவதில்லை. ஆரம்பத்தில் "நாலு நாளு காட்டுக்குள்ள என்னடா பண்றது" என்று வந்தவர்கள் கூட இன்று "ச்சே... இன்னும் கொஞ்ச நாள் கூடுதலா இருக்கிற மாதிரி இருந்தா நல்லா இருக்குமேடா" என்று மாற்றிச் சொல்லும்மாறு அமைந்து இருந்தது எங்களின் பயணம்.

"ஹ்ம்ம்.. எப்படி இருந்தா என்ன... இதோ பயணம் முடிந்து கிளம்பும் நேரம் நெருங்கிக் கொண்டு இருகின்றதே" என்று எண்ணியவாறே ஏரிக்கரையில் இருந்த என்னுடைய குடிலை நோக்கிச் செல்ல ஆரம்பித்தேன்.

"எல்லோரும் இங்கே வாருங்கள்!!!" சற்று தூரத்தில் பேராசிரியர் கந்தசாமியின் குரல் ஒலித்தது. அனைவரும் அவரின் அருகில் விரைவாகச் சென்றோம்.
"எல்லாரும் கிளம்புவதற்கு தயாராக இருகின்றீர்களா" என்றார்.
கூட்டத்தில் இருந்து பதில் இல்லை.
புன்னகைத்தார்.
"என்ன... கிளம்புவதற்கு மனம் இல்லையா?" தொடர்ந்தார்.
இம்முறையும் கூட்டத்தில் இருந்து ஒரு பதிலும் இல்லை. ஆனால் அவர் கூற்றை ஆமோதிப்பதை போல பல தலைகள் அசைய மட்டும் செய்தன.
" சரி! அப்படி என்றால் நீங்கள் கிளம்புவதற்குள் புதிதாய் ஒரு இடத்திற்கு சென்று வந்து விடலாமா?" என்றார்.
கூட்டத்தில் இருந்து புன்னகைகள்.
" எங்களுக்கு சரி... எங்கே போகின்றோம்.. மீண்டும் காட்டுக்குள்ளேயா" என்றான் ஒருவன்.
"இல்லை இல்லை. நாம் இப்பொழுது பேரிஜம் ஏரிக்கு செல்லப்போகின்றோம்.. அங்கே ஒரு முக்கியமான விஷயத்தை நீங்கள் அறிந்துக் கொள்ள வேண்டி இருக்கின்றது. இன்னும் 10 நிமிடங்களில் நாம் கிளம்ப வேண்டும். அனைவரும் போய் தயார் ஆகுங்கள்" என்று கூறி அவர் அவரின் குடிலின் உள்ளே சென்றார். நாங்களும் கிளம்பத் தயார் ஆனோம்.

நாங்கள் செல்ல இருந்த ஏரிக்கரை சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் இடம். நாங்கள் சென்ற நேரம் காலை 8 மணி என்பதால் எந்த சுற்றுலாப் பயணியும்(எங்களைத் தவிர) இல்லாது அமைதியாய் காட்சி அளித்தது அந்த ஏரிக்கரை. நாங்கள் அந்த காட்டினுள் கண்ட அனைத்து இடங்களைப் போலவே இந்த இடத்தையும் இயற்கை நன்றாக அலங்கரித்து இருந்தது.

"அனைவரும் வந்து விட்டீர்களா" என்றவாறே தனது பேச்சை ஆரம்பித்தார் பேராசிரியர். " சரி! மூன்று நாட்களாக நாம் இயற்கையை பற்றி படித்து வந்து கொண்டு இருக்கின்றோம். இப்பொழுது சொல்லுங்கள். இயற்கைக்கு மிகவும் தீங்கு விளைவிக்க கூடிய சக்தி எது?"

"....மனிதன்" என்றாள் ஒருத்தி.

"மிகவும் சரி... அதே போல் இயற்கையை காக்கும் வல்லமையும் யாரிடம் இருக்கின்றது" தொடர்ந்தார் பேராசிரியர்.

"அதுவும் மனிதன் தான்" என்றாள் அவள்.

"சரியாகச் சொன்னாய்... ஆனால் பிரச்சனை எங்கே ஆரம்பிக்கின்றது என்றால் தன்னிடம் காக்கும் வல்லமையும் பொறுப்பும் இருக்கின்றது என்பதை பல மனிதர்கள் மறந்துவிட்டு அழிப்பதில் மட்டுமே கவனத்தை செலுத்துவதினால் தான் இயற்கைக்கு பிரச்சனையே ஆரம்பிக்கின்றது. இதோ இந்த எரிக்கரையைப் பாருங்கள். இயற்கை மனிதன் ஓய்வெடுக்க ஒரு நிம்மதியான இடத்தை உருவாக்கி விட்டு அவனுக்காக காத்து இருக்கின்றது. ஆனால் அவனோ அவனது இன்பத்திற்காக அவனை அறியாமலே இயற்கையை அழித்துக் கொண்டு இருக்கின்றான்" என்று அந்த ஏரிக்கரையில் இருந்த ஒரு சிகரட் பெட்டியை எடுத்தவாறே முடித்தார்.

"புகைப் பிடிப்பதினால் சுற்றுச் சுழல் மாசுப் படுகின்றதே அதை பற்றியா சொல்லுகின்றீர்கள்?" என்றேன்.

"அதை மட்டும் அல்ல... இதோ இந்த ஏரிக்கரையில் நீங்கள் பார்த்தால் தெரியும்.. மதுபான பாட்டில்கள், பிளாஸ்டிக் கவர்கள் ... இன்னும் பல இயற்கையை கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக் கொண்டு இருக்கின்றன. அதுவும் குறிப்பாக அந்த பிளாஸ்டிக் கவர்கள்... நாம் நேற்று பைன் மரங்களைப் பற்றியும் அவைகள் மண்ணிற்கு செய்யும் தீங்கைப் பற்றியும் பார்த்தோம் அல்லவா... இந்த பிளாஸ்டிக் கவர்கள் அந்த பைன் மரங்களையே வளரவிடாது செய்து விடும் தன்மை பெற்றவை. அப்படி என்றால் இவைகளை இப்படி இயற்கையின் மத்தியில் விட்டுச் செல்வது இயற்கைக்கு எவ்வளவு பெரிய தீங்கை விளைவிக்கும் என்று எண்ணிப் பார்த்தீர்களா?. மண்ணிற்கு உரிய தண்ணீரை மண்ணிடம் சேர்க்காது, அதே போல் வேறு செடிகளையும் வளர விடாது இந்த கவர்கள் இயற்கையை மெதுவாக அழித்து விடும்." என்று கூறி முடித்தார்.

"சரி ஐயா! இப்பொழுது நாங்கள் என்ன செய்ய வேண்டும்?" என்றேன்.
"பெரிதாய் ஒன்றும் இல்லை. மனிதன் மாசு படுத்திய இடங்களை மனிதனே தான் தூய்மை செய்ய வேண்டும். இப்பொழுது நாம் இந்த இடத்தில இருக்கும் இயற்கைக்கு தீங்கு விளைவிக்கும் அனைத்து பொருட்களையும் நீக்கி இந்த இடத்தை சுத்தம் செய்யப் போகின்றோம். உங்களுக்குள்ளேயே அணிகள் பிரித்து கொண்டு ஆரம்பியுங்கள் பாப்போம்" என்றார்.

புதிதாய் எதையாவது இன்று கற்றுக்கொள்வோம் என்று எதிர்ப் பார்த்துக் கொண்டு இருந்த நான் சற்று ஏமாந்து தான் போனேன். அவர் இன்று சொன்ன அனைத்தையும் நாங்கள் ஏற்கனவே பாடங்களில் படித்து இருந்தோம். என்னை அறியாமலே முகம் கொஞ்சம் வாடிப் போனது.

"என்ன ஆயிற்று" என்றார் பேராசிரியர்.

"இல்லை... இன்று நீங்கள் முக்கியமான விஷயம் எதையாவது சொல்லித் தருவீர்கள் என்று எண்ணி இருந்தேன்... ஆனால் நீங்கள் சொன்ன அனைத்து விஷயங்களும் எனக்கு ஏற்கனவே தெரியும் .." என்றேன்.

"அப்படி என்றால் நான் இன்று சொன்ன விஷயம் முக்கியமானதாக உனக்கு படவில்லையா...!!!" என்றார்.

"நான் அப்படி சொல்லவில்லை... ஆனாலும் நீங்கள் சொன்ன சோலைகள், நீர் நிலை ஆதாரங்கள் போல இது பெரிய விஷயமாக படவில்லை... அதான்..." என்றேன்.
சிரித்தார்.

"உனக்கு உண்மை ஒன்று தெரியுமா. உலகில் மிக முக்கியமான விஷயங்கள் அனைத்தும் சிறிய விஷயங்கள் தான். ஒன்று சொல், சோலைகள் எத்தனை இடங்களில் அழிக்கப் பட்டுக்கொண்டு இருக்கின்றன. அதே போல் எத்தனை இடங்களில் இயற்கை இந்த பிளாஸ்டிக் கவர்களால் அழிக்கப்பட்டுக்கொண்டு இருக்கின்றது." என்றார்.

நான் பதில் எதுவும் சொல்லாததால் அவரே தொடர்ந்தார் " சோலைகள் என்பன பெரிய விஷயங்கள்.... நிச்சயம் நாம் அவற்றை காக்க வேண்டும். ஆனால் அதற்கு முன் நாம் நம்முடைய வீட்டிலும் சரி நம் ஊரிலும் சரி இயற்கையை வளர விடாது அழித்துக் கொண்டு இருக்கும் இந்த சின்ன விஷயங்களையும் நீக்க வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே இயற்கையை உண்மையாக நாம் பேண முடியும். என்ன புரிந்ததா. இப்பொழுது போய் இந்த இடத்தை சுத்தம் செய்யும் வேலையை பார்ப்போமா!!!" என்று கூறி முடித்தார்.

நானும் என்னால் முடிந்த அளவிற்கு இயற்கையை மாசுபடுத்திக் கொண்டு இருக்கும் பொருட்களை நீக்குவதற்காக செல்லத் தொடங்கினேன்.

இத்துடன், இயற்கையைத் தேடி என்ற தலைப்பில் பேரிஜம் பற்றிய பதிவுகள் முடிந்தன. என்னால் முடிந்தவரை, நான் பெரிஜமைப் பற்றியும் சோலைகளைப் பற்றியும் அறிந்த சில விஷயங்களை பகிர்ந்து உள்ளேன்.

பேரிஜம் ஒரு அருமையான இடம். கொடைக்கானலுக்கு மேலே ஒரு 30 கி.மி தூரத்தில் இருக்கின்றது அந்த ஏரி. பொதுவாக காலை 9 மணியில் இருந்து மாலை 4 மணி வரை மட்டுமே சுற்றுலா பயணிகள் அனுமதிக்க படுவார்கள். நாங்கள் தங்கி இருந்தது போல காட்டுக்குள் தங்க வேண்டும் என்றால் அதற்காக சிறப்பு அனுமதி வன இலாகா அதிகாரிகளிடம் வாங்க வேண்டி இருக்கும்.

மலையையும் இயற்கையும் ரசிப்பவர்கள் நிச்சயம் பேரிஜமை ரசிப்பார்கள். குறிப்பாக ட்ரெக்கிங் (trekking) மீது ஆவல் உள்ளவர்கள் செல்ல வேண்டிய இடம்.

இந்த தலைப்பில் நான் எழுதிய முந்தைய பதிவுகள்,
சோலைகள்:
இயற்கையைத் தேடி - 2
சோலைகளும் கூட்டுக்குடும்பங்களும்:
 இயற்கையைத் தேடி-3
 **********************************************************************

எப்பொழுது உலகில் கடைசி மரம் சாய்கின்றதோ, எப்பொழுது கடைசி மீன் அழிகின்றதோ, கடைசி ஆறு வற்றுகின்றதோ அப்பொழுது தான் மனிதன் உணர்ந்து கொள்வான் - பணத்தை அவனால் உண்ண முடியாது என்று.
-ஒரு செவிந்தியப் பழமொழி:

6 கருத்துகள்:

இப்படி ஒரு இடம் இருப்பதே இன்றைக்குத்தான் தெரிகிறது.. அவசியம் போய் வருகிறோம் ..

தங்கள் பதிவிற்கு நன்றி செந்தில். உண்மையிலேயே பேரிஜம் நாம் கண்டு களிக்க வேண்டிய ஒரு இடம் தான். வாய்ப்பு கிடைக்கும் பொழுது நிச்சயம் போய் வாருங்கள்.

எந்த நாட்டில் எந்த ஊர் பக்கத்தில் இருக்கிறது

நல்ல சோலைப் பயணம்.

இந்த இடம், தமிழ்நாட்டில் உள்ளது ராம்ஜி. கொடைக்கானலுக்கு மேலே ஒரு 30 கி.மி தொலைவில் உள்ளது. மதுரையில் இருந்து பேருந்தில் செல்லலாம்.

உங்கள் பதிவிற்கு நன்றி மாதேவி அக்கா!!

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு